“மோடியின் பொருளாதார அறிவை ஒரு தபால் தலையின் பின்புறத்தில் எழுதிவிட முடியும்!”

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக புழக்கத்தில் உள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஆனால், மீண்டும் புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என கூறியுள்ளார். இது புதிராக உள்ளது.

அதிக மதிப்பு கொண்ட 2,000 ரூபாய் நோட்டை வெளியிட்டால் எப்படி கருப்புப் பணம் உருவாவதை ஒழிக்க முடியும்? இது கருப்பு பணத்தை மேலும் பதுக்கவே உதவும். இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

கருப்புப் பண ஒழிப்பை காங்கிரஸ் ஆதரிக்கும். ஆனால், மத்திய அரசின் இந்நடவடிக்கையால் சாதாரண பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, பாதிப்பு ஏற்படாத வகையில் விரைவாக புதிய ரூபாய் நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இத்தருணத்தில் Gnanabharathi Chinnasamy-ன் ஒரு பதிவு:-

 “முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. இருந்தும் அவர் மோடி பற்றி கூறிய ஒரு கருத்து மட்டும் எனக்கு மிகவும் பிடித்த கருத்து. அது:

‘மோடியின் பொருளாதார அறிவைப் பற்றி ஒரு போஸ்டல் ஸ்டாம்பின் பின்புறத்தில் எழுதி விட முடியும்’ என்பது.

மோடிக்கு பொருளாதாரத்தில் உள்ள அறியாமையை கவித்துவமாக இந்த கருத்து சொல்வதனால் ப.சி.யின் இந்த கருத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது.”