அன்பே டயானா – விமர்சனம்
நடிப்பு: பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், சேத்தன், ரோஜா செல்வமணி, பரிதாபங்கள் கோபி, செல் முருகன், நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி மற்றும் பலர்
எழுத்து, இயக்கம்: பாரி இளவழகன்
ஒளிப்பதிவு: ஷெல்லி கேலிஸ்ட்
படத்தொகுப்பு: பார்த்தா எம்ஏ
இசை: பரத் சங்கர்
கலை இயக்கம்: மகேந்திரன்
தயாரிப்பு: மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேஸில் கிரியேஷன்ஸ் & ஈரா எண்டர்டெயின்மெண்ட்
தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
தெருக்கூத்துக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைத்து, விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றவர் இயக்குநரும், நடிகருமான பாரி இளவழகன். அவர் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் தான் தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘அன்பே டயானா’. இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்…

சென்னை பெரம்பூரில் வசித்து வருபவர் நாயகன் சிருமாமில்ல சீதா கிருஷ்ணா (பாரி இளவழகன்). சிறுவர் சிறுமியருக்கான தடகளப் பயிற்சியாளராக இருக்கிறார். தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்த இவர், பள்ளிப் பருவத்திலிருந்தே மேஜிக் கோன்சால்வ்ஸ் (ரம்யா ரங்கநாதன்) என்ற ஆங்கிலோ இந்தியப் பெண்ணைக் காதலிக்கிறார். ஆனால், மேஜிக், “காதலெல்லாம் வேண்டாம், நாம் ஃபிரண்ட்ஸ்” என்று சொல்லிவிடுகிறார்.
சில வருடங்களுக்குப் பின் மேஜிக்கிற்கும் கிருஷ்ணா மீது காதல் பிறக்கிறது. ஆனால், இப்போது கிருஷ்ணா திடீரென பின்வாங்குகிறார். இந்து கலாச்சாரத்தைச் சேர்ந்த தனக்கும், தன் குடும்பத்துக்கும், கிறிஸ்துவ கலாச்சாரத்தைச் சேர்ந்த அல்ட்ரா மாடர்ன் ஆங்கிலோ இந்திய கிறிஸ்துவப் பெண்ணான மேஜிக் ’செட்’ ஆவாரா என்று சந்தேகப்படுகிறார்.
காதலுக்காக இந்து கலாச்சாரத்துக்கு மாறிக்கொள்ள மேஜிக் தயாராகிவிட்ட போதிலும், சுயசாதிப் பற்றுக் கொண்ட தன்னுடைய அம்மா சரளா (ரோஜா செல்வமணி) ஒருபோதும் தனது காதல் திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார் என்று குழம்புகிறார் கிருஷ்ணா.
இதனிடையே, சரளா தன் தம்பி மங்கபாபுவின் (செல் முருகன்) மகளை கிருஷ்ணாவுக்குத் திருமணம் செய்து வைக்க பேசி முடித்து விடுகிறார்.
இச்சூழலில், கிருஷ்ணா என்ன செய்தார்? மேஜிக் உடனான காதலை அம்மாவிடம் சொல்லி, போராடி, சம்மதம் வாங்கினாரா? அல்லது அம்மா பேசி முடித்த தன் மாமாவின் மகளையே திருமணம் செய்துகொண்டாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் சிருமாமில்ல சீதா கிருஷ்ணாவாக பாரி இளவழகன் நடித்திருக்கிறார். முந்தைய ’ஜமா’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். பக்கத்து வீட்டுப் பையன் போன்ற எளிய தோற்றத்தில், துடிப்பான நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். காதல், நகைச்சுவை, எமோஷன் என அனைத்து அம்சங்களிலும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.
நாயகி மேஜிக் கோன்சால்வ்ஸாக ரம்யா ரங்கநாதன் நடித்திருக்கிறார். இவர் அழகோ அழகு கொள்ளை அழகு. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இவரை பார்த்துக்கொண்டே இருக்கலாம். நடிப்பிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
நாயகனின் அப்பா சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கராக சேத்தன் நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வெளுத்து வாங்கியிருக்கிறார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றியவராக வரும் இவர், பகலில் மனைவிக்குப் பயந்தவராகவும், இரவில் அதிகார அட்டகாசம் செய்பவராகவும் வருகிற அதே வேளை, மகனுக்கு உற்ற தோழனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நாயகனின் அம்மா சரளாவாக ரோஜா செல்வமணி நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் திரையில் மறுபிரவேசம் செய்துள்ள இவர், தோசை மாவு அரைத்து விற்பனை செய்பவராகவும், சுயசாதிப் பற்றுக் கொண்டவராகவும், கணவன் மற்றும் பிள்ளைகளை அடக்கி ஆள்பவராகவும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
நாயகனின் நண்பர் பெங்களூரு பாபாவாக பரிதாபங்கள் கோபி நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளில் நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறார். நாயகனின் தாய்மாமா மங்கபாபுவாக செல் முருகன் சில காட்சிகளிலேயே வந்தாலும் பார்வையாளர்களை சிரிக்க வைத்துவிடுகிறார்.
நாயகனின் அக்கா சத்தியவதியாக வரும் இஸ்மத் பானு, தம்பி சிருமாமில்ல சிரஞ்சீவி சங்கராக வரும் சுதர்சன் காந்தி, தனிஷாவாக வரும் நிகிலா சங்கர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் நாயகனாக நடித்துள்ள பாரி இளவழகனே இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். காதலுக்கு தடையாக வரும் சமாச்சாரங்களைத் தகர்த்து எப்படி நாயகியை நாயகன் கரம் பிடிக்கிறார் என்ற ஒருவரிக் கதையைக் கையிலெடுத்து, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் படைத்து, அதில் நகைச்சுவையைக் கலந்து போரடிக்காமல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். பாராட்டுகள் இயக்குநர் பாரி இளவழகன்!
இசையமைப்பாளர் பரத் சங்கரின் இசை, ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்டின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பாளர் பார்த்தா எம்ஏ-வின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘அன்பே டயானா’ – காமெடி கலந்த நல்ல பொழுதுபோக்கு காதல் படம்; பார்த்து மகிழுங்கள்!
ரேட்டிங்: 3.5/5
