“துணிச்சலான படம் ‘தரமணி”: ரஜினிகாந்த் பாராட்டு!

தரமான படங்களை தவறாமல் பார்த்து, அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ, போனிலோ மனதார பாராட்டும் வழக்கம்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கடந்த வாரம் ரிலீசான ‘தரமணி’ படத்தை பார்த்த்விட்டு, அதன் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது குறித்து ஜே.சதீஷ் குமார் கூறுகையில், ”இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சரியத்தில் உறைந்தே போனேன். ‘தரமணி’ ஒரு துணிச்சலான படம் (Bold film). என்று கூறினார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாக பாராட்டினார். படத்தின் வணிக வெற்றியைப் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறியபொழுது கேட்டு மகிழ்ந்தார்.

‘தரமணி’ மூலம்  நடிப்பில் காலடி எடுத்து வைத்திருக்கும் எனது நடிப்பையும்  எனது கதாபாத்திரத்தை பற்றியும் விவரமாக பேசி பாராட்டினார்.  இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள்  மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும்  பெரும் ஊக்கமாக உள்ளது” என்றார்.