பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்
நடிப்பு: இளன், சான்வி மேக்னா, ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, செந்தில், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், மாறன், டீப்ஸ், ‘ராஜா ராணி’ பாண்டியன், ராஜாமணி, மோகன பிரியா, ஆருஷ் மற்றும் பலர்
இயக்கம்: இளன்
கதை, திரைக்கதை: நிவேதிதா போஹங்கர்
கூடுதல் திரைக்கதை & வசனங்கள்: இளன், ஹரிஷ் ஜிஒய்
ஒளிப்பதிவு: தினேஷ் கே பாபு
படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ஸ்ரீநிதி சாகர்
வழங்குபவர்: நெட்ஃபிளிக்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
துபாயில் சிவில் எஞ்சினியராகப் பணிபுரியும் நாயகன் இளன் (இளன்), தனது அம்மா நிர்மலா (கீதா கைலாசம்) முறுவலாக சுடும் தோசைக்காகவும், தமிழ்நாட்டில் ஒரு பெண்ணை காதலித்துத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தன் வேலையை விட்டுவிட்டு சென்னை வருகிறார்.
மறுபுறம், ‘பர்ப்பிள் பவி’ என்ற பெயரில் பிரபல சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சராக இருக்கும் நாயகி பவித்ரா (சான்வி மேக்னா), தனது அம்மா சந்திரா ராணி (ராதிகா சரத்குமார்), அப்பா சீனிவாசன் (இளங்கோ குமரவேல்), நதாஸ் தாத்தா (செந்தில்), வளர்ப்பு நாய் என அனைவரையும் அன்போடும், பொறுப்போடும் கவனித்துக்கொண்டு, குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவராக இருக்கிறார்.
நாயகன் இளனும், நாயகி பவித்ராவும் சந்தித்து, காதலித்து, திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. புதுமனைவி பவித்ரா, குடும்பம் நடத்த தன் கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார். “நான் ஏன் என் வீட்டைவிட்டு வெளியேறி, அந்த வீட்டுக்குப் போக வேண்டும்? முடியாது” என்று பிடிவாதமாகச் சொல்லிவிடுகிறார். வேறு வழியில்லாமல், இளனே தன் பெட்டி – படுக்கையை எடுத்துக்கொண்டு மனைவியின் வீட்டுக்குச் சென்று குடியேறுகிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? மாமியார் வீட்டில் இளன் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? மாமியாரின் வீட்டோடு மருமகனாகச் சென்றுவிட்ட இளன் குறித்து அவரது பெற்றோர் அனுபவிக்கும் வேதனைகள் என்ன? இறுதியில் இப்பிரச்சனை எப்படி முடிவுக்கு வந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு காதலுடன் காமெடி கலந்து விடை அளிக்கிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் இளனாக, ‘பியார் பிரேமா காதல்’ வெற்றித் திரைப்படத்தின் இயக்குநர் இளன் நடித்திருக்கிறார். துறுதுறுப்பான, அதேசமயம் வெகுளித்தனமான இளைஞர் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். காதல் காட்சிகளையும், நகைச்சுவைக் காட்சிகளையும் இயல்பாகக் கையாண்டு, ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகி பவித்ராவாக சான்வி மேக்னா நடித்திருக்கிறார். சுதந்திரமான பெண்ணிய சிந்தனை, தன் குடும்பத்தின் மீதான பாசம், கணவன் மீதான காதல் என பல பரிமாணங்கள் கொண்ட கதாபாத்திரத்தில் இயன்றவரை நடித்து கவனம் ஈர்க்கிறார்.
நாயகி பவித்ராவின் அம்மா சந்திரா ராணியாக வரும் ராதிகா, அப்பா சீனிவாசனாக வரும் இளங்கோ குமரவேல், தாத்தாவாக வரும் செந்தில், நாயகன் இளனின் அம்மா நிர்மலாவாக வரும் கீதா கைலாசம், அப்பா ராஜசேகராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், சகோதரனாக வரும் ஆருஷ், அண்ணியாக வரும் மோகன பிரியா, வினோத்தாக வரும் யோகி பாபு, கணேஷாக வரும் மாறன், மைக்கேலாக வரும் டீப்ஸ், வழக்கறிஞராக வரும் ‘ராஜா ராணி’ பாண்டியன், ஆயாவாக வரும் ராஜாமணி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் இளனே, இப்படத்தை இயக்கியிருக்கிறார். நிவேதிதா போஹங்கரின் கதை, திரைக்கதைக்கு ஹரிஷ் ஜிஒய் உடன் சேர்ந்து கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியிருக்கிறார் இளன். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் ஏன் தனது வீட்டை விட்டுவிட்டு கணவரின் வீட்டுக்குச் செல்ல வேண்டும்? காதலில் சமத்துவம் பேசும் ஆண்கள், திருமணத்துக்குப் பிறகும் அதே சமத்துவத்தை ஏற்றுக் கொள்கிறார்களா? இந்த இரண்டு நியாயமான கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்கான பதில்களை, அவர் காமெடி என்ற பெயரில் ஆணாதிக்கப் பார்வையை முன்வைக்காமல், நேர்மையாகவும், தெளிவாகவும் முன்வைத்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்துக்குத் தேவையான உற்சாகத்தைக் கொடுக்கிறது. தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவு, வண்ணமயமான ரொமான்டிக் காமெடிக்குத் தேவையான அழகைச் சேர்க்கிறது.
‘பியார் பிரேமா கல்யாணம்’ – இன்றைய ஜென் ஸீ தலைமுறையினர் ரசிக்கத் தக்க பொழுதுபோக்குத் திரைப்படம்!
ரேட்டிங்: 3/5
