“எமது பயணம் தொய்வின்றி தொடரும்”: திருமாவளவன் அறிக்கை!

“எமது நோக்கம் உன்னதமானது. எமது பயணம் தொய்வின்றி தொடரும்” என்று மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி இருப்பதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 2016-சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எமது கூட்டணி முன்வைத்த ‘மாற்று அரசியலுக்கு’ ஆதரவாக அமையவில்லை என்பது சற்று அதிர்ச்சி அளிக்கவே செய்கிறது. எனினும், மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்.

எமது நோக்கம் உன்னதமானது; மக்கள் நலன்களை அடிப்படையாகக் கொண்டது. எமது முயற்சியும் உழைப்பும் தூய்மையானது;தொலைநோக்குப் பார்வை கொண்டது.

நாங்கள் விதைத்த மாற்று அரசியல் ஒரு வருடத்தில் விளையும் பயிர் அல்ல என்பதையும் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும்; இன்னும் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதையும் இந்த முடிவுகளிலிருந்து உணர்கிறோம்.

அதிமுக, திமுக ஆகிய இரு அணிகளும் வாரி இறைத்த பல்லாயிரம் கோடி ரூபாய்களையும் மீறி எமக்கு மக்கள் அளித்துள்ள ஒவ்வொரு வாக்கும் கோடி பொன்னுக்கும் மேலானது; ஊழல் கறை இல்லாதது.

எனவே, தமிழகம் முழுவதும் எமது கூட்டணியின் மாற்று அரசியலை ஏற்று வாக்களித்துள்ள லட்சக்கணக்கான மக்களுக்கும், கொளுத்தும் வெயிலிலும் அரும்பாடுபட்டு தேர்தல் பணியாற்றிய, கூட்டணி கட்சிகளான தேமுதிக, மதிமுக, தமாகா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.

மேலும், காட்டுமன்னார்கோயில் தொகுதியில் நான் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழக்க நேர்ந்தது என்றாலும், மக்கள் அளித்துள்ள இந்த மகத்தான வாக்குகள் (48, 363 ) யாவும் என் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பாசத்தையும் உறுதிப்படுத்துகிறது. எனவே, குறிப்பாக அவர்களின் காலடிகளிலும் எனது நன்றியைப் காணிக்கையாக்குகிறேன்.

அத்துடன், நெடுங்காலமாக ஆட்சியதிகாரத்தை நுகர்வதற்கு வாய்ப்பே இல்லாத விளிம்புநிலை மக்களுக்குரிய நலன்களை முன்னிறுத்தும் ‘கூட்டணி ஆட்சி’ உள்ளிட்ட எமது மாற்று அரசியலுக்கான பயணம் மிகுந்த நம்பிக்கையுடன் மேலும் தொய்வின்றித் தொடரும்.

இவ்வாறு தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.