“சிங்கத்துடன் மல்லுக்கட்ட தயாரா?”: நீதிபதிகளுக்கு பதில் அளிக்கும் பாடல் நாளை வெளியாகிறது!

அமீர் பிலிம் கார்பொரேஷன் சார்பில் இயக்குநர் அமீர் தயாரித்து இயக்கிவரும் திரைப்படம் ‘சந்தனத்தேவன்’. தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை, மிக முக்கியமாக ‘ஜல்லிக்கட்டு’ எனப்படும் ஏறு தழுவுதலின் பெருமையை  கூறும் விதத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் ஆர்யா, அவருடைய சகோதரர் சத்யா, அமீர் ஆகியோர் முண்ணணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். பாடல்களை வைரமுத்து எழுத, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

‘சந்தனத்தேவன்’  படத்தின் அறிமுக விழா இன்று சென்னையில் விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் அமீர், ஆர்யா, சத்யா, வைரமுத்து, யுவன்ஷங்கர் ராஜா, கதாநாயகி அதித்தி, ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன், கலை இயக்குநர் ரெம்போன் பால்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் வைரமுத்து பேசுகையில், “ஜல்லிக்கட்டு என்பதோ, மாடு பிடித்தல் என்பதோ சரியான தமிழ் சொற்கள் கிடையாது. ‘ஏறு தழுவுதல்’ என்பதை சரியான தமிழ் சொல். அந்த ஏறு தழுவதலையும், நம் தமிழ் மண்ணின் கலாச்சார பெருமையையும் எடுத்துக்கூறும் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தில் பணியாற்றி இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

நெஞ்சில் அறைந்த சம்பவங்களைக் கொண்டு ஒரு கதையை உருவாக்கினால் தான் அது ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும். அப்படி ஒரு படைப்பு தான் இந்த ‘சந்தனத்தேவன்’.

இளையராஜாவின் மகன், நான் தூக்கி வளர்த்த பிள்ளை யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இளையராஜாவின் விரல்கள் ஹார்மோனிய பெட்டியில் பட்டதுமே, குறிப்பிட்ட  பாடலுக்கு ஏற்ற இசை பிறந்துவிடும். அதே ஞானத்தையும், திறமையையும் அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜா பெற்று இருக்கிறார். ‘சந்தனத்தேவன்’ ஒரு வெற்றி களஞ்சியம்” என்றார் வைரமுத்து.

இயக்குநர் அமீர் பேசுகையில், “தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் உரிய திரைப்படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் சில காரணங்களால் வர்த்தக உலகின் மீது சிதறியது. ஆனால் இனி நான் எடுக்கும் படங்கள் யாவும் எம் தமிழ் மண்ணை சார்ந்து தான் இருக்கும். அதனை என்னுடைய ‘சந்தனத்தேவன்’ உறுதிப்படுத்தும்.

அன்றைய காலத்தில் தமிழனுக்கு இரண்டு சொத்துக்கள் மட்டும் தான் இருந்தது. ஒன்று அசையும் சொத்தான மாடு, மற்றொன்று அசையா சொத்தான மண்.

பொதுவாக, எல்லா திரைப்பட அறிமுக விழாக்களிலும் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை பற்றி தான் பேசுவார்கள். ஆனால் இந்த ‘சந்தனத்தேவன்’ படத்தின் அறிமுக விழாவில் நம் தாய் மண்ணின் பெருமையை பற்றி பேசுவதில், நான் பெருமை கொள்கிறேன்.

தொன்று தொட்ட  காலம் முதல்  கால்நடைகளை குடும்பத்தில் ஒரு உறுப்பினராக கருதுபவர்கள் தமிழர்கள். அவர்களின் உணர்வுகளை உச்சநீதிமன்றம் புரிந்துகொள்ளா விட்டாலும் பரவாயில்லை, ஆனால் மாட்டிற்கு பதிலாக சிங்கத்துடனும், புலியுடனும் மல்லுக்கட்ட தயாரா? என்று அவர்கள் கேட்டது வருத்தமளிக்கிறது. நம் மண்ணின் பெருமையை கூறும் விதத்தில் நாளை  ‘சந்தனத்தேவன்’  படத்தின் ஒரு பாடல் பதிவு செய்து, அதை நாளை மாலையே வெளியிட முடிவு செய்திருக்கிறோம். உச்சநீதிமன்றம் கேட்ட அந்த கேள்விக்கு, இந்த பாடல் பதிலளிக்கும்” என்றார் அமீர்.