சுசி கணேசன் – ஏஜிஎஸ் கூட்டணியில் ‘திருட்டுப்பயல்’ பாபி சிம்ஹா; வில்லன் பிரசன்னா!

ஏஜிஎஸ் நிறுவனத்தின் முதல் படமாக 2006ஆம் ஆண்டில், சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்து, சக்கை போடு போட்டு வெற்றிவாகை சூடிய ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை, சரியாக பத்து ஆண்டுகள் கழித்து, அதே ஏஜிஎஸ்  நிறுவனம் தயாரிக்க, சுசி கணேசன் இயக்க, வருகிற செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

“உன் ரகசியம் என் கையில் இருக்கும் வரை உன் சிண்டு என் கையில்”- வித்தியாசமாக வில்லனே கதை நாயகனாக உலா வந்த தளத்தில், நடிகர் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும், ‘பைவ் ஸ்டார்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசன்னா வில்லனாகவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்கள்.  இந்த இரண்டு பேர் நடிப்பிலும், மிரட்டலிலும் சிக்கிக்கொண்டு மிரள்கிற, மிரட்டுகிற ஒரு கதாநாயகியை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.

‘திருட்டுப்பயலே’ முதல் பாகத்தை போல, இந்த ‘திருட்டுப்பயலே 2’லும் வருகிற ஒவ்வொரு சின்ன கதாபாத்திரங்களிலும் ஏதோ ஒருவித ‘திருட்டுத்தனத்தின் சாயல் படர்ந்திருப்பது இதிலும் தொடர்கிறது.

“கடந்த பத்து வருஷத்தில் இந்த திருட்டுப்பயல்களின் எண்ணிக்கை வருஷத்துக்கு வருஷம் கூடுகிறதே தவிர குறைகிற வழியைக் காணோம். சாதாரணமாக சுற்றித் திரிந்த திருட்டுப்பயல்கள் தொழில்நுட்ப திருட்டுப்பயல்களாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். சிறு சிறு குற்றங்கள் தொழில்நுட்ப குற்றங்களாக பெருகிக்கொண்டிருக்கும் வேளையில், என் கற்பனையைவிட சமூக சூழலே இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு மிகப் பெரிய உந்துசக்தி” என்றார் இயக்குனர் சுசி கணேசன்.

“பாகம் 2, 3…. என்பது பொதுவாக கதாநாயகனை மையப்படுத்துவதாக இருந்தாலும், சில நேரங்களில் கதை கருவையும் மையப்படுத்தும். ‘கையில் சிக்கிய ரகசியத்தை வைத்து காசு பண்ணும்’ பின்புலம் இன்றும் என்றும் எப்போதும் பசுமையாக பொருந்துவதால், இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு கூடுதல் உத்வேகம் பிறந்தது” என்றார் சுசி கணேசன்.

முதல் பாகத்தின் பெரும்பகுதி ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு நடைபெற்றதை போலவே, ‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்புக்கு பிரமிக்க வைக்கும் ஒரு அழகான தீவை தேடிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பகுதி படப்பிடிப்பு, வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் உணர்வு, திருமணமான ஒவ்வொரு பெண்ணையும் உருக வைக்கும் என்கிறார்கள்.

இதர நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.