அமரம் – விமர்சனம்
நடிப்பு: ராஜன் தேஜஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், சுரேஷ் மேனன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி மற்றும் பலர்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: திருஅருள் கிருஷ்ணா
ஒளிப்பதிவு: பரத்குமார்
படத்தொகுப்பு: ஆர்.ஸ்ரீராமர்
இசை: மிக்கி ஜெ மேயர்
பாடல்கள்: சௌந்தரராஜன் கே
நடனம்: பூபதி
கலை இயக்கம்: ஜனார்த்தனன்
ஸ்டண்ட்: மிராக்கிள் மைக்கேல்
தயாரிப்பு: ’திவ்ய சேத்ரா பிலிம்ஸ்’ நிர்மலா ராஜன், சி.ஆர்.ராஜன்
தமிழக வெளியீடு: ’டிரைடண்ட் ஆர்ட்ஸ்’ ஆர்.ரவீந்திரன்
பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார் எஸ்2, புவன் செல்வராஜ்
கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்தவர் நாயகன் அருகன் (ராஜன் தேஜஸ்வர்). நல்ல படிப்போ, சரியான வழிகாட்டுதலோ இல்லாமல் வளர்ந்த அருகன், தன் உறவினரான மொசாட் (ஜார்ஜ் மரியான்) துணையோடு, கூலிக்காக கொலை செய்வதையும், கொள்ளையடிப்பதையும் தொழிலாக வைத்திருக்கிறார்.
அப்படித்தான் ஒரு அசைன்மெண்ட்டின் பேரில், நாயகி ஷர்மிளா பாரதியின் (ஐரா அகர்வால்) கண் முன்னே அவரது தந்தையை படுகொலை செய்கிறார் அருகன். இதனால் பெரிதும் பாதிக்கப்படும் ஷர்மிளா பாரதி, தனது தந்தையைக் கொன்ற கொலையாளியைத் தேடிப் பிடித்து பழி வாங்க வேண்டும் என்ற சபதத்துடன் புறப்படுகிறார்.
கொலையாளி அருகனை ஷர்மிளா பாரதி கண்டுபிடித்தாரா? அவரை பழி தீர்த்து தன் சபதத்தை நிறைவேற்றினாரா? அல்லது எதிர்பாராத சம்பவங்களால் கதை தடம் மாறி நடை போட்டதா? என்பன போன்ற கேள்விகளுக்கு திடீர் திருப்பங்களுடன் விடை அளிக்கிறது ‘அமரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் அருகன் கதாபாத்திரத்தில் ராஜன் தேஜஸ்வர் நடித்திருக்கிறார். பரட்டைத் தலையுடனும், அடர்ந்த தாடி – மீசையுடனும் அசல் கிராமத்து இளைஞராக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். புதுமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ஜமாய்த்திருக்கிறார். நடிப்புக்கலையை இன்னும் சற்று ஆழமாகக் கற்றுக்கொண்டால், தமிழ்த் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக ஒரு ரவுண்டு வரலாம்.
நாயகி ஷர்மிளா பாரதியாக ஐரா அகர்வால் நடித்திருக்கிறார். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். அழகாக நடிக்கவும் செய்திருக்கிறார். தன் மன உணர்வுகளை அவர் கண்களாலேயே வெளிப்படுத்தியிருப்பது அழகோ அழகு.
நாயகனின் உறவினர் மொசாட்டாக வரும் ஜார்ஜ் மரியான் தனது வழக்கமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
நாயகியின் கூடவே இருந்து அவருக்கு துரோகம் செய்யும் ஏகலைவன் எம்.எல்.ஏ.வாக வரும் நாகி நீடு தனது கம்பீரமான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
கூலிப்படைத் தலைவன் விஜயனாக வரும் சாய் தீனா வில்லத்தனத்தில் ஸ்டைலையும் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ மற்றும் மந்திரியையே மிரட்டும் புத்திசாலி அதிகாரி சால்வாவாக வரும் ஹரிஷ் பெராடி நடிப்பில் பார்வையாளர்களையும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார்.
காமெடி கலந்த அப்பாவி கேரக்டரில் பாண்டுவாக வரும் கல்கி ராஜன் சிரிக்க வைக்கிறார்.
தயா என்ற கதாபாத்திரத்தில் வரும் வாசுதேவன் முரளி உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா. கிராமத்து பின்னணியில் உள்ள அதிகார வர்க்க அழிச்சாட்டியங்களையும், கூலிப்படையினரின் இருண்ட வாழ்க்கையையும் மையமாக வைத்து இக்கதையை தொடங்கும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா, முதல் பாதியில் விறுவிறுப்பு குறையாமல் சஸ்பென்ஸை நகர்த்தி வந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இதைத் தவிர்த்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மிக்கி ஜெ மேயரின் இசை, பரத்குமாரின் ஒளிப்பதிவு, ஆர்.ஸ்ரீராமரின் படத்தொகுப்பு, ஜனார்த்தனின் கலை இயக்கம், மிராக்கிள் மைக்கேலின் ஸ்டண்ட் வடிவமைப்பு உள்ளிட்ட தரமான தொழில்நுட்பங்கள் இப்படத்துக்கு பலம்.
‘அமரம்’ – பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 3/5
