பரிமளா அண்ட் கோ – விமர்சனம்
நடிப்பு: ஜெயராம், ஊர்வசி, மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், ஜி.கே.எம்.தமிழ் குமரன், பூர்ணிமா ரவி, சென்ராயன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: பாண்டிராஜ்
ஒளிப்பதிவு: ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
படத்தொகுப்பு: பிரதீப் இ ராகவ்
இசை: பாக்ஸன்
கலை: டி.ராமலிங்கம்
ஸ்டண்ட்: கலை கிங்ஸ்டன்
நடனம்: சாண்டி, பாபா பாஸ்கர்
தயாரிப்பு: ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஸ்கரன், ‘தமிழ்குமரன் புரொடக்ஷன்ஸ்’ ஜி.கே.எம்.தமிழ்குமரன், ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ பாண்டிராஜ்
பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்), சிவா
அது ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம். அக்குடும்பத்தின் தலைவர் தான் பரிமளா (ஜெயராம்). ஆணுக்கு ஏன் பெண் பெயர் வைத்திருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? அவரது பாட்டியின் நினைவாக அவருக்கு அந்த பெயரை வைத்து விட்டார்களாம். பரிமளாவின் மனைவி சுதந்திரம் (ஊர்வசி). இத்தம்பதிக்கு பராசக்தி (சஞ்சனா), மதுமிதா (அனந்திகா) என இரண்டு மகள்கள். இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். இந்த குடும்பம் ஒரு வாடகை வீட்டில் சிக்கனமாக, அமைதியாக வாழ்ந்து வருகிறது.
அதே பகுதியைச் சேர்ந்த ரவுடியும், போதைப் பொருள் விற்பவருமான வர்கீஸ் (சாண்டி), பரிமளாவின் இளைய மகளான மதுமிதாவைக் காதலிப்பதாகச் சொல்லி, ‘லவ் டார்ச்சர்’ கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் மதுமிதாவின் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் தொல்லை கொடுத்து இம்சையைக் கூட்டி வருகிறார்.

ஒரு கட்டத்தில் ரவுடி வர்கீஸின் தொல்லைகளைத் தாங்க முடியாத பரிமளா குடும்பத்தினர், இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர, வர்கீஸைக் கொன்றுவிட்டால் என்ன என்று நினைக்கிறார்கள். மறுநாள் காலையில் வர்கீஸ் மர்மமான முறையில் கொலையுண்டு இறந்து கிடக்கிறார்.
இக்கொலைச் சம்பவத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் (மிஷ்கின்) தீவிரமாக விசாரிக்கிறார். அதே வேளை வர்கீஸின் அம்மா (காயத்ரி) தன் மகனைக் கொன்ற கொலைகாரனைத் தேடி வருகிறார்.
இந்நிலையில், வர்கீஸின் நண்பர் கொலை செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து வர்கீஸின் அம்மாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.
இச்சூழலில், பரிமளாவின் குடும்பத்திற்கு ஒரு மர்ம நபரிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் “உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தான் ரவுடி வர்கீஸைக் கொலை செய்திருக்கிறார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து பரிமளா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள். அவர்கள் குடும்பத்திற்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்கிறார்கள்.
எனில், வர்கீஸை கொலை செய்தது யார்? எதற்காக? வர்கீஸ் கொலைக்கும் பரிமளா குடும்பத்திற்கும் சம்மந்தம் உண்டா, இல்லையா? வர்கீஸின் நண்பரும், அம்மாவும் கூட ஏன் கொல்லப்பட்டார்கள்? தீவிர புலன் விசாரணையில் இறங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கொலைக் குற்றவாளியை (அல்லது குற்றவாளிகளை) கண்டுபிடித்தாரா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ’பரிமளா அண்ட் கோ’ படத்தின் மீதிக்கதை.

குடும்பத் தலைவர் பரிமளாவாக ஜெயராம் நடித்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு. தன் அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். ரவுடி வர்கீஸ் கொலை தொடர்பாக தன் மனைவி, மகள்கள் மீது சந்தேகம் கொண்டு, அவர்களை விசாரிக்கும் முறை சிரிக்கும் வகையில் இருக்கிறது.
குடும்பத் தலைவி சுதந்திரமாக ஊர்வசி நடித்திருக்கிறார். அவர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக, கொலை குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (மிஷ்கின்) விசாரிக்கும் காட்சியில் ஊர்வசியின் டைமிங் காமெடி பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.
மூத்த மகளாக வரும் சஞ்சனாவும், இளைய மகளாக வரும் அனந்திகாவும் கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்கள்.
வீட்டின் உரிமையாளராக வரும் யோகி பாபு வழக்கமான காமெடியில் கலக்கியிருக்கிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மிஷ்கின், கொலை குறித்து விசாரிக்கும் முறை ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. படம் அடுத்த கட்டத்திற்கு நகர துணை நிற்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக வரும் ஜிகேஎம்.தமிழ் குமரன் , ரவுடி வர்கீஸாக வரும் சாண்டி, அவரது அம்மாவாக வரும் காயத்ரி, மற்றும் சென்ராயன், சந்தோஷ் சோபன், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களை இயக்கி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்த இயக்குனர் பாண்டிராஜ், இந்தப் படத்தை குடும்பப் பின்னணியில் ஒரு க்ரைம் கதையாகக் கொடுத்திருக்கிறார். நகைச்சுவையாகச் சொல்லலாமா அல்லது சீரியஸாக சொல்லலாமா என்ற குழப்பத்துடனேயே திரைக்கதையை அமைத்து படத்தை நகர்த்தி இருக்கிறார். ஏதாவது ஒரே விதத்தில் மட்டும் திரைக்கதையை நகர்த்தியிருந்தால் அது இன்னும் ரசிக்க வைத்திருக்கலாம். மேலும், பல கிளைக் கதைகள் வேறு இருப்பது படத்தின் சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.
இசையமைப்பாளர் பாக்ஸனின் இசை, ஜார்ஜ் சி வில்லியம்ஸின் ஒளிப்பதிவு, பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.
‘பரிமளா அண்ட் கோ’ – காமெடி மற்றும் க்ரைம் த்ரில்லர் பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்!
ரேட்டிங்: 3/5
