“ரஜினியின் நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டது தான்!”

சாதா திருடர்கள் மாட்டும்போது தப்புவதற்கு பயன்படுத்தும் உத்தி என்ன? மக்களோடு சேர்ந்து கொண்டு “திருடனைப் பிடி” என்று கத்துவார்கள், ஓடுவார்கள். மற்றவர்களைவிட வேகமாக ஓடுகிறானே, இவனல்லவோ அப்துல் கலாம் கனவு கண்ட, இயக்குநர் ஷங்கர் கிராபிக்ஸாக செய்து பார்த்த இந்தியக் குடிமகன் என்று மக்களும் அதை மெய்மறப்பார்கள், ஆதரிப்பார்கள்.

அம்பானி, அதானி, டாடா போன்றோர் ஸ்பெஷல் திருடர்கள் என்பதால் அவர்களெல்லாம் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தை இயக்குபவர்கள், வெளிப்படையாக பேச மாட்டார்கள். சினிமா உலகம் இன்னும் பழைய சென்டிமெண்டுகளில் முக்குளிப்பதால் அங்கே நட்சத்திரங்களுக்கு அறிவு கம்மி.

நவம்பர் 8 அறிவிப்பு வந்த உடனேயே, “புதிய இந்தியா பிறக்கட்டும், ஜெய் ஹிந்த்” என்று ரஜினி, மோடியின் கருப்புப் பண ஒழிப்பு போருக்கு முரசு கொட்டினார். ‘முரட்டுக்காளை’யில் துவங்கி ‘கபாலி’ வரை அவரது நட்சத்திர வாழ்க்கையே கள்ளக் கணக்கால் கட்டப்பட்டதுதான். திரையரங்க டிக்கெட்டிலிருந்து அவர் வாங்கும் ஊதியம் வரை கருப்பே பிரதானம். இது ஊரறிந்த உண்மை என்றாலும் அம்பானியை உழைத்து முன்னேறியவராக நம்பும் உலகம் இவரையும் உழைத்து சம்பாதித்தவராக நம்புகிறது.

நடிகர் சங்கத் தலைவர் விஷால், இடையில் தானும் ஒரு ரவுடிதான் என்று காட்டுவதற்கு சிறு நகரங்களில் உள்ள சி.டி விற்கும் கடைகள், கேபிள் டி.வி அலுவலகங்களுக்கு பவுன்சர்களுடன் படையெடுத்தார். தூங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களை தட்டி எழுப்பி, “புதிய படம் எடு, யார் ஓனர்” என்று அதிகார தோரணையுடன் மிரட்டுவார். பிறகு சி.டிக்களை அள்ளிக் கொண்டு செல்வார். அப்புறம் போலீசு வரும். தந்தியில் செய்தியும் வரும். இதெல்லாம் ஊழலுக்கு எதிரான போராட்டமாம். அதாவது திருட்டு வி.சி.டிக்கு எதிராக திரையுலகத்தை காப்பாற்ற போராடுகிறாராம்.

போகட்டும். நாமும் அதேபோல விஷால், சூர்யா, ரஜினி, கமல் வீடுகளுக்கு சென்று “வருமான வரி ரசீதை எடு, போன படத்துக்கு வாங்கிய தொகை எவ்வளவு, வங்கி புத்தகத்தை எடு, சொத்து பத்திரங்களை காட்டு” என்று கேட்கலாம். அதை சரிபார்த்து போலீசுக்கும் போகலாம். அதற்கு நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் விஷால் ஏற்பாடு செய்ய வேண்டும். இது கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டம்.

‘கபாலி’க்கு ரஜினி வாங்கியது எவ்வளவு என்று தாணுவுக்கு தெரியும். தாணுவோடு ஜாஸ் சினிமாஸ், சசிகலா, இறுதியில் அப்பல்லோ இரண்டாம் தளத்தில் இருக்கும் கடவுளுக்கும் தெரியும். கடவுளுக்குத் தெரிந்த உண்மை மனிதர்களுக்கு எப்படி தெரியும்?

‘கபாலி’க்கு முந்தைய படமான ‘லிங்கா’வும் அப்படித்தான் கள்ளப் பண வழியில் வசூல் செய்ய முயன்றது. அதை எதிர்பார்த்து வினியோகஸ்தர்கள் 200 கோடி ரூபாய்க்கு வாங்கினாலும் படம் படுத்துவிட்டது. பிறகு அவர்கள் பிச்சை போராட்டம் நடத்த இருந்தது தனிக்கதை. அந்த ‘லிங்கா’ திரைப்பட பாடல் விழாவில் இயக்குநர் அமீர், சேரன், வைரமுத்து போன்றோர் கலந்துகொண்டு முதுகு சொறிந்தனர்.

“காந்தியும் காமராஜரும் போல ரஜினி சார் இந்த நாட்டுக்கு நல்லது செய்யணும்” என்று இயக்குநர் சேரன் பேசினார். இதையே கொஞ்சம் விரிவுபடுத்தி அம்பேத்கரையும் சேர்த்தார்கள், ‘கபாலி’ படத்தை கொண்டாடிய அறிஞர்கள். ஒரு வேளை கருப்பு – வெள்ளை இரண்டிலும் காந்தி படம் இருப்பதாலும், காமராஜர் போல இமேஜ் பார்க்காமல் நரை தாடியோடு வெளியே வருகிறார் என்பதாகவும் சேரனை நாம் புரிந்து கொள்ளலாம். எப்படியோ கருப்பில் வாங்கினாலும் காந்தி காந்தி தானே?

இயக்குநர் அமீரோ அந்த விழாவில் “ரஜினியை தமிழகத்தின் முதலமைச்சராக தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று பேசினார். அம்மாவின் கோபத்தை கிளப்பிவிட்டு அண்ணனை ஒரு வழி செய்யலாம் என்று உள்குத்தோடு பேசினாரோ, தெரியவில்லை.

பரவாயில்லை, அதே அமீர் தற்போது கருப்பு பண விவகாரத்தில் ரஜினியை கேள்வி கேட்டிருக்கிறார். சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் அவர் கலந்துகொண்டு பேசியபோது,

“இந்த நாட்டில் எத்தனை அக்கிரமங்கள் நடந்திருக்கும்போது, எதற்குமே வாய் திறக்காத ரஜினிகாந்த், ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு மட்டும் வாய் திறக்க வேண்டிய அவசியம் என்ன? காரணம் நீண்ட கால கள்ள நட்பு. புதிய இந்தியா பிறந்துவிட்டது எனச் சொல்கிறார்.

புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று சொல்கிறீர்களே, பழைய இந்தியாவில் ‘கபாலி’ என்ற ஒரு படம் வெளியானதே, அதற்கு திரையரங்க டிக்கெட் விலை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்தார்களா? உங்களுடைய சம்பளம் என்ன? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன? அத்தனையும் கணக்கில் வந்திருக்கிறது என யாராவது காட்ட முடியுமா?

இப்படி இருக்கும்போது கறுப்புப் பணத்தின் அளவு என்பது என்ன இங்கே? எதை வைத்து முடிவு செய்கிறீர்கள்? 150 ரூபாய் டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது…”

என்று பொங்கியிருக்கிறார்.

‘லிங்கா’ படத்திற்கு பிறகு ரஜினி ஏதும் தேதி தருவதாக ஏமாற்றினாரா, தெரியவில்லை. இல்லை, ‘கபாலி’க்கு முன்னர் ரஜினி கருப்பில் வாங்குவது தெரியாமல் இருந்தாரா? அல்லது ‘நீயே முழுத் திருடன், நீ போய் கருப்பு பண ஒழிப்பை ஆதரிக்கலாமா’ என்று கேட்டாரா?

எப்படியோ, அவர் எந்த நோக்கில் கேட்டாலும் கேள்வியில் உண்மை இருக்கிறது. அதை பரபரப்புச் செய்திகளாக வெளியிட்ட ஊடகங்கள் யாவும் அதே கேள்வியை கேட்கவில்லை. மோடியின் அறிவிப்பு நாடகத்தை போற்றிய ஊடகங்கள், ரஜினி முதலான திரைமாந்தர்களின் கருப்புப் பணத்தை கேட்காதது அதிசயமல்ல. “ஊழலை ஒழிக்க வந்த மகாத்மா, பாகுபலி” என்று அட்டைப் படங்களில் போட்டுத் தாக்கும் குமுதம் இதழ் அதே ‘பாகுபலி’யின் கருப்பு பக்கத்தையோ, ‘கபாலி’யின் திருட்டுக் கணக்கையோ கண்டுகொள்ளாது.

ரஜினி நடிக்கும் எந்திரனின் இரண்டாம் பாகமான “2.0” படத்தின் “பர்ஸ்ட் லுக் விழா” மும்பையில் பிரம்மாண்டமாய் நடக்கிறதாம். இதை யூ டியூபி-லும், படத்தை தயாரிக்கும் லைக்கா கம்பெனியின் செயலி மூலம் நேரலையாகவும் பார்க்கலாமாம். நிகழ்ச்சியை பாலிவுட்டின் இயக்குநர்-தயாரிப்பாளர் கரண் ஜோகர் வழங்குகிறாராம். இதை தினமலர், தி இந்து, விகடன், தந்தி, தினமணி அனைத்தும் வெளியிட்டிருக்கின்றன. ‘இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான்’ என அடைமொழியோடு சேர்த்து போடும் இந்த ஊடகங்கள் ‘சூப்பர் ஸ்டார் என்றாலே கருப்புப் பணம்தான்’ என்பதை வெளியிடுவதில் என்ன தயக்கம்?

‘கபாலி’ என்ற அடித்தட்டு மக்களின் பெயரை பயன்படுத்தியதையும், அதை ‘கபாலி’ எனும் சிவனின் பெயராக ரஜினி ஏற்றதையும் சாதனையாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித், கருப்புப் பணம் குறித்து என்ன சொல்வார்?

ஒருவேளை ‘கருப்புப் பணம், வெள்ளைப் பணம் என்ற பெயர்கள் கருப்பாக இருக்கும் மக்களை இழிவுபடுத்துவதாகும், இதே போன்று வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இருண்ட காலம் என்று பழிக்கிறார்கள்’ என்று புதிய தத்துவங்களை அள்ளி விடலாம். இதை ஏற்கனவே நியூஸ் 18 காலை நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்திருக்கிறார். அதாவது கள்ளப் பணம், கள்ள நோட்டு என்று பேசுவதை இதற்கு முன்பாகவே அவர் பயன்படுத்துகிறாராம். பொலிட்டகலி கரெக்ட் என்று வார்த்தைகளை பிடித்து தொங்கும் இவர்கள் பொருட் பிழை குறித்து அஞ்சுவதில்லை.

கம்யூனிசம் மட்டுமல்ல, விபச்சார பகுதிகூட சிவப்போடு அடையாளப்படுத்தப்படுகிறது. சாலை சந்திப்பு ஒழுங்கமைப்பில் கூட சிவப்பே அபாயத்திற்கும், வண்டிகள் நிற்பதற்கும் காட்டப்படுகிறது. இதனால் சிவப்பை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று நாம் வெட்டி ஆய்வில் இறங்கலாமா? உண்மையிலேயே கருப்பு பணம் என்பது அத்தகைய நிறவெறியில் இருந்து தோன்றியதாகவே இருக்கட்டும். முதலில் மோடி, அதானி, அம்பானிகளின் கருப்புப் பண கொள்ளையை ஒழித்துவிட்டு பிறகு நாம் வார்த்தையை மாற்றலாம். மாறாக இதை மாபெரும் அறவியல் மீறலாக பேசுவது இறுதியில் கருப்புப் பண முதலாளிகளுக்கே ஆதாயமாக போகிறது.

‘கபாலி’ படத்திலும் அதுதான் நடந்தது. ஜெயா – சசி கும்பலின் கொள்ளை மற்றும் பார்ப்பனியத்தின் பக்தனான ரஜினியை குறி வைத்து பேசுவதற்கு பதில் சாதி வெறியர்களுக்கு எதிரான அடையாளமாக அதுவும் பி.எம்.டபிள்யூ காரில் போகும் தாதாவாக ரஜினியை முன்னிறுத்தினார்கள். ‘கபாலி’யை போராளி என்று போற்றுவதும், ரஜினியை ஒரு கருப்புப் பண நாயகன் என்று பேசாமல் அமைதி காப்பதும் வேறு வேறு அல்ல.

ரஜனியின் யோக்கியதையை விடுதலை சிறுத்தைகளின் கூட்டத்தில் கேள்வி கேட்டதன் மூலம் கபாலி படத்தில் சறுக்கி விழுந்த சிறுத்தைகளுக்கு கொஞ்சம் வெட்கம் வந்திருக்கலாம். எனினும் திருமாவளவனோ, இல்லை இயக்குநர் ரஞ்சித்தோ, இல்லை ஊடகங்களோ கேட்காத கேள்வியை தைரியமாக எழுப்பியிருக்கிறார் அமீர். அந்த வகையில் அவருக்கு பாராட்டுக்கள்!

ரஜினி போன்று பாலிவுட் முதலைகள் பலரும் மோடியை ஆதரித்திருக்கின்றனர். அங்கும் இதே நிலைதான். சினிமாவில் கருப்பு பணத்தை நம்பி வாழ்பவர்கள்தான் சினிமா கதைகளில் ஊழலை எதிர்த்து பேசுகிறார்கள். அப்படித்தான் அதானி குழுமத்தால் முன்னிறுத்தப்படும் மோடியும் கருப்புப் பண ஒழிப்பை பேசுகிறார்.

நட்சத்திரங்களின் கருப்பு பக்கத்தை மறைக்கும் கயமைத்தனத்தை ஒழிக்கும் வரை கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியாது.

நன்றி: வினவு டாட்காம்