தமிழக அதிகாரி ஆணவத்தால் மின்சாரத்தில் விழுந்து உயிர்விடும் அகதி – வீடியோ

மதுரை – உச்சபட்டி அகதி முகாமில் தற்கொலை செய்துகொண்ட ரவியின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு எவிடென்ஸ் அமைப்பு உடனடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இறந்துபோன ரவி அவர்களுக்கு வயது 48. அவரது மனைவியின் பெயர் மஞ்சுளா தேவி. இவர்களுக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

தம்முடைய 22 வது வயதில் அகதியாக தமிழகம் வந்து உள்ளார் ரவி. முதல் 14 வருடம் ராமேஸ்வரம் – மண்டபம் முகாமிலும், அடுத்து 12 வருடம் உச்சபட்டியிலும் இருந்து இருக்கிறார்.

இவரது இளைய மகன் பெயர் பிரதீபன். வயது 13. இந்த சிறுவனுக்கு இரத்தம் உறையாத நோய் இருக்கிறது. சின்ன காயம் அடைந்தாலும் இரத்தம் வந்துகொண்டே இருக்கும். இந்த சிறுவனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார் ரவி.

இந்நிலையில் மாதந்தோறும் மூன்று தடவை வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் இந்த அகதி முகாமிற்கு சோதனை செய்ய வருவார். அதன் அடிப்படையில் இன்று ராஜேந்திரன் வந்து இருக்கிறார்.

ராஜேந்திரன் கடந்த ஒரு வருடமாக இங்கு பொறுப்பில் இருந்து வருகிறார். இங்கு உள்ள அகதிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளுவார். அதட்டலாக மிரட்டலாக பேசுவது இவரின் இயல்பு.

இந்த முகாமில் 560 குடும்பங்களை சேர்ந்த சுமார் 2500 அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் வயதானவர்கள். நோயாளிகள். சிலர் மாற்று திறனாளிகள்.

இந்த ராஜேந்திரன் முகாமின் நுழைவு வாயிலில் உட்கார்ந்துகொண்டு எல்லோரையும் அழைத்து வர சொல்லுவாராம். முடியாதவர்களை அங்கு உள்ள இளைஞர்கள் தூக்கி செல்லுவார்கள். “எப்போதும் சிடுசிடு என்றே எங்களிடம் ராஜேந்திரன் நடந்து கொள்ளுவார்” என்று இங்கு உள்ள மக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வருவாய் அலுவலர் ராஜேந்திரனிடம் சென்று ரவி அவர்கள் “என் மகனை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறேன். அவனை அழைத்து வர முடியாது. நீங்கள் வாருங்கள். அழைத்துச் செல்லுகிறேன்” என்று கூற, “அது எல்லாம் முடியாது. உன் மகன் இங்கு உடனடியாக வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

உடனே ரவி மருத்துவ அறிக்கைகளை எடுத்துச் சென்று ராஜேந்திரனிடம் காட்டி, “அய்யா என் மகனுக்கு ஆபத்தான நோய். தயவு செய்து கருணை காட்டுங்கள்” என்று காலில் விழுந்து கெஞ்சி இருக்கிறார்.

“உன் மகன் இறந்தால் எனக்கு என்ன? இருந்தால் எனக்கு என்ன? எனக்கு தேவை கணக்கு” என்று கொஞ்சம்கூட கரிசனை இல்லாமல் பேசி இருக்கிறார்.

இதில் மனரீதியாக பாதிக்கப்பட்ட ரவி, மின்சார டவரில் ஏறி மின் கம்பிகளில் விழுந்து தற்கொலை செய்துகொண்டு உள்ளார்.

இந்த சம்பவம் பிற்பகல் இரண்டு மணி அளவில் நடந்து உள்ளது.

ராஜேந்திரன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். அவரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். ரவியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

இந்த கொடுமையை எமது கவனத்திற்கு கொண்டு வந்தவர்கள் வழக்கறிஞர் ராஜேந்திரன் மற்றும் கனி ஓவியா வெற்றி வேலன், சுவாமிநாதன் சுப்பிரமணியன் ஆகியோர்.

– எவிடன்ஸ் கதிர்

ரவி மின்சாரத்தில் விழுந்து உயிர்விடும் நெஞ்சை பதற வைக்கும் காட்சி – வீடியோ

https://youtu.be/d-tCZ-VG-5g