“அண்ணாதுரை’ திரைப்படம் எனக்கு மிகப்பெரிய வாழ்வை தரும்”: நாயகி நம்பிக்கை!

நாளை (30ஆம் தேதி) வெளிவர இருக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் தலைப்பில் துவங்கி, எல்லா அம்சங்களும் மக்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் படமாகவே இருந்து வருகிறது.
இந்த படத்தில் இடம் பெறும் ஜிஎஸ்டி பாடல் ரசிகர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக இருக்கிறது. அந்த பாடலின் காணொளியை கண்டவர்கள் கதாநாயகி டயானா சம்பிகாவின் அழகைப் பற்றியும், திறமையைப் பற்றியும் நிறையவே பேசி வருகின்றனர். சென்னையில் உள்ள பிரபல லயோலா கல்லூரியில் படித்துவரும் இவர், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
a3
a2
தொடர்ச்சியாக கதாநாயகர்களை வழங்கிக்கொண்டு இருக்கும் அந்த கல்லூரியில் இருந்து வரும் முதல் கதாநாயகி டயானா என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு விளம்பர மாடலாக பிரபல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து வந்த இவர், ‘அண்ணாதுரை’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பாத்திமா விஜய் ஆண்டனியை சந்திக்க நேர்ந்தது. பிறகு ஆடிஷன் மூலம் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
“சம்பிகா என்றால் இளவரசி என்று அர்த்தம்.நான் அப்படித்தான் வாழ விரும்புகிறேன்.என்னை கதாநாயகியாக தேர்ந்தெடுத்த பாத்திமா விஜய் ஆண்டனியையும், எனக்கு நடிப்பில் ஏற்படும் சிறு சந்தேகங்களைக் கூட பொறுமையாக விளக்கிச் சொல்லும் விஜய் ஆண்டனி சாரையும் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்.
விஜய் ஆண்டனி சார் படங்கள் என்றாலே அது அனைத்து ரசிகர்களை கவரும் படம் என்பதால், படத்தின் வெளியீட்டை பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இதில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ரேவதி. பெயர் ராசியோ என்னவோ, படப்பிடிப்புத் தளத்தில் அனைவரிடமும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அந்த நல்ல பெயருக்கு இயக்குனர் ஸ்ரீனிவாசன் முக்கிய காரணம். இயல்பாக நடிக்க வேண்டும் என்பதில் மிக மிக தெளிவாக இருந்தார். ஸ்ரீதேவி மேடம் போல ஸ்டைலாகவும், நயன்தாரா மேடம் போல திரை ஆளுமையுடனும், த்ரிஷா மேடம் போல என்றும் நிலைத்து, ஐஸ்வர்யா பச்சன் போல அனைவரையும் கவரும் வண்ணம் திரை உலகில் நீடிக்க வேண்டும் என்பதே என் ஆசை. அது நிச்சயம் நிறைவேறும்.
நவம்பர் 30ஆம் தேதி வெளிவரும் ‘அண்ணாதுரை’ எனக்கு மிகப்பெரிய வாழ்வை தரும்”என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் டயானா சம்பிகா.
‘அண்ணாதுரை’ படத்தை ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்போரேஷன்’ நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் ‘R ஸ்டுடியோஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
நடிகர்கள் ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ஜிவெல் மேரி மற்றும் ரிந்து ரவி ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தில்ராஜின் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனியின் இசை மற்றும் படத்தொகுப்பில், ஆனந்த் மணியின் கலை இயக்கத்தில், ராஜசேகரின் சண்டை இயக்கத்தில், கல்யாணின் நடன இயக்கத்தில் , கவிதா மற்றும் சரங்கனின் ஆடை வடிவமைப்பில், அருண் பாரதியின் பாடல் வரிகளில் ‘அண்ணாதுரை’ உருவாகியுள்ளது.