பெத்தி – விமர்சனம்

நடிப்பு: ராம்சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி மற்றும் பலர்

இயக்கம், திரைக்கதை: புஜ்ஜி பாபு சனா

ஒளிப்பதிவு: ஆர்.ரத்னவேலு

படத்தொகுப்பு: நவீன் நூலி

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா

தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்

தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்

இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா

பத்திரிகை தொடர்பு (தமிழ்) : யுவராஜ்.

ஒரு மலையடிவாரத்தில் எந்த அடையாளமும் இல்லாமல் வாழும் சாமானியன் ஒருவன், நம் நாட்டின் அடையாளமாக மாறும் கதை இது.

நம் நாடு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைக் குவிக்க முடியவில்லை என்று வேதனைப்படுகிறார் விளையாட்டுத் துறை அமைச்சர். திறமையான இளம் விளையாட்டு வீரர்களைத் தேடி விஜயநகரத்திற்கு தேர்வுக்குழு அதிகாரி ஒருவரை (பொம்மன் இரானி) அனுப்புகிறார்.

விஜயநகரத்திற்கு வரும் தேர்வுக்குழு அதிகாரிக்கு, அங்குள்ள விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் ‘பெத்தி’ என்பவர் தான் மிகப் பெரிய உத்வேகமாக விளங்குகிறார் என்பது தெரியவருகிறது.

“யார் இந்த பெத்தி?” என்று அதிகாரி விசாரிக்கும்போது, ஒரு பழங்குடியின நபர் அவரைத் தன் மலைகிராமத்திற்கு அழைத்துச் சென்று, ‘பெத்தி’யின் கதையைக் கூறுகிறார்.

எந்தவிதமான பாதையோ, அடிப்படை வசதிகளோ இல்லாத ஒரு மலையடிவாரத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த, படிப்பறிவில்லாத ஒரு இளைஞர் தான் இந்த பெத்தி (ராம்சரண்).

அந்த ஊர் மக்கள் அனைவரும் பிழைப்பிற்காக விஜயநகரத்திற்குச் சென்று வருகிறார்கள்.

பெத்தியைக் காசு கொடுத்து விளையாடும் ஒரு ‘வாடகை ஆட்டக்காரராக’ ஏலத்தில் எடுத்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்கிறார்கள். பெத்தி அடித்தால் சிக்ஸர், அவர் களத்தில் இறங்கி ஆடினால் வெற்றி என்ற அளவில் பெத்தி பிரபலமானவராக இருக்கிறார்.

அந்த ஊர் நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் சுபத்ர ராஜுவின் (ராவ் ரமேஷ்) மகள் அச்சியம்மா (ஜான்வி கபூர்) மீது பெத்திக்கு முதல் பார்வையிலேயே காதல் மலர்கிறது.

மலையடிவாரக் கிராமத்தைச் சேர்ந்த அப்பல சூரி (ஜகபதி பாபு) என்பவர், சிவப்புக் கொடியை ஏந்தி மலைப்பாதையில் வரும் ரயிலை நிறுத்தத் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். தங்கள் ஊரில் ரயில் நின்றால், அங்கு ஒரு ரயில் நிலையம் உருவாகும் என்பதும், அதன் மூலம் குழந்தைகளுக்குக் கல்வியும் மருத்துவ வசதியும் கிடைக்கும் என்பதும் அவரது நம்பிக்கை. இதற்காக அதிகாரிகளையும், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரையும் மீண்டும் மீண்டும் சந்தித்து மனுக்களைச் சமர்ப்பிக்கிறார். ஆனால் கோரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

கிரிக்கெட் விளையாடும் பெத்தியை, விளையாட்டிலிருந்து முற்றிலுமாக ஒடுக்க வேண்டும் என்று ஊரில் உள்ள இரண்டு எதிரெதிர் கோஷ்டிகளும் ஒன்று சேர்கின்றன. இதை அவர் எப்படி எதிர்கொண்டார்? பெத்தி ஏன் ஒரு மல்யுத்த வீரராக மாறினார்? தன் கிராமத்திற்காகவும், அதன் அடையாளத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் எந்த எல்லை வரை செல்லத் தயாராக இருக்கிறார்? இறுதியில் தன் இலக்கை அவர் எப்படி அடைகிறார்? என்பதே ‘பெத்தி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் பெத்தியாக ராம் சரண் நடித்திருக்கிறார். அவர் இந்தப் படத்திற்காக தன் உடலை அசுரத்தனமாக வருத்தியுள்ளார். ஒரு பெருவீரனுக்கான எல்லா மிடுக்கோடும் திரையில் தோன்றுகிறார். அதிரடிச் சண்டைக்காட்சிகளில் நம்பும்விதமாக சுற்றிச் சுழன்று பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார்.

நாயகி அச்சியம்மாவாக ஜான்வி கபூர் நடித்திருக்கிறார். அவரை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கௌர் நாயுடு என்ற கதாபாத்திரத்தில் வரும் சிவராஜ்குமார் ஒரு நல்ல மல்யுத்த பயிற்சியாளராக கவனம் ஈர்க்கிறார்.

அப்பல சூரி என்ற கதாபாத்திரத்தில் வரும் ஜகபதி பாபு உயிரோட்டமுள்ள ஒரு கேரக்டரில் அருமையாக நடித்து பாராட்டுப் பெறுகிறார்.

திவ்யேந்து சர்மா, பொமன் இரானி, ஜான் விஜய் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்களும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்துக்குத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் புஜ்ஜி பாபு சனா. இன்றும் இந்தியாவில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் வர வழியில்லாமல் கர்ப்பிணி பெண்களைத் தூக்கிக்கொண்டு போகும் அவலநிலையை செய்திகளில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு கிராமத்தின் கதையை கதைக்கருவாக கையிலெடுத்திருக்கும் இயக்குநர், அதை ‘ரூரல் ஸ்போர்ட்ஸ் டிராமா’ ஜானரில் வளர்த்தெடுத்து, ராம்சரணின் ரசிகர்களுக்கு நல்ல ட்ரீட் கொடுக்கும் விதமாக மாஸ் காட்சிகளை அமைத்து, இதை சிறந்த பொழுதுபோக்கு கமர்ஷியல் திரைப்படமாகக் கொடுத்திருக்கிறார். மேலும், திறமையாளனை சாதி பார்த்து ஒதுக்கும் சமூகத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் இயக்குநர். பாராட்டுகள்.

ஆனால், மூன்றுமணி நேரத்திற்கும் அதிகமான படத்தின் நீளம் நம் பொறுமையைச் சோதிக்கிறது. படத்தொகுப்பாளர் நவீன் நூலி இன்னும் கத்திரி போட்டிருக்கலாம்.

இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்; குறிப்பாக பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஷாம் கௌஷல், மைபம் நபகன்டா மற்றும் சுப்ரீம் சுந்தர் ஆகியோர் சண்டைக் காட்சிகளை பிரமாதமாக வடிவமைத்துள்ளனர்.

ரத்னவேலுவின் கேமரா அசத்தல்!

’பெத்தி’ – விறுவிறுப்பான ’ரூரல் ஸ்போர்ட்ஸ் டிராமா’; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5