ஐ, நோபடி – விமர்சனம்
நடிப்பு: பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், மதுபால், சங்கர் ராமகிருஷ்ணன், பேபி நட்சத்திரா மற்றும் பலர்
இயக்கம்: நிசாம் பஷீர்
எழுத்து: சமீர் அப்துல்
ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்
படத்தொகுப்பு: ரமீஸ் எம்.பி
இசை: ஜேக்ஸ் பிஜாய்
கலை இயக்கம்: அர்ஷத் நக்கோத்
ஸ்டண்ட்: யானிக் பென், கலை கிங்சன் & அமித் ஜாலி பாஸ்டின்
தயாரிப்பு: பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் & இ4 எக்ஸ்பெரிமெண்ட்ஸ்
தயாரிப்பாளர்: சுப்ரியா மேனன், முகேஷ் ஆர் மேத்தா, சி.வி.சாரதி
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
படம் துவங்குபோது, நாயகன் ராஜீவன் (பிருத்விராஜ் சுகுமாரன்), கைத்துப்பாக்கியை தன் இடுப்பின் பின்புறம் சொருகியபடி, சாலையைக் கடந்து வங்கிக்குள் செல்கிறார். சற்று நேரத்தில், அந்த வங்கியில் கைவரிசை காட்டிய முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள், கொள்ளையடித்த சுமார் 17 கோடி பணத்தையும், பிணைக்கைதியாக ராஜீவனையும் இழுத்துக்கொண்டு வங்கியை விட்டு வெளியேறி, தயாராக இருந்த காரில் ஏறி சிட்டாய் பறக்கிறார்கள்.
ஆபத்தைக் கடந்துவிட்டதாக கொள்ளையர்கள் கருதும் ஓரிடத்தில், பிணைக்கைதியான ராஜீவனை அவர்கள் விடுவிக்கிறார்கள். அப்போது ஒரு கொள்ளையனின் அடையாள அட்டை தற்செயலாக ராஜீவன் கையில் சிக்குகிறது. ஆனால், அப்போது நிகழும் கோர விபத்தில் சிக்கி மூன்று கொள்ளையர்களும் உயிரிழக்கிறார்கள்.
ராஜீவனின் கையில் சிக்கிய அடையாள அட்டையின் அடிப்படையில் கொள்ளையர்கள் யார் என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறது. எனினும், மூன்று கொள்ளையர்களும் விபத்தில் இறந்துவிட்டதால், அவர்களைத் தேடும் பணியை நிறுத்திவிட்டு, அவர்கள் வங்கியில் கொள்ளையடித்த சுமார் 17 கோடி பணம் எங்கே, யாரிடம் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து மீட்க போலீஸ் தேடுதல் வேட்டையில் இறங்குகிறது. எனினும், எந்த துப்பும் கிடைக்காமல் திணறுகிறது போலீஸ்.

ஒரு கட்டத்தில் போலீஸின் சந்தேகம் ராஜீவன் பக்கம் திரும்புகிறது. கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் கணக்கு எதுவும் வைத்திராத ராஜீவன், அந்த வங்கிக்குச் சென்றது ஏன்? வங்கிக்குள் அவர் எதுவும் செய்யாமல் வெகுநேரம் வெறுமனே பெஞ்சில் அமர்ந்திருந்தது ஏன்? என்ற கேள்விகளை எழுப்பும் போலீஸ், கொள்ளையில் ராஜீவனுக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவரிடம் இருக்கலாம் என்றும் நம்புகிறது.
போலீஸாரின் இந்த ஐயங்களை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் கட்டுக்கதைகள் எழுதி, செய்திகளாக வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ராஜீவனுக்கு மட்டுமின்றி அவரது மனைவி மீரா (பார்வதி திருவோத்து) மற்றும் ஜியா (பேபி நட்சத்திரா) உள்ளிட்ட அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோருக்கும் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இச்சிக்கல்களிலிருந்து மீள்வதற்கு ராஜீவன் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் கூடுதலாக புதுப்புது சிக்கல்களை உருவாக்குகின்றன.
ராஜீவனும், அவரது குடும்பத்தினரும் இச்சிக்கல்களில் இருந்து இறுதியில் எப்படி மீண்டனர்? கொள்ளையடிக்கப்பட்ட வங்கிப்பணம் சுமார் 17 கோடி எங்கே போனது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘ஐ, நோபடி’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் ராஜீவனாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்திருக்கிறார். ஆரம்பக் காட்சியில் கைத்துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைவது, பின்னர் கொள்ளையர்களின் பிணைக் கைதியாக வீங்கி மூடிய கண்ணோடு வெளியே வருவது என்பன போன்ற புதிரான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். இவர் நாயகனா? எதிர்நாயகனா? என்ற கேள்வியை படத்தின் இறுதி வரை தக்க வைத்திருப்பது இவரது நடிப்பின் சிறப்பு. மேலும், கமர்ஷியலான அதிரடி ஆக்ஷன் காட்சிகளை மிகைப்படுத்துதல் ஏதுமின்றி, இயல்பாக, நம்பும்படியாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்.

நாயகனின் மனைவி மீராவாக பார்வதி திருவோத்து நடித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக வரும் அவர், தனது இயல்பான உடல்மொழி மற்றும் துல்லியமான முகபாவனைகள் மூலம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் மனங்களில் இடம் பிடித்து விடுகிறார்.
போலீஸ் அனஸ்ஸாக ஹக்கிம் ஷாஜகான் நடித்திருக்கிறார். அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அவர் செய்யும் வேலைகள் வில்லத்தனமாக மிரட்டியிருக்கிறது.
ஜேக்கப் கதாபாத்திரத்தில் வரும் அசோகன், முதலமைச்சராக வரும் விஜயராகவன், குற்றப்பிரிவு அதிகாரி சி.ஐ ஜோமோனாக வரும் மதுபால், டிஎஸ்பி அஜித்தாக வரும் சங்கர் ராமகிருஷ்ணன், நாயகனின் மூத்த மகள் ஜியாவாக வரும் பேபி நட்சத்திரா, இளைய மகளாக வரும் சிறுமி உள்ளிட்ட அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சமீர் அப்துல். வங்கிக் கொள்ளையை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு, கொள்ளைக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சாமானியனை அக்கொள்ளைச் சம்பவத்தில் சிக்க வைத்து, அடுத்தடுத்து சுவாரஸ்யமான திருப்பங்களை அமைத்து தன் எழுத்தாற்றலை நயம்பட வெளிப்படுத்தியிருக்கிறார் சமீர் அப்துல்.
இதை இயக்கியிருக்கிறார் இயக்குநர் நிசாம் பஷீர். கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து அவர்களிடம் திறம்பட வேலை வாங்கி, படத்தை போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பார்வையாளர்களை பதற்றத்திலேயே வைத்திருக்க முயன்றிருக்கும் இயக்குநர், அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஜேக்ஸ் பிஜாயின் இசை, தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, ரமீஸ் எம்.பியின் படத்தொகுப்பு, அர்ஷத் நக்கோத்தின் கலை இயக்கம், யானிக் பென், கலை கிங்சன் & அமித் ஜாலி பாஸ்டின் ஆகியோரின் ஸ்டண்ட் வடிவமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் நேர்த்தியான பங்களிப்பு படத்துக்கு பலம்.
’ஐ, நோபடி’ – வித்தியாசமான சஸ்பென்ஸோடு கூடிய விறுவிறுப்பான கிரைம் திரில்லர்; பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 4/5
