ஹாய் – விமர்சனம்

நடிப்பு: கவின், நயன்தாரா, ராதிகா சரத்குமார், கே.பாக்யராஜ், பிரபு, சுஹாசினி, அம்ருதா சீனிவாசன், விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், ரெஞ்சி பணிக்கர், சத்யன், ஆதித்யா கதிர், குரோஷி, காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: விஷ்ணு எடவன்

கூடுதல் திரைக்கதை & வசனம்: சி.யு.முத்துசெல்வன்

ஒளிப்பதிவு: ராஜேஷ் சுக்லா

படத்தொகுப்பு: பிலோமின் ராஜ்

இசை: ஜென் மார்ட்டின்

கலை இயக்கம்: கண்ணன் எஸ்

நடன இயக்கம்: பிருந்தா, தினேஷ், காவ்யா.ஜி

ஸ்டண்ட்: தினேஷ் காசி

தயாரிப்பு: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, ரவுடி பிக்சர்ஸ் & Z ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர்கள்: எஸ்.எஸ்.லலித் குமார், விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் உமேஷ் குமார் பன்சால்

பத்திரிகை தொடர்பு: யுவராஜ்

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் நாயகன் மயில்சாமி (கவின்). எத்தனை வயதானாலும் காதலித்துத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற லட்சியத்தில் பிடிவாதமாக இருப்பவர். ஆனால், அவரது ’லட்சிய சுரைக்காய்’ கறிக்கு உதவாது என்ற முடிவுக்கு வரும் அப்பா வாத்தியாரும் (கே.பாக்யராஜ்), அம்மா பரிமளாவும் (ராதிகா சரத்குமார்), ’அரேஜ்ட் மேரேஜ்’ செய்து வைப்பதில் தீவிரம் காட்ட, அவர்களை எதிர்க்க இயலாத மயில்சாமி சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு வெளியேறி, சென்னைக்கு ஓடிப்போகிறார்.

மறுபுறம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் தேவயானி ( நயன்தாரா). அவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே அம்மா (சுஹாசினி) யாருடனோ ஓடிப்போனதால், குடிகார அப்பா இந்திரன் (பிரபு) தேவயானியை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இப்போது தன் அப்பாவும், உறவினர்களும் சேர்ந்து தனக்குப் பிடிக்காத மாப்பிள்ளைக்கு தன்னை திருமணம் செய்து கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சும் தேவயானி, அவர்களிடமிருந்து தப்பித்து சென்னைக்கு ஓடிவந்து விடுகிறார்.

சென்னையில், பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் தேவயானியை அழைத்து வர அவரது தோழி, மயில்சாமியை அனுப்பி வைக்கிறார். டூ வீலரில் வரும் மயில்சாமி, தேவயானியைப் பார்த்து “ஹாய்” என்று சொல்லி அறிமுகமாகி, அழைத்து வருகிறார். தோழியின் வீட்டு மேல் தளத்தில் தேவயானியும், கீழ் தளத்தில் மயில்சாமியும் தங்கியிருக்கிறார்கள்.

அடுத்தடுத்த சம்பவங்களின் விளைவாக, தேவயானியை காதலிக்கத் தொடங்குகிறார் மயில்சாமி. ஆனால் தேவயானியின் கவனம் காதலில் இல்லை. வாழ்க்கையில் தனக்கொரு பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டும் என்பதிலேயே இருக்கிறது. இது தெரிந்த மயில்சாமி தன் காதலை தேவயானியிடம் வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே வைத்திருக்கிறார்.

ஒரு சூழ்நிலையில், தேவயானியின் சம்மதத்துடன் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார் மயில்சாமி. தேவயானி தன்னுடைய காதலி என்றும், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோரிடம் பொய் சொல்லி, தனது கோயம்புத்தூர் வீட்டுக்கு தேவயானியை அழைத்து வருகிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? ஏற்பட்ட குழப்பங்கள், கொந்தளிப்புகள் என்ன? தேவயானி மயில்சாமியின் காதலியும் இல்லை, அவர் கர்ப்பமாகவும் இல்லை என்ற குட்டு எப்போது எப்படி உடைந்தது? மயில்சாமி தன்னைக் காதலிப்பதை அறிந்து தேவயானி அவரை ஏற்றுக்கொண்டாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு காமெடியாகவும் எமோஷனலாகவும் விடை அளிக்கிறது “ஹாய்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் மயில்சாமியாக கவின் நடித்திருக்கிறார். வழக்கமான கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இலகுவான ரொமான்டிக் கதாபாத்திரம் ஏற்று, சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி, ரசிக்க வைத்திருக்கிறார்.

நாயகி தேவயானியாக நயன்தாரா நடித்திருக்கிறார். வளர்ந்து வரும் ஹீரோவான கவினுக்கு ஜோடியாக நடிக்க சீனியர் நட்சத்திரமான அவர் முன் வந்ததற்குக் காரணம் அவரது கதாபாத்திர வடிவமைப்பு தான். அவர் இந்த படத்தில் கூடுதலாக அழகாக இருக்கிறார் என்பதோடு மட்டுமல்லாமல், காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகளில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். கவினுடனான அவரது கெமிஸ்ட்ரி படத்திற்கு பலம்.

நாயகனின் அப்பா வாத்தியாராக வரும் கே.பாக்யராஜ், அம்மா பரிமளாவாக வரும் ராதிகா சரத்குமார், நாயகியின் அப்பா இந்திரனாக வரும் பிரபு, அம்மாவாக வரும் சுஹாசினி ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பால் குடும்பக்காட்சிகளை சுவாரஸ்யமாக ஆக்கியிருக்கிறார்கள்.

கணபதியாக வரும் ஆதித்யா கதிர், கோபியாக வரும் குரோஷி, யோகேந்திரனாக வரும் சத்யன் ஆகியோர் கதையை மீறாத காமெடிக் காட்சிகளில் கலக்கியிருக்கிறார்கள்.

லக்ஸாக வரும் அம்ருதா சீனிவாசன், மருத்துவர் சண்முகியாக வரும் விடிவி கணேஷ், பரிசுத்தமாக வரும் ஃபெப்சி விஜயன், தாசனாக வரும் ரெஞ்சி பணிக்கர், மைதிலியாக வரும் காவியா அறிவுமணி, தன்யாவாக வரும் மிர்ச்சி கெமி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன். கூடுதல் திரைக்கதை & வசனம் எழுதியிருக்கிறார் சி.யு.முத்துசெல்வன். காதல், குடும்பம், நகைச்சுவை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கலந்து, ரசிக்கத்தக்க அருமையான பொழுதுபோக்குப் படமாக இதைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணு எடவன். பொருத்தமான நடிப்புக் கலைஞர்களைத் தேர்வு செய்து, அவர்களை யதார்த்தம் மாறாமல் சிறப்பாக நடிக்க வைத்து, போரடிக்காமல் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றுள்ளார்.

ஜென் மார்ட்டினின் இசை கதையோடு சேர்ந்து பயணித்திருக்கிறது. ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜின் படத்தொகுப்பும் படத்துக்கு கூடுதல் பலம்.

‘ஹாய்’ – அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கத்தக்க பொழுதுபோக்குத் திரைப்படம்!

ரேட்டிங்: 3.5/5