கரு.பழனியப்பன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் சமகால அரசியல் படம்!

மக்கள் மற்றும் சினிமா விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை மகிழ்விக்க மட்டும் இன்றி சிந்திக்கவும் வைக்கும் படத்தை எழுதி இயக்குவது ஒரு அரிய கலையாகும். இக்கலையில் கைதேர்ந்த  ஒரு சில இயக்குனர்களில் கரு பழனியப்பன் ஒருவர். தனது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறுபவர் அவர். அதன் மூலம் சமூக ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர். இவர் தனது இயக்கத்தில்  அடுத்த படத்தை துவக்கவுள்ளார்.

பெயரிடப்படாத  இந்த படம்  சமகால அரசியலை அலசும் படமாகும். தரமான மற்றும் வித்தியாசமான கதைகளை தேடி கண்டுபிடித்து நடிக்கும் நடிகர் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெற்றி பெற்ற  ‘மரகத நாணயம்’ படத்தை தயாரித்த ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’  சார்பில் டில்லி பாபு இப்படத்தை தயாரிக்கவுள்ளார். கதாநாயகி உள்ளிட்ட நடிகர் – நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே அருள் நிதி நடிப்பில் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, விஷ்ணு விஷால் நடிப்பில்  ‘ராட்சஸன்’ ஆகிய படங்களை  ‘ஆக்ஸிஸ் பிலிம் பேக்டரி’  தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.