பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை: கொடுத்த கடனை வசூலிக்க முடியாத விரக்தியில் விபரீத முடிவு?
சினிமா தயாரிப்பாளர்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் கொடுத்து, அவர்கள் திருப்பிக் கொடுக்காத விரக்தியில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட உலகில் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர், கதாசிரியர், நடிகர் என பன்முகத் திறமை வாய்ந்த கே.ராஜன் (85) நேற்றுமுன்தினம் சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கே.ராஜன் தற்கொலைக்கு அவர் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்ததும், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதும், குடும்பத்தினர் சொத்தை பிரித்துக் கேட்டதும், பண நெருக்கடி கொடுத்ததுமே காரணம் என தகவல் பரவியது.
ஆனால், கே.ராஜனின் குடும்பத்தினர் இதை முற்றிலுமாக மறுத்தனர். அவர்கள் கூறும்போது, ‘‘சில காலமாகவே கே.ராஜன் மன உளைச்சலில் இருந்தார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலருக்கு கடன் கொடுத்திருந்தார். ஆனால், அவர்கள் பணத்தை சொன்னபடி திருப்பிக் கொடுக்கவில்லை.
இதனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பணத்தை பெற்ற தயாரிப்பாளர்களிடம் தொலைபேசி மூலம் திருப்பிக்கேட்டு வந்தார். ஆனால், அவர்கள் மொத்தம் ரூ.20 கோடி வரை கடனைத் தராமல் ஏமாற்றிவிட்டனர். இதனால் அவர் வேதனைப்பட்டார். ராஜன் யாருக்கெல்லாம் கடன் கொடுத்துள்ளார் என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.
அவற்றை திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்து பணத்தை திரும்பப்பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றனர். போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கே.ராஜன் தற்கொலை தொடர்பாக பல தரப்பினரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் ரவுடிகளை வைத்து மிரட்டினார்களா என்றும் விசாரணை நடக்கிறது” என்றனர்.
கே.ராஜன் உடல் நேற்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு இன்று (19-ம் தேதி) காசிமேடு மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
கே.ராஜன் மறைவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
