அங்கீகாரம் – விமர்சனம்
நடிப்பு: கே.ஜெ.ஆர், விஜி வெங்கடேஷ், இசபெல்லா, வசுந்தரா, சிந்தூரி விஸ்வநாத், அஜித் கோஷி, ரமா, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், செல்வி, ஜானகி, ராம்ஜி, அருள் டி சங்கர், கார்த்திக், அந்தோணி, ஷான், விமல்குமார் மற்றும் பலர்
இயக்கம்: தென்பாதியான்
ஒளிப்பதிவு: ஏ.விஸ்வநாத்
படத்தொகுப்பு: தினேஷ்குமார்
இசை: ஜிப்ரான் வைபோதா
நடன அமைப்பு: ஷெரிஃப்
சண்டை பயிற்சி: பீட்டர் ஹெய்ன்
கலை இயக்கம்: ராமு தங்கராஜ்
தயாரிப்பு: எஸ்.கே.பிரசாந்த், அஜித் பாஸ்கர், அருண் முருகன்
வழங்குபவர்: ஸ்வஸ்திக் விஷன்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
சென்னையைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரரான நாயகன் ஆதிரன் பானுமதி (கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் என்ற கே.ஜே.ஆர்), பல நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதை தனது லட்சியமாக்க் கொண்டிருக்கிறார். இதற்காக மிகவும் தீவிரமாக கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து வருகிறார்.
கழிவுநீர் ஓடும் கூவம் நதிக்கரையோரம் உள்ள சின்னஞ்சிறு வீட்டில், ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைப் பின்னணி கொண்ட இவரது குடும்பம் வாழ்ந்துவருகிறது. விதவையான இவரது தாய் பானுமதி (ரமா) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். தங்கை செல்வி (இசபெல்லா) கல்லூரியில் படிக்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றால் மட்டுமே வறுமையின் பிடியில் சிக்கியுள்ள தன் குடும்பத்தின் நிலையை மாற்றி உயர்த்த முடியும் என்று நினைக்கும் ஆதிரன், கடுமையான தடகளப் பயிற்சியைத் தொடருகிறார்.
ஆனால், தடகள விளையாட்டில் உள்ள மோசமான ‘பாலிடிக்ஸ்’ மற்றும் ஊழல்கள் காரணமாக தேசிய தடகள சங்க நிர்வாகிகளும், விளையாட்டுத் துறை அதிகாரிகளும் ஆதிரன் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்ய மறுத்து தடைகளை ஏற்படுத்துகிறார்கள்.
சம்பந்தப்பட்டோரை சந்தித்து பல மாதங்கள் முறையிட்டும் ஆதிரனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தின் உதவியை நாடுகிறார். ஆனால் அங்கும் இழுத்தடிக்கப்பட்டு, நாட்கள் கடத்தப்படுவதால் தனக்கு நீதி கிடைக்காமல் போய்விடும் என்று அவநம்பிக்கை கொள்ளும் ஆதிரன், இந்தியாவில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்குத் தொடுக்கிறார்.
அதன்பிறகு என்ன நடந்தது? தடகள விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள் அம்பலமாயினவா? ஆதிரனுக்கு நீதி கிடைத்ததா? காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற அவரது லட்சியம் நிறைவேறியதா? என்பன போன்ற கேள்விகளுக்கு உருக்கமான கிளைமாக்ஸுடன் விடை அளிக்கிறது ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகனாக, தடகள வீரர் ஆதிரன் பானுமதியாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் என்ற கே.ஜே.ஆர் நடித்திருக்கிறார். ‘அறம்’, குலேபகாவலி’, ‘டிக்கிலோனா’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்துள்ள தயாரிப்பாளரான கே.ஜே.ஆர், நாயக நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது. மனுசன் தடகள விளையாட்டு வீரராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார். தன் கதாபாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் பொருந்துகிற மாதிரி தன் உடலையும் தோற்றத்தையும் சிரத்தையோடு மாற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது. தடகள விளையாட்டில் உள்ள ‘பாலிடிக்ஸ்’ மற்றும் ஊழல்களை அவர் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேயும் காட்சிகளில் நடிப்பு சூப்பர். எத்தனையோ சோதனைகள் வந்தபோதிலும் தன் முயற்சியில் பின்வாங்காமல் போராடும் அவரது கதாபாத்திரம், இன்ன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரி. பாராட்டுகள் கே.ஜே.ஆர்!
நாயகனின் அம்மாவாக, தூய்மைப் பணியாளர் பானுமதியாக ரமா நடித்திருக்கிறார். தூய்மைப் பணி செய்பவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்; உடலளவிலும், மனதளவிலும் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதை தனது நடிப்பு மூலம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தான் பெற்ற பிள்ளைகள் என்றாவது நல்ல நிலைக்கு வந்துவிட மாட்டார்களா என்ற ஏக்கத்துடன் உழைக்கும் தாயை அசலாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
நாயகனின் தங்கை செல்வியாக வரும் இசபெல்லா, நாயகனுக்குத் தீங்கிழைக்கும் வில்லன் மனோஜாக வரும் அஜித் கோஷி, நாயகனுக்கு ஆதரவாக இருக்கும் பயிற்சியாளர் ருத்ராவாக வரும் வசுந்தரா, நீதிபதியாக வரும் ரங்கராஜ் பாண்டே, அட்வகேட் ஜெனரல் ஆண்டாளாக வரும் விஜி வெங்கடேஷ், அமைச்சராக வரும் மன்சூர் அலிகான், சத்யாவாக வரும் சிந்தூரி விஸ்வநாத், மற்றும் செல்வி, ஜானகி, ராம்ஜி, அருள் டி சங்கர், கார்த்திக், அந்தோணி, ஷான், விமல்குமார் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறை இல்லாமல் வழங்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றிய தென்பாதியான் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். விளிம்புநிலை தடகள வீரருக்கு திறமை இருந்தாலும் அவருக்கு ஏற்படுத்தப்படும் தடைகள், விளையாட்டுத் துறையில் புரையோடிக் கிடக்கும் ஊழல்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, துணிச்சலாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். நீதிமன்ற காட்சிகள் ஈர்க்கின்றன. தூய்மைப் பணியாளர்களுக்கு அருவருப்பினால் ஏற்படும் உளவியல் பாதிப்பை காட்சிகள் மூலம் உணர்த்திய விதம் பாராட்டுக்குரியது. பார்வையாளர்களுக்குத் தெரியாத பல நுணுக்கமான தகவல்களை எடுத்துச் சொல்லும் விதமாய் படம் informative-ஆக இருப்பது உண்மை. அதே நேரத்தில் இது எண்டர்டைனிங்-ஆக இல்லாதது பெருங்குறை.
ஜிப்ரான் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை திரைக்கதையோடு பயணித்திருக்கிறது.
தடகள விளையாட்டை நேரடியாகப் பார்த்த திருப்தியை தனது ஒளிப்பதிவு மூலம் நிறைவாகக் கொடுத்திருக்கிறார் ஏ.விஸ்வநாத்.
‘அங்கீகாரம்’ – ’ஸ்போர்ட்ஸ்’ ரசிகர்கள், விளையாட்டுத் துறையில் நடக்கும் ’பாலிடிக்ஸ்’ மற்றும் ஊழல்களைத் தெரிந்துகொள்ள இப்படத்தைப் பார்த்து மகிழலாம்!
ரேட்டிங்: 3/5
