அந்தரன் – விமர்சனம்

நடிப்பு: பிரஜின் பத்மநாபன், இவானா வருண், அனுபமா குமார், எம்.கே.சாம்பசிவம், செந்தி குமாரி, அதிரன், ரமேஷ்பாபு, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சந்தோஷ் ராவணன்

ஒளிப்பதிவு: கிஷோர் ராமச்சந்திரன்

படத்தொகுப்பு: இக்னேஷியஸ் அஸ்வின், சதிஷ் குரோசவா

இசை: ஹரி எஸ் ஆர்

பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா, மோகன் ராஜன், சுபா பிரபு

நடனம்: விஜி சதீஷ்

சண்டை பயிற்சி: ராம் குமார்

கலை: சசி குமார்

தயாரிப்பு வடிவமைப்பு: தண்டபாணி

தயாரிப்பு: எம்.கே.சாம்பசிவம்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

செல்வமும், செல்வாக்கும், சுயசாதிப் பெருமையும் கொண்ட கட்டுமானத் தொழிலதிபர் சங்கர் (எம்.கே.சாம்பசிவம்). இவரது மனைவி லட்சுமி (செந்தி குமாரி). இவர்களது ஒரே மகள் நாயகி கார்த்திகா (இவானா வருண்).

கார்த்திகா யாரையாவது காதலித்தாலோ, கார்த்திகாவை யாராவது காதலித்தாலோ, கார்த்திகாவுக்கு யாருடனாவது திருமணம் நிச்சயம் செய்தாலோ, திருமணத்துக்கு முன் அந்த காதலர் / நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்.

இவ்விதம் மூன்று ஆண்கள் அடுத்தடுத்து இறந்துவிட, இது இயற்கையாக நடக்கவில்லை; யாரோ திட்டமிட்டு நடத்துகிறார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது கார்த்திகாவுக்கு. இதெல்லாம் செல்வச் செருக்கும் சாதி வெறியும் கொண்ட தனது தந்தையின் வேலையாகத் தான் இருக்கும் என்று கருதும் கார்த்திகா, தனது தந்தை சங்கர் மீது போலீஸில் புகார் கொடுக்கிறார்.

இவ்வழக்கை புலன் விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக செழியன் ஐபிஎஸ் (பிரஜின் பத்மநாபன்) வருகிறார். அவரது விசாரணையின் போக்கில் அவருக்கு கார்த்திகா மீது காதல் வருகிறது. கார்த்திகாவுக்கும் செழியனைப் பிடித்திருக்கிறது. என்றாலும், ஏற்கெனவே மூன்று பேர் கொல்லப்பட்டது போல செழியனும் கொல்லப்பட்டு விடுவாரோ என்று அஞ்சுகிறார் கார்த்திகா.

அதன்பின் என்ன நடந்தது? கார்த்திகா பயந்தது போல் செழியன் கொல்லப்பட்டாரா, அல்லது உயிர் தப்பினாரா? செழியன் மேற்கொண்ட தீவிர விசாரணையில் வெளிப்பட்ட மர்மங்கள் என்ன? கொலையாளி யார்? கொலைகளுக்குக் காரணம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத கிளைமாக்ஸுடன் விடை அளிக்கிறது ‘அந்தரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, போலீஸ் அதிகாரி செழியன் ஐபிஎஸ் ஆக பிரஜின் பத்மநாபன் நடித்திருக்கிறார். வழக்கமான போலீஸ் பாணியிலான ஆக்‌ஷன் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாமல், அமைதியாக மூளையைப் பயன்படுத்தி தடயங்களை ஆராய்ந்து, கொலையாளியை படிப்படியாக நெருங்கும் புலனாய்வு அதிகாரியாக தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாயகி கார்த்திகாவாக இவானா வருண் நடித்திருக்கிறார். பார்வைக்கு அழகாக இருக்கிறார். முதலில் வழக்கமான நாயகி போல் வந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியின் பின்பாதியில் ஆளே மாறி, முற்றிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை அலற விட்டிருக்கிறார்.

நாயகியின் தந்தை தொழிலதிபர் சங்கராக வரும் தயாரிப்பாளர் எம்.கே.சாம்பசிவம், அவரது மனைவி லட்சுமியாக வரும் செந்தி குமாரி, மனோதத்துவ மருத்துவராக வரும் அனுபமா குமார், போலீஸ் அதிகாரி நசீராக வரும் பத்மன், மற்றொரு போலீஸ் அதிகாரி கலைவாணியாக வரும் ஐஸ்வர்யா கண்ணன், தடயவியல் அதிகாரி காயத்ரியாக வரும் பிரியங்கா செல்வி, ஆதித்யாவாக வரும் அதிரன், விடலைப்பருவ செழியனாக வரும் ரமேஷ்பாபு உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து, அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சந்தோஷ் ராவணன். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில், கொலையாளி யார் என்ற கேள்வியுடன் பார்வையாளர்களுக்கு பல கதாபாத்திரங்கள் மீது சந்தேகம் எழும் வகையில் காட்சிகளை அமைத்து, கிளைமாக்ஸில் எதிர்பாராத திருப்பத்துடன் அனைத்து யூகங்களையும் தகர்த்தெறிந்திருக்கிறார். படத்தின் தொடக்கத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து, இறுதி வரை “அடுத்து என்ன நடக்கும்?” என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.

கிஷோர் ராமச்சந்திரனின் ஒளிப்பதிவு, கிரைம் காட்சிகளில் பதற்றத்தையும், பாடல் காட்சிகளில் வண்ணமயமான அழகையும் வாரி இறைத்துள்ளது.

ஹரி எஸ்.ஆர் இசையமைப்பில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை காட்சிகளுக்கேற்ப பயணித்திருக்கிறது.

இக்னேஷியஸ் அஸ்வின், சதீஷ் குரோசவா ஆகியோரின் படத்தொகுப்பு, படத்தை தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்த உறுதுணையாக இருந்திருக்கிறது.

‘அந்தரன்’ – கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு செம விருந்து!

ரேட்டிங்: 3/5