பிரமாண்டமாக நடந்த ‘இதயம் முரளி’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!

Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது.

இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பிரமாண்டமான இந்த நன்றி அறிவிப்பு நிகழ்வில்

எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர் கிருஷ்ணா பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படம் எங்களுக்கு கிட்டத்தட்ட ஒரு வருட பயணமாக இருந்தது. ஒரு படத்தை இயக்குவதும், தயாரிப்பதும் தனித்தனியாகவே பெரிய சவால். ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிய இயக்குநரும் தயாரிப்பாளருமானஆகாஷ் பாஸ்கரனுக்கு முதலில் என் வாழ்த்துகள்.
இந்தப் படம் பலருக்கும் நாஸ்டால்ஜியா உணர்வைக்கொடுத்ததற்கு காரணம், இயக்குநர் தனது வாழ்க்கையில் பார்த்து ரசித்த சிறிய சிறிய விஷயங்களைக் கூட மிக நுணுக்கமாகதிரையில் பதிவு செய்ததுதான். ஒரு கேசட், ஒரு கோக் கேன்போன்ற பொருட்களைக் கூட எந்த இடத்தில் வைக்க வேண்டும், எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய மைக்ரோ டீட்டெய்லிங் இந்தப் படத்தின் பெரிய பலம். அந்த காட்சிகளை அழகாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்கள் மனோஜ் சார், சாய் சார் ஆகியோரின்பங்களிப்பு மிக முக்கியமானது. அதேபோல், தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் தனது பிஸியான வேலையிலும்இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்.

இசையமைப்பாளர் தமன் சார் பெரும்பாலும் மாஸ் படங்களுக்கு இசையமைப்பவர். ஆனால் ‘ஈரம்’, ‘ஆளவந்தான்’ போன்ற உணர்வுப்பூர்வமான படங்களைப் போலவே ‘இதயம் முரளி’ போன்ற படங்களுக்கும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

அதர்வா சார் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த 15ஆண்டுகளாக அவருடைய தோற்றம், உடற்தகுதி, நடிப்பு என அனைத்தையும் ஒரே ஒழுக்கத்துடன் பராமரித்து வருகிறார். அது எங்கள் குழுவினருக்கும் ஒரு பெரிய உத்வேகமாக இருக்கிறது.நட்டி சார் உடன் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய அவரது பயணம் குறித்து அவர் பகிர்ந்த அனுபவங்கள் எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்தன.

ரக்ஷன், ஏஞ்சல், டிராவிட், சுதாகர் உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்பு தளத்தை ஒரு கல்லூரி வளாகம் போல கலகலப்பாகமாற்றிவிட்டார்கள். படப்பிடிப்பு முழுவதும் மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நடந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற படப்பிடிப்பின்‘ப்ளூப்பர்ஸ்’ வீடியோவையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், எடிட்டர் பிரதீப் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக சுதாகர் திரையரங்குகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான இடத்தை அவர் நிச்சயம் நிரப்புவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இந்தப் படத்தை மக்களிடம் இயல்பாகவும் நேர்மையாகவும்கொண்டு சென்ற பத்திரிகை, மீடியா, நியூ மீடியா நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. எங்கள் தொழில்நுட்பக் குழு, விநியோகஸ்தர்கள், Think Music, Netflix, போஸ்ட் புரொடக்ஷன் குழு, உதவி இயக்குநர்கள், மேலாண்மை குழு என அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தை வெற்றிப்படமாகமாற்றிய ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றி.”

திங் மியூசிக் நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். ‘இதயம் முரளி’ திரைப்படத்துடன்இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த நிகழ்வுக்கு‘முரளி ரீயூனியன்’ என்ற டேக்லைன் வைத்திருப்பதும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை முதன்முதலாக சந்தித்தபோது, இந்தப் படத்தின் பாடல்களின் ஸ்கிராட்ச் டிராக்குகளை மட்டும் கேட்க வைத்தார். அப்போது இசையமைப்பாளர் யார் என்பதைக் கூட சொல்லவில்லை. ஆனால் அந்த ட்யூன்கள் மிகவும் புத்துணர்ச்சியாகவும் வித்தியாசமாகவும் இருந்தன. பின்னர் இசையமைப்பாளர் தமன் என்று தெரிந்தவுடன் எனக்கு ஒரு இனிய நாஸ்டால்ஜிக் உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் தமனின் முதல் படத்தை திங் மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது பல படங்களில் அறிவிக்கப்படும் அனைத்து பாடல்களும் இறுதியில் படத்தில் இடம்பெறுவதில்லை. ஆனால் இயக்குநர் ஆகாஷ் ஆரம்பத்திலேயே கொடுத்த வாக்குறுதியின்படிஏழு பாடல்களையும் முழுமையாக படத்தில்பயன்படுத்தியிருக்கிறார். அதையும் மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பது இந்த ஆல்பத்தின் பெரிய பலம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முழுமையான இசை ஆல்பத்தை‘இதயம் முரளி’ மூலம் பார்க்கிறோம். இந்த ஆண்டு அதிகம் ஸ்ட்ரீம்செய்யப்படும் தமிழ் திரைப்பட இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இசையமைப்பாளர் தமன் இந்த ஆல்பத்திற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். படம் தொடங்குவதற்கு முன்பே ஸ்கிராட்ச் டிராக்குகளில் இருந்து பல மாதங்கள் உழைத்து இந்த இசையை உருவாக்கியிருக்கிறார். அதேபோல் பாடலாசிரியர் விவேக் மற்றும் ஆதேஷ் கிருஷ்ணா ஆகியோரும்சிறப்பான வரிகளை எழுதியுள்ளனர். இந்த ஆல்பம் ஒரு முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது.

திங் மியூசிக் நிறுவனம் பல அறிமுக இயக்குநர்களின் முதல் படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. அந்த வரிசையில் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனின் அறிமுகப் படமும்இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதர்வாவுடனும் இது ஒரு இனிய நினைவு. அவரது முதல் திரைப்படமான ‘பாணா காத்தாடி’யின் இசையையும் திங்மியூசிக் நிறுவனம்தான் வெளியிட்டது. அதனால் இந்தப் படம் எங்களுக்கு உண்மையிலேயே ஒரு ‘ரீயூனியன்’ உணர்வைக்கொடுக்கிறது.

நட்டி சார் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். அதேபோல் அதர்வாவின் நண்பர்களாக நடித்த ரக்ஷன், டிராவிட், ஏஞ்சல் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

எழுத்தாளர் ரமணகிரிவாசன் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் மயிலந்திரனுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அவர்தான் என்னை இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனிடம் அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆகாஷுக்கும் என் நன்றி. அதைவிட முக்கியமாக, இந்தப்படத்தில் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக மிக நெருக்கமாக பணியாற்றிய பிரவீனுக்கு நான் தனியாக நன்றி சொல்ல வேண்டும்.
இந்த ஒன்றரை ஆண்டு பயணத்தில், வசனங்கள் குறித்து பிரவீன்என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். பொதுவாக பெரிய படங்களில் பக்கக்கணக்கில் வசனங்கள்எழுதுவோம். ஆனால் இந்தப் படத்தில் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் எழுதினாலும், அதிலிருந்து ஐந்து வார்த்தைகள் மட்டும் திரையில் வந்தால்கூட அது கதைக்கு தேவையானதாக இருக்க வேண்டும் என்பதில் இயக்குநர் மிகவும் தெளிவாக இருந்தார்.

நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோதே தொடர்ந்து விவாதிக்கப்பட்ட ஒரு கேள்வி, ‘நாயகன் ஏன் தனது காதலை சொல்லவில்லை?’ என்பதுதான். ஒன்றரை ஆண்டுகளாக அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடிக்கொண்டே இருந்தோம். படம் வெளியாகும் தருவாயில், குறைந்தபட்சம் டிரெய்லரிலாவதுஅதற்கான காரணம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம்.
பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு, இறுதியில் ஆகாஷ்ஏற்றுக்கொண்ட வசனம், ‘காதலை சொல்ல முடியவில்லை… அதை ஏன் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தையும் சொல்ல முடியவில்லை’ என்பதுதான். அந்த ஒரு வசனமே இந்தக்கதையின் உணர்வையும், ‘இதயம் முரளி’ என்ற தலைப்பின்சாரத்தையும் முழுமையாக வெளிப்படுத்தியது.

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்னால் இருந்த மிகப் பெரிய காரணம், படக்குழுவின் ஒற்றுமையும் நட்பும்தான். ஒரே வகுப்பில் படித்த நான்கு நண்பர்கள்—இயக்குநர், ஒளிப்பதிவாளர், இணை இயக்குநர், இணை எழுத்தாளர்—அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு தளத்திலும், கதை விவாதங்களிலும் ஒரு அற்புதமான பாஸிடிவ் ஆற்றல் இருந்தது.

ஆகாஷுடன் பல விஷயங்களில் வாதிட்டிருக்கிறோம், திறந்த மனதுடன் விவாதித்திருக்கிறோம். ஆனால் அந்த எல்லா விவாதங்களும் இறுதியில் இந்தப் படத்தின் வெற்றிக்கேவழிவகுத்துள்ளன. இன்று இந்த வெற்றியைப் பார்க்கும்போது, உங்களைப் போல நானும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த வெற்றிப் பயணம் தொடர்ந்து நீடிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

பாடலாசிரியர் ஆதேஷ் கிருஷ்ணா பேசியதவது..,
‘இதயம் முரளி’ போன்ற அழகான திரைப்படத்திலும், அதில் இடம்பெற்ற அற்புதமான பாடலிலும் எனக்கு வாய்ப்பு வழங்கியஇயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் சாருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்தப்பயணத்தில் எப்போதும் உறுதுணையாக இருந்த திங் மியூசிக்நிறுவனத்திற்கும், மகேசன் மற்றும் சந்தோஷ் சாருக்கும் என் நன்றி.

இசையமைப்பாளர் தமன் சாருடன் பணியாற்றியது எனக்கு மிகவும் இனிமையான அனுபவம். அவர் ஒரு இசையமைப்பாளர் மட்டுமல்ல, மிகவும் ஜாலியாக அண்ணன் போல பழகுபவர். அவருடன் பணியாற்றிய ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்தேன். குறிப்பாக ‘வாமா வாமா’ பாடலுக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அந்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து இதேபோல் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘இதயம் முரளி’ திரைப்படத்தின் முழு நடிகர், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் வாழ்த்துகள். நன்றி.”

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாபேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். நாங்கள் எல்லோரும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனை நகைச்சுவையாக ‘ஹெட்மாஸ்டர்’ என்று அழைப்போம். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. 2018-ம்ஆண்டிலிருந்தே இந்தக் கதையை நான் அறிவேன். அன்றிலிருந்து இன்று வரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து போராடிக்கொண்டே இருந்தார். ஆகாஷ் மிகவும் அமைதியான, வெகுளியான மனிதர். அந்த அளவுக்கு வெகுளியானவர் என்றாலும், தனது கனவை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல், இறுதியில் தானே தயாரிப்பாளராக மாறி இந்தப் படத்தை உருவாக்கினார். 2018-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ‘ஒரு நல்ல தயாரிப்பாளர், ஒரு சரியான இசையமைப்பாளர் கிடைத்தால் இந்தப் படத்தை ஆரம்பிப்போம்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். பல ஆண்டுகள் காத்திருந்தோம். இன்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள், முன்பு தவறவிட்டவர்கள் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

ஒரு நல்ல இசையமைப்பாளர் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தப் படத்தின் மூலம் உணர்ந்தோம். தமன் இந்தத்திரைப்படத்தில் இணைந்த பிறகுதான் அனைத்தும் வேகமாக முன்னேறியது. அவரிடம் இசை பெறுவது எவ்வளவு கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் அவர் அவ்வளவு பிஸி. ஆனால் அவர் இணைந்தது இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. குறிப்பாக தமன் இசையமைத்த பாடல்கள்திரையரங்குகளில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றுள்ளன.

இந்தப் படத்தை ஆகாஷ் தயாரிக்க வேண்டும் என்று அதிகமாக வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். அமெரிக்காவில் புரொமோஷூட் எடுத்தபோது, பெரிய நிறுவனங்களுடன் பணிபுரிந்தஅனுபவத்தில் ஒரு காதல் கதைக்கு அவர்கள் கொடுத்த முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. அப்போது, ‘நீங்களே தயாரிப்பாளராக இருந்தால்தான் நினைத்தபடி படத்தைஉருவாக்க முடியும்’ என்று அவரிடம் கூறினேன். அந்த முடிவுதான்இன்று இந்த வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

இன்று திரைப்படத் தயாரிப்பில் பெரும்பாலான பட்ஜெட் நடிகர்களின் சம்பளத்திற்கே செல்கிறது. ஆனால் ஒரு நல்ல கதைக்கு தேவையான தயாரிப்பு தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவை ஆகாஷ் எடுத்தார். அது பாராட்டப்பட வேண்டிய விஷயம். புதிய தயாரிப்பாளர்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாகஇருக்கும். இந்தப் படத்திற்காக பல இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்டன. சில காட்சிகள் சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அதற்காக எந்த சமரசமும்செய்யாமல் செலவு செய்து உருவாக்கப்பட்டது. இப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்கள் அதிகம் வர வேண்டும் என்பதே என் விருப்பம்.

அதர்வாவுடன் இதற்கு முன்பும் ஒரு இசை ஆல்பத்தில் பணியாற்றியிருக்கிறேன். அப்போதே அவர் போன்ற திறமையான நடிகருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று ‘இதயம் முரளி’ அந்த வெற்றியை அவருக்கு கொடுத்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த வெற்றி அவருக்குக் கிடைக்க வேண்டியதுதான்.

படத்தின் நாயகிகள் இருவரும் ஆரம்பத்திலிருந்தே மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேறு படங்களிலும் வளர்ச்சி பெற்றாலும், இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். திரையில்அவர்களுடைய நடிப்பு, தோற்றம், நாயகனுடனான கெமிஸ்ட்ரிஆகியவை படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன.

நண்பர்கள் கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருந்தனர். நட்டி சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கினர். தொழில்நுட்பக் குழு, தயாரிப்புக் குழு என அனைவருடனும்பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். மீண்டும் ஒரு புதிய படத்தை தொடங்கும் உணர்வோடு இந்த வெற்றியை கொண்டாடுகிறோம். இந்தப் படத்திற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

இசையமைப்பாளர் எஸ். தமன்பேசியதாவது..,

“சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் கிடைக்கும். ‘இதயம் முரளி’ அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு.

மனோஜ் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார் என்று நான் நினைத்ததே இல்லை. ‘ஈரம்’ படத்தில் இருந்து எங்களுடைய பயணம் தொடங்கியது. அந்தப் படத்தின் டெஸ்ட் ஷூட்டைஷங்கர் சாரிடம் காட்டியபோது, ‘தண்ணீரே வில்லன்’ என்ற கதையை பலரும் நம்பவில்லை. ஆனால் அந்த உலகத்தை நம்ப வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தியவர் மனோஜ். அந்தப் பயணம்தான் இன்று ‘இதயம் முரளி’ வரை எங்களை கொண்டு வந்திருக்கிறது. அதற்காக மனோஜுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்தின் கதை என்னிடம் வந்தது ஒரு சிறிய டிரெய்லர்மூலம்தான். என் நண்பர் தீபன், இயக்குநர் ஆகாஷ் உருவாக்கிய அந்த கான்செப்ட் டிரெய்லரை அனுப்பி வைத்தார். CGI, 2D காட்சிகள் என மிக அழகாக உருவாக்கப்பட்டிருந்த அந்த டிரெய்லரை பார்த்தவுடன், இந்தப் படத்திற்கு நான் கண்டிப்பாகஇசையமைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் வேறு ஒரு இசையமைப்பாளரைப் பற்றி யோசிக்கப்பட்டிருந்தாலும், இந்தக் கதையின் மீது இருந்த ஈர்ப்பால் நானே ஆகாஷிடம், ‘நான் இசையமைத்தால் இந்தப்படத்தில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்’ என்று சொன்னேன். இவ்வளவு அழகான காதல் கதையில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த முடிவுக்குப்பிறகு உருவான முதல் பாடல் ‘தங்கமே’. அங்கிருந்துதான் இந்த இசைப் பயணம் தொடங்கியது. அதன் பிறகு முழு ஆல்பமும் மிக அழகாக உருவானது.

உண்மையைச் சொன்னால், நான் நடிகராக நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. மனோஜ் வற்புறுத்தவில்லை என்றால் நிச்சயமாக நடித்திருக்க மாட்டேன். நான் எப்போதும் செட்டுக்கு இசையமைப்பாளராகத் தான் வருவேன்; நடிகராக வர வேண்டும் என்று நினைத்ததில்லை. ஆனால் ஆகாஷ் என்னை சம்மதிக்க வைத்தார். இந்தப் படத்தில் ப்ரீத்தி, கயாது, நிஹாரிகா, ஏஞ்சல்உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. அவர்கள் அனைவரும் படப்பிடிப்பு தளத்தை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்கள்.

நட்டி சாருடன் மீண்டும் இணைந்ததும் மகிழ்ச்சி அளித்தது. அவருடன் ஏற்கெனவே பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதே நேரத்தில், ரக்ஷன் மற்றும் டிராவிட்(நகைச்சுவையாக) எங்களுக்கு நிறைய ‘டார்ச்சர்’ கொடுத்தார்கள். குறிப்பாக டப்பிங் செய்யும்போது தேவைக்கு அதிகமாகப் பேசி, படத்தின் இறுதிப்பணிகளையே தாமதப்படுத்திவிட்டார்கள். ஆனால் அதுவும் செட்டில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளில் ஒன்றுதான்.

அதர்வா மிகவும் அருமையான மனிதர். அவருடன் பணியாற்றியதுமிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எப்போதும் நேர்மறை ஆற்றலுடனும், மகிழ்ச்சியுடனும் அனைவரையும்உற்சாகப்படுத்தும் மனிதர் அவர்.” இந்தப் படத்தின் முழுக்குழுவுடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாகஇருந்தது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தை தங்களுடைய படமாக நினைத்து உழைத்தார்கள். அந்த அர்ப்பணிப்புதான்இன்று இந்த வெற்றியாக மாறியுள்ளது.

இந்தப் படத்தின் பாடல்களுக்கும் பின்னணி இசைக்கும்ரசிகர்கள் அளித்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு இசையமைப்பாளராக இதைவிட பெரிய திருப்தி வேறு எதுவும் இல்லை. இந்த வெற்றிக்கு காரணமான இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன், தயாரிப்பாளர் குழு, நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக் கொள்கிறேன்.

‘இதயம் முரளி’ எங்கள் அனைவரின் அன்பாலும், நம்பிக்கையாலும் உருவான திரைப்படம். அந்த அன்பை இதேபோல் தொடர்ந்து கொடுத்து, நல்ல சினிமாவை ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி.”

மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாவது..,

“அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளரும்இயக்குநருமான ஆகாஷ் பாஸ்கரனுடன்எனக்கு இருக்கும் நட்புதான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது. அவரது திருமண விருந்தாக இருந்தாலும், ‘இதயம் முரளி’ படத்தில் இடம்பெற்றதிருமண விருந்தாக இருந்தாலும், இன்றைய நன்றி அறிவிப்பு விழாவின் விருந்தாகஇருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்னை நினைவில் வைத்திருப்பது அந்த நட்பின்வெளிப்பாடுதான். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.

‘இதயம் முரளி’ மிகவும் அழகான திரைப்படம். அறிமுக இயக்குநராகவே ஆகாஷ் தனது திறமையை சிறப்பாக நிரூபித்திருக்கிறார். இதுபோன்ற தரமான படங்களை தொடர்ந்து இயக்கி, ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைப்பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படம் எனக்கு பல நல்ல நண்பர்களையும் கொடுத்திருக்கிறது. அதர்வாபிரதருக்கு இன்னும் பல சிறந்த படங்கள் அமைய வேண்டும். அவர் மேலும் உயரங்களை அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

நட்டி அண்ணா மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ராகுல், ரக்ஷன், ஏஞ்சலின், சுதாகர் உள்ளிட்ட அனைவருடனும் ஒரு சிறிய பங்காக இருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் பேசியதாவது..,

“முதலில் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நீங்கள் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தீர்கள். நல்ல விமர்சனங்களையும் ஆதரவையும் வழங்கினீர்கள். அதற்காக மனதார நன்றி.
அதேபோல், ரசிகர்களுக்கும் என் நன்றி. படம் வெளியான பிறகு பலர் எனக்கு நேரடியாகச் செய்தி அனுப்பி, ‘இந்தப் படம் எங்கள் பள்ளி, கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது’ என்று சொன்னார்கள். அந்த வார்த்தைகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு.

அதர்வா சார் முதல் நாளிலிருந்தே இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், நண்பராகவும் எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும் உறுதுணையாக இருந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சார் இந்தப் படத்திற்கு ஆரம்பம் முதல் முழு ஆதரவாக இருந்தார். இவ்வளவு பெரிய படங்களில் பணியாற்றியிருந்தாலும், எங்கள் சிறிய படத்திற்கும் அதே அர்ப்பணிப்புடன் உழைத்தார். அதற்காக அவருக்கு நன்றி.

தமன் சார் இந்தப் படத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார். அவருடைய இசை இந்தப் படத்திற்கு ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. எங்கு சென்றாலும் இந்தப் படத்தைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொண்டே இருப்பார். ஹைதராபாத் சென்றாலும், மும்பை சென்றாலும் ‘இதயம் முரளி’ பற்றிய பேச்சுதான். அந்த நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் அவருக்கு என் நன்றி.

சாய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பு நிர்வாகி, எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர், உதவி இயக்குநர் என பல பொறுப்புகளை ஏற்றார். சில நேரங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுகளை வாங்கி தருவது வரை எல்லாவற்றையும் கவனித்தார். குறிப்பாக கயாது லோகரின் கால்ஷீட்டுகளை ஒருங்கிணைக்க அவர் மிகவும் உதவினார். அவர் எனது மிக நெருங்கிய நண்பர். அவருடன் பணியாற்றியது மகிழ்ச்சி.

எடிட்டர் பிரதீப்புடன் ஆரம்பத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. ஆனால் இறுதி மூன்று மாதங்கள் தொடர்ந்து அவருடன் அமர்ந்து பணியாற்றியதால்தான் படம் இவ்வளவு கச்சிதமாக உருவானது. அவருடைய அனுபவம் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.

தயாரிப்பு வடிவமைப்பாளர் கார்த்திக் சார் உருவாக்கிய செட்கள் இந்தப் படத்தின் அழகை மேலும் உயர்த்தின. மொட்டைமாடி, டெரஸ் உள்ளிட்ட பல முக்கியமான இடங்கள் அனைத்தும் அவருடைய உழைப்பின் விளைவு.

உடை வடிவமைப்பாளர் பல்லவி மேம், மீனாட்சி மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் என் நன்றி. பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றி வந்த நேரத்திலும், எங்கள் படத்திற்காக முழு அக்கறையுடன் உழைத்தார்கள்.

என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பணியாற்றி வரும் போஸ்டர் வடிவமைப்பாளர் கபிலனுக்கும் நன்றி. அதேபோல், இறுதிக் கட்ட ஒலிக்கலவையை சிறப்பாகச் செய்து கொடுத்த சுரேன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

வசன எழுத்தாளர் ரமணகிரிவாசன் சார் எனக்கு ஒரு நல்ல ஆலோசகராக இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் நாங்கள் விரிவாக விவாதிப்போம். அவர் ஒரு வடிவத்தை உருவாக்கிக் கொடுப்பார். அதை வைத்து நாங்கள் மேலும் மெருகேற்றுவோம். இந்தப் படத்தின் வசனங்களில் அவருடைய பங்கு மிக முக்கியமானது.

இந்தப் படத்தின் மூலம் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கயாது லோகரை முதன்முதலாக சென்னைக்கு அழைத்து வந்து தேர்வு நடத்தினோம். அப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். இன்று பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். அவருடைய வளர்ச்சியைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. நிஹாரிகாவுக்கும் இதுவே முதல் படம். இன்று பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தனும் அப்போது சினிமாவில் அதிகமாக அறிமுகமாகாத நிலையில் இருந்தார். இன்று அவர் சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்.

மோனிஷா, ஏஞ்சலின் ஆகியோருக்கும் இந்தப் படம் முக்கியமான தொடக்கமாக அமைந்தது. அவர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள். டிராவிட்டை முதலில் நடிகராகத்தான் அழைத்தோம். பின்னர் அவர் உதவி இயக்குநராகவும், வசன எழுத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தார். அவருடைய திறமை இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.”

இந்தப்படத்தில் உழைத்த என் உதவி இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

# #

கடந்த ஜூலை 10 ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.