கையால் மின்பெட்டியை உடைத்து பற்களால் மின்வயரை கடித்து உயிர்விட்டாராம் ராம்குமார்!

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார், மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறிவருகின்றன.

இதை ராம்குமாரின் குடும்பத்தார், அவர்களது வக்கீல் ராம்ராஜ், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, ஆளும் அதிமுக நீங்கலாக இதர அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. ராம்குமார் சிறையில் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவர்கள் திடமாக நம்புகிறார்கள். எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் கோரிவருகிறார்கள்.

அவர்களுக்கு பதில் அளிக்கும்விதமாக, ‘ராம்குமார் மரணம் நிகழ்ந்தது எப்படி’ என விவரித்து, வழக்கம் போல் “பெயர் குறிப்பிட விரும்பாத” ஒரு சிறைத்துறை அதிகாரி கூறியிருப்பதாவது:

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் குற்றவாளி இல்லை என்று சந்தேகத்தை எழுப்பியவர்கள் தான், இப்போது ராம்குமார் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர்.

சுவாதி கொலை வழக்கை பொறுத்தமட்டில் ராம்குமார் தான் குற்றவாளி என்பதற்கு, தகவல் தொழில்நுட்பரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், கண் கண்ட சாட்சியங்களின் அடிப்படையிலும் போலீசார் பலதரப்பட்ட ஆதாரங்களை திரட்டி உள்ளனர். ஆனால் அந்த ஆதாரங்களை எல்லாம் இதே நபர்கள் ஏற்க மறுத்தனர்.

ராம்குமாரின் சட்டையில் சுவாதியின் ரத்தக் கறை எப்படி வந்தது? சுவாதியின் செல்போன் ராம்குமாரின் வீட்டுக்கு எப்படி போனது? கொலை நடந்த நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் ராம்குமார் உருவம் பல கோணங்களில் பதிவானது எப்படி? இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் இவர்கள் நேரடியாக பதில் சொல்ல மாட்டார்கள்.

தற்போது புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்த சம்பவத்தையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ராம்குமார் கொலை செய்யப்பட்டார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு ஆகும்.

சம்பவம் நடந்த நேரம் மாலை 4.45 மணி. கைதிகளுக்கு இரவு உணவு கொடுக்கும் சமயம் அது. ஏராளமான கைதிகள் அப்போது அங்கே கூடி இருந்துள்ளனர். அவ்வளவு கைதிகள் இருந்த நேரத்தில் ராம்குமாரை எப்படி கொலை செய்ய முடியும்?.

ராம்குமார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பகுதி ‘டிஸ்பன்சரி பிளாக்’ என்று அழைக்கப்படும். இது உயர் பாதுகாப்பு பகுதி ஆகும். அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ராம்குமார் மட்டும் தனிமை சிறையில் அடைக்கப்படவில்லை. அவருடன் 27 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

ராம்குமார் மன அழுத்தத்தில் இருந்தது உண்மை. அதனால் தான் சம்பவத்தன்று அவர் மதிய உணவு சாப்பிடவில்லை. அவரை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க பேச்சிமுத்து என்ற 2–ம் நிலை காவலர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மற்ற கைதிகளோடு ராம்குமார் சாப்பிட வந்தபோது காவலர் பேச்சிமுத்துவும் உடன் இருந்து உள்ளார். தண்ணீர் குடித்துவிட்டு வருகிறேன் என்று ராம்குமார் சென்றுள்ளார். அவர் மின்சார பெட்டியை தனது கையால் உடைத்து, பற்களால் மின்சார வயரை கடித்து விடுவார் என்று காவலர் பேச்சிமுத்து எதிர்பார்க்கவில்லை. அவர் சுமார் 10 அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்தார். அவருடன் 4 கைதிகளும் இருந்தனர்.

ராம்குமார் மின்சார வயரை கடித்து தனக்கு தானே மின்சாரத்தை பாய்ச்சிக்கொண்டதை பார்த்தவுடன் காவலர் பேச்சிமுத்து நிலைகுலைந்துபோனார். அவருடன் இருந்த 4 கைதிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். இருந்தாலும், சுதாரித்துக்கொண்ட பேச்சிமுத்து, உடனே ஓடிச்சென்று போர்வையை எடுத்துவந்து, அதை முறுக்கி ராம்குமார் மீது அடித்து இருக்கிறார். அதற்குள் ராம்குமார் தூக்கி வீசப்பட்டு கீழே சாய்ந்துவிட்டார்.

இது எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. ராம்குமார் அரசுக்கும் எதிரி அல்ல. போலீசுக்கும் எதிரி அல்ல. சிறை காவலர்களுக்கும் எதிரி அல்ல. அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்? ஏன் இது போன்ற குற்றச்சாட்டுக்களை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

ராம்குமார் தண்ணீர் குடிக்கச் சென்றிருந்தபோது சிறை காவலர் பேச்சிமுத்துவும் உடன் சென்றிருக்க வேண்டும். அவர் உடன் செல்லாமல் சற்று தொலைவில் நின்றது தவறு தான். ஏனென்றால் ராம்குமார் மதியம் சாப்பிடாமல் இருந்ததால் அவரை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பேச்சிமுத்துவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ராம்குமார் தலித் என்பதால் வேண்டும் என்றே சிறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால், ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த புழல் சிறையில் சூப்பிரண்டாக பணியாற்றும் அன்பழகன் மதுரைக்காரர். அவரும் தலித் இனத்தை சேர்ந்தவர். இன்னும் ஒரு மாதத்தில் அவர் ஓய்வு பெற உள்ளார். மேலும், ராம்குமார் அடைக்கப்பட்டுள்ள சிறை பிளாக்கின் உதவி ஜெயிலராக பணியாற்றும் ராஜேந்திரனும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் தான். அவர்களுடைய பாதுகாப்பில் இருந்த ராம்குமாரை எப்படி கொலை செய்ய முடியும்?.

இது போன்ற பல தகவல்கள் ‘ராம்குமார் கொலை செய்யப்படவில்லை’ என்பதற்கு ஆதாரமாக சொல்லலாம். மாஜிஸ்திரேட்டு விசாரணையில் உண்மை தெரிய வரும்.

இவ்வாறு அந்த சிறைத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

சிறைத்துறை தரப்புக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் “பெயர் குறிப்பிட விரும்பாத” உளவியல் நிபுணர் ஒருவர் கூறியிருப்பதாவது:

போலீசார் கைது செய்தபோதே, ராம்குமார் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றவர். அதே மனநிலை தான் அவரிடம் தொடர்ந்து காணப்பட்டது. அவர் யாரிடமும் மனம்விட்டு பேசமாட்டார். வாரத்துக்கு ஒரு முறை நான் அவரை சந்தித்து மனதளவில் அவரை தேற்றி இருக்கிறேன்.

என்னிடம்கூட மனம்விட்டு பேச மாட்டார். நான் சொல்வதை அமைதியாக கேட்டுக் கொண்டிருப்பார். அவரை பயமுறுத்தும் விதத்தில் சிலர் பேசி இருக்கலாம். சில கைதிகள் கூட அவரை பயமுறுத்தும் வண்ணம் பேசியதாக தகவல் உண்டு. அதுபோன்ற கைதிகளை ராம்குமாரை சந்திக்க விடாமல் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர்.

ராம்குமாரின் சாவுக்கு கண்டிப்பாக சிலரின் தூண்டுதல் பின்னணியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது. ராம்குமாரை கொல்வதற்கு எந்தவித காரணமும் இல்லை. சிறையில் அதற்கான முகாந்திரமும் இல்லை. மாஜிஸ்திரேட்டு விசாரணையில் கண்டிப்பாக உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அந்த உளவியல் நிபுணர் கூறியுள்ளார்.

சுவாதி கொலைக்கு காவல்துறை ஒரு ‘திரைக்கதை’ தயாரித்துள்ளதைப் போல, ராம்குமாரின் மர்மச்சாவுக்கு சிறைத்துறை ஒரு ‘திரைக்கதை’ தயாரித்துள்ளது. ஆனால் இந்த இரண்டு திரைக்கதைகளிலுமே ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் மற்றும் ஓட்டைகள் இருக்கின்றன என்பதுதான் சோகம். மெய்யான நீதிவிசாரணையின்போது இந்த திரைக்கதைகள் ரிலீஸ் செய்யப்பட்டால், அட்டர் ஃபிளாப் ஆகும் என்பது நிச்சயம்.