“சுவாதி படுகொலை: கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் முருகானந்தம்?”

“சுவாதியை படுகொலை செய்ய கூலிப்படையை ஏற்பாடு செய்தவர் பாஜகவின் கருப்பு (என்ற) முருகானந்தம். அவர் ஏற்பாடு செய்த ஆட்கள்தான் சுவாதியை கொலை செய்தனர். கருப்பு (எ) முருகானந்தம்தான் ராம்குமாரையும் இந்த வழக்கில் சிக்க வைத்தவர். உண்மையி்ல் ராம்குமார் பலி ஆடு” என்று பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி புது தகவல் வெளியிட்டுள்ளார்.

சுவாதி படுகொலை தொடர்பாக தனிப்பட்ட முறையில் புலனாய்வு செய்து, பல்வேறு பரபரப்பான திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருபவர் தமிழச்சி. இதன்மூலம், சுவாதி படுகொலை விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் சென்றிருப்பவர் அவர்.

“சுவாதி படுகொலை: தென்காசியில் ஏன் குற்றவாளிகள் கிடைக்கிறார்கள்?” என்ற தலைப்பில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் பதிவு:-

தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை இந்து முன்னணியைச் சேர்ந்தவர். இவர் முன்பு ‘பாஜக’ கட்சியிலும், பிறகு ‘விடுதலை சிறுத்தைகள்’ கட்சியிலும் இருந்தவர். இதற்கு பிறகே ‘இந்து முன்னணி’க்குள் நுழைந்தார். இவர் மீது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான புகார்கள் உண்டு.

தஞ்சையைச் சேர்ந்த பா.ஜ.க.வின் மாநில இளைஞரணிச் செயலாளர் ‘கருப்பு (எ) முருகானந்தம்’. மதக் கலவரம் ஏற்படுத்துவது, சிறுபான்மையினர் மீது வன்முறை பிரயோகிப்பது, கொலைகள் செய்வது உட்பட 38 வழக்குப் பதிவுகளும், அதில் 20 வழக்குகள் விசாரணையிலும் உள்ளன.

0a1b

கிட்டத்தட்ட 40 பேர்கள் வரை படுகொலை செய்த சாதனைக்கு உரியவர் என்று கருதியதாலோ என்னவோ, அதையே சிறப்புத் தகுதியாக பெருமை கொண்டு, சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு, பிரதமர் மோடி இவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது தனிக்கதை; என்றாலும் கருப்பு முருகானந்தம் என்பவர் யார்? அவருடைய அரசியல் பலம் என்ன? சட்ட விரோத நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதற்கான சிறு வரையறை தான் இந்த ‘அறிமுக’ குறிப்பு.

இந்த கருப்பு முருகானந்தத்தின் கூலிப்படையை நிர்வகிப்பது, அப்படைக்கு ஆள் சேர்ப்பது, பெண்களை சப்ளை செய்வது போன்ற பங்களிப்பைச் செய்து வருபவர் தென்காசியைச் சேர்ந்த தங்கதுரை.

சுவாதியை படுகொலை செய்ய வேண்டும் என்ற திட்டம் உருவாக்கப்பட்ட போது ‘கருப்பு (எ) முருகானந்தம்’ தான் அந்த பாதகத்தைச் செய்யத் துணிந்தார். அதற்காக அவருடைய நெருங்கிய நண்பரான ‘தென்காசி’ தங்கதுரை ஆட்களை சப்ளை செய்தார்.

முத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி என்ற அந்த கூலி ஆட்கள்தான் சுவாதியை கொன்றது. தமிழக காவல்துறையினர் திரும்பத் திரும்ப சுவாதியை வெட்டியது ஒருவர் தான் என்பதை தொடர் செய்தியாய் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கிறது. அது பொய்.

சுவாதியை கொல்லும்போது நடந்த உண்மைச் சம்பவத்தை சொல்ல முற்பட்டவர்களை, அங்கிருந்த மேலும் பல கூலிப்படை ஆட்கள், ‘ஒழுங்கா வூடு போய் சேர மாட்ட…’ என்ற மிரட்டல்களோடு அந்த உண்மையையும் சுவாதியோடு சாகடித்தனர்.

சுவாதியை கொன்று அந்த பழியை இஸ்லாமிய இளைஞர் மீது போட வேண்டும். அதன் மூலமாக இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்த வேண்டும் என்பது இந்து பரிவார அமைப்புகளின் நோக்கம். அதைத்தான் சுவாதி கொன்ற மறுநாளே இணையதளங்களில் வதந்தியை பரப்ப அது வேறு கோணத்தில் குளறுபடியை ஏற்படுத்தி விட்டது.

இப்போது மீண்டும் இந்து பரிவார அமைப்புகளுக்கு நெருக்கடி. அதே கூலிப்படைகளிடம் பலி ஆடு வேண்டும் என்கிறார்கள். அதற்காக காவல்துறையினரோடு சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் ஒரு தலைகாதல். அதற்கு ஹீரோ வேண்டுமே?

முத்துக்குமார், இஸ்மாயில், வீராசாமி, தங்கதுரை தென்காசி கிராமங்களில் தேடித் திரிந்ததில் கிடைத்த ஹீரோதான் ராம்குமார். இதற்கு பிறகே அதிர்ச்சியளிக்கும் திட்டங்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்களோடு நடத்தப்பட்டது. ஒரு சில போலீசோடு வந்தவர்கள் ‘தென்காசி’ தங்கதுரையின் கூலிப்படைகள். அவர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தவர்கள்.

இந்த கொலையாளிகளுடன் சுவாதியின் அப்பாவிற்கும், சித்தாப்பாவிற்கும் என்ன தொடர்பு? இந்த கூலிப்படைகளோடு போனில் பேசினார்களா என்று காவல்துறையினால் கண்டுபிடிக்க முடியாதா? அவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கும் ‘Airtel’ நிறுவனத்தில் காவல்துறையினரால் தகவல் பெற முடியாதா? எனக்கே கிடைத்திருக்கிறது; காவல்துறையினருக்கா கிடைக்காது?

சுவாதி படுகொலை தொடர்பான விசாரணையில் ஈகோ பிரச்சனை என்னவென்றால், “கொலையாளியை இரண்டே வாரத்தில் பிடித்து விட்டோம்” என்று தமிழக முதல்வரிடம் பரிசு பெற்றதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டு, “நாங்கள் பிடித்த பலி ஆடு (ராம்குமார்) குருமா தான்” என்று காவல்துறையினர் சண்டித்தனம் செய்துகொண்டிருந்தால் வழக்கு விசாரணை எப்படி வேறு கோணத்திற்கு நகர்த்தப்படும்?

– தமிழச்சி

20/08/2016