சிங் கீதம் – விமர்சனம்

நடிப்பு: அஹில்யா பம்ரூ, அயான், ஷாலினி கொண்டேபூடி, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன், சிவ நாராயணா, பானர்ஜி, வாம்சி மற்றும் பலர்

இயக்கம்: சிங்கிதம் ஸ்ரீனிவாச ராவ்

எழுத்து: சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ், கவுதமி சல்லகுல்லா, ஷஷாங்க் சிந்தலபூடி & ரத்னா ஸ்ரீகர், நந்தகிஷோர் ஈமானி, ராகுல் வி ராஜேஷ்வர்

ஒளிப்பதிவு: அங்கூர் சி

இசை: தேவி ஸ்ரீ பிரசாத்

கலை இயக்கம்: அரவிந்த் மூலே

ஆடை வடிவமைப்பு: அஜய் குமார் நம்பள்ளா

தயாரிப்பு: ’வைஜெயந்தி மூவிஸ்’ நாக் அஸ்வின்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

குபேரபுரம் என்றொரு கற்பனையான ஊர். குபேரன் என்ற தெய்வத்தின் பெரிய சிலை இருப்பதால் இந்த ஊருக்கு அந்தப்பெயர். இந்த ஊரில் தங்கச் சுரங்கம் இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் பேராசையாலும் ஆக்கிரமிப்பாலும் அந்த ஊரின் மொத்த இயற்கையும் அழிக்கப்பட்டு, வறண்ட பொட்டல் வெளியாக மாற்றப்பட்டு விட்ட நிலத்தில், ஒரேயொரு மரம் மட்டுமே மிச்சம் இருக்கிறது. அந்த மரத்தை தனது தாயாக கருதும் நாயகி கௌரி (அஹில்யா பம்ரூ), அந்த மரத்திலேயே வசித்துக்கொண்டு, அம்மரத்தைப் பாதுகாத்து வருகிறார்.

சிறையிலிருந்து தண்டனைக்காலம் முடிந்து வெளியே வரும் நாயகன் பிரதாப் (அயான்), ‘தங்கச்சுரங்க அதிபரின் மகன் நான்’ என்று கூறிக்கொண்டு குபேரபுரத்துக்குள் நுழைகிறர். அவரும் நாயகி கௌரியும் நெருங்கிப் பழகுகிறார்கள்.

இந்நிலையில், தங்கம் தோண்டி எடுப்பதற்காக, கௌரியின் தாயான ஒற்றை மரம் வெட்டி சாய்க்கப்படுகிறது. அப்போது, ஊரில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த எல்லோரும், தங்கள் பேச்சுத் திறனை இழந்து, பாட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒருவரோடு ஒருவர் நடத்தும் உரையாடலே பாடலாக இருக்கிறது. அவர்களின் உணர்ச்சிகளெல்லாம் பாடலாகவே வெளிப்படுகிறது. இப்படி பேசும் ஆற்றல் இழந்து எல்லாமே பாடல்மயம் ஆனதற்கு குபேர தெய்வம் விடுத்த சாபம் தான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

இதன்பின் என்னவெல்லாம் நடந்தது? மக்கள் எப்படி தங்கள் பேராசையை உணர்ந்து, கைவிட்டு, இயற்கையோடு இயைந்து வாழ்ந்து, சாப விமோசனம் பெற்றார்கள்? என்பது ‘சிங் கீதம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் பிரதாப்பாக அயான் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சுயநலப் பேர்வழியாக இருந்து, பின்னர் மனம் மாறி இயற்கையை நேசிக்கும் நல்லுள்ளம் கொண்ட மனிதன் ஆகும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

நாயகி கௌரியாக அஹில்யா பம்ரூ நடித்திருக்கிறார். இயற்கையைப் பேணிக் காக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, இயற்கையாக வளர்ந்த ஒரு மரத்தின் மடியிலேயே வசித்து வரும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

இரக்கமற்ற கார்ப்பரேட் பெண்மணியாக ரேணு கதாபாத்திரத்தில் ஷாலினி கொண்டேபூடி நடித்திருக்கிறார். வழக்கம் போல் இல்லாமல், வழக்கத்துக்கு மாறான நடிப்பை வெளிப்படுத்தி, கவனம் ஈர்க்கிறார்.

நாயகியின் பாட்டியாக வரும் துளசி, பிரம்மையாவாக வரும் பானர்ஜி, மேற்பார்வையாளராக வரும் சிவநாராயணா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

எதிர்பாராத விதத்தில், சிறப்புத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா, நிவேதா பெத்துராஜ், ராகுல் ரவீந்திரன் ஆகியோர் தோன்றி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார்கள்.

இப்படத்தை பழம்பெரும் இயக்குநரான 94 வயது சிங்கிதம் சீனிவாச ராவோடு சேர்ந்து கவுதமி சல்லகுல்லா, ஷஷாங்க் சிந்தலபூடி & ரத்னா ஸ்ரீகர், நந்தகிஷோர் ஈமானி, ராகுல் வி ராஜேஷ்வர் உள்ளிட்டோர் எழுத, சிங்கிதம் சீனிவாச ராவ் உயிரோட்டத்துடன் ரசிக்கத் தக்க விதத்தில் இயக்கியிருக்கிறார். தமிழில் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கியிருக்கும் இவருக்கு இந்த ‘சிங் கீதம்’ 61-வது திரைப்படம். இயற்கையை அழிக்கும் கார்ப்பரேட்டுகளின் பேராசைக்கு எதிரான இந்த படத்தை பெருமளவுக்கு வசனங்கள் இல்லாமல், வசனங்களை மெட்டமைத்துப் பாடலாக்கும் புதிய ஐடியாவில் எடுத்திருக்கிறார். புதிய ஐடியா வரவேற்கத்தக்கது தான். அதே நேரத்தில், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சிங்கிதம் சீனிவாச ராவின் இந்த புதிய ஐடியாவுக்கும் பொருந்தும் தானே!

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, அங்கூர்.சியின் ஒளிப்பதிவு, அரவிந்த் மூலேவின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.

‘சிங் கீதம்’ – வித்தியாசமான படங்களை விரும்பும் ரசிகர்கள் இதை பார்த்து மகிழலாம்.

ரேட்டிங்: 3/5