நடிகை கௌதமியுடன் மோதலா? நடந்தது என்ன? – ஸ்ருதிஹாசன் விளக்கம்!

நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்துவரும் திரைப்படம் ‘சபாஷ் நாயுடு’. இந்த படத்தில் அவருடைய மூத்தமகள் ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமல்ஹாசனின் வாழ்க்கைத் துணையும் நடிகையுமான கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில நாட்களாக, “சபாஷ் நாயுடு’ படத்தில் கௌதமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுவது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை” என்றொரு தகவல் பரவி வருகிறது. ஆனால், “இது வெறும் கட்டுக்கதை” என்று சொல்லி இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

இது குறித்து ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பு வருமாறு:

தனெக்கென்று ஒரு தனி ஸ்டைல், தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படத்திலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அது பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.

தன்னுடைய தந்தையின் ‘சபாஷ் நாயுடு” படத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில்கொண்டு, அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் கௌதமி.

ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்ற மாதிரி கதாபாத்திரத்தோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார்.

ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கும், பாத்திர படைப்புக்கும்  ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று  கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு  மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்’.

சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி ஆகிய இருவர் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது என்கிறார் அவர்கள் இருவரையும் நன்கு அறிந்த ஒருவர். “ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.”

இவ்வாறு ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.