ஜெயலலிதா உடல்நிலை: சென்னை உயர்நீதிமன்றம் திடீர் பல்டி!  

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக செயல்பாட்டாளர் டிராபிக் ராமசாமி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் டிராபிக் ராமசாமி கூறியிருந்ததாவது:

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நள்ளிரவு முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் நலமாக உள்ளார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது பத்திரிகை குறிப்பு அனுப்புகிறது. ஆனால், லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்துச் செல்கிறார். முதல்வருக்கு உண்மையிலேயே என்ன பிரச்சினை என்பது இதுவரை தெரியவில்லை.

அவர் தமிழகத்தின் மதிப்புமிக்க முதல்வர். ஆனால், அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது பரவி வருகிறது. இதனால் தமிழக மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆளுநர், மத்திய அமைச்சர் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தும்கூட முதல்வரின் உண்மையான உடல் நிலை குறித்த தகவல்களை வெளியே சொல்லவில்லை.

முதல்வரின் உடல்நிலை குறித்தும், காவிரி பிரச்சினை போன்ற முக்கிய விவகாரங்களில் அதிகாரிகளுக்கு தகுந்த உத்தரவை யார் பிறப்பிக்கிறார்கள் என்பது குறித்தும் விளக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 1-ம் தேதி ஆளுநரின் முதன்மைச் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே, முதல்வர் பரிபூரணமாக உடல்நலம் பெற்று நலமுடன் பணிக்குத் திரும்பும் வரை தற்காலிக முதல்வரை நியமிக்க வேண்டும். அதுபோல முதல்வரின் உடல்நிலை குறித்து உண்மை நிலவரங்களையும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு டிராபிக் ராமசாமி தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனையடுத்து நீதிபதிகள் எம்.என்.சுந்தரேசன், ஆர்.மகாதேவன் ஆகியோ அடங்கிய அமர்வு முன் ஆஜரான மனுதாரர் டிராபிக் ராமசாமி, “தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரிய எனது மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை” என்றார்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஸ்ரீமணி சங்கர், “தனிப்பட்ட உரிமை என்ற ஒன்று இருக்கிறது. அதன் அடிப்படையில் எல்லாவற்றையும் பொதுமக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அந்த மாநில அரசின் கடமை. அவ்வாறு தெரியப்படுத்துவதில் தவறில்லை” என்றனர்.

மீண்டும் குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர், “முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன” என்றார்.

அதற்கு நீதிபதிகள், “தனியார் மருத்துவமனையின் அறிக்கை வெளியிடப்பட்டாலும் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பது கடமையாகும்” என்றனர்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக அரசிடம் ஆலோசித்து விளக்கமளிப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். விசாரணை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) டிராபிக் ராமசாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளுமாறு அவரது வழக்கறிஞர் கணேசன் கோரினார்.

அதற்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் ஆகியோர், “உடல்நிலை தொடர்பான விவரம் தனிநபர் உரிமை சார்ந்தது. தமிழக முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது புகைப்படத்தையும், அவரது உடல்நிலை அறிக்கையையும் கோருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. தற்காலிக முதல்வர் நியமிக்கக் கோருவதையும் ஏற்க முடியாது. விளம்பரத்துக்காக அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றனர்.

“முதல்வர் பதவி என்பது PUBLIC OFFICE. எனவே, மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அந்த மாநில அரசின் கடமை. தனியார் மருத்துவமனையின் அறிக்கை வெளியிடப்பட்டாலும் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பது கடமையாகும்” என்று கடந்த செவ்வாய்க்கிழமை கருத்துத் தெரிவித்த அதே உயர்நீதிமன்றம், அந்த கருத்துக்கு நேர்முரணாக இன்று, “உடல்நிலை தொடர்பான விவரம் தனிநபர் உரிமை சார்ந்தது. தமிழக முதல்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது புகைப்படத்தையும், அவரது உடல்நிலை அறிக்கையையும் கோருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” என்று கூறியிருக்கிறது.

ஏன்?

எங்களுக்குப் புரியவில்லை…

உங்களுக்கு…?

– அமரகீதன்