எக்ஸாம் – விமர்சனம்
நடிப்பு: துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ், வசுந்தரா.சி, நரேன் மணி, ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள், துரை சுதாகர் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஏ.சற்குணம்
ஒளிப்பதிவு: அருண் அமரேந்திரன்
படத்தொகுப்பு: ரிச்சர்ட் கெவின். ஏ
இசை: சாம் சி எஸ்
ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்
தயாரிப்பு: வால்வாட்சர் பிலிம்ஸ்
தயாரிப்பாளர்கள்: கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள்: புஷ்கர் & காயத்ரி
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
’அரைக்காசு சம்பளமாக இருந்தாலும், அது அரசாங்க சம்பளமாக இருக்க வேண்டும்’ என்பது தமிழ்நாட்டு மொழி. அதனால் தான் ஓர் அரசுப் பதவியில் / அரசுப் பணியில் தங்கள் பிள்ளைகள் அமர வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பெற்றோர்கள் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். அவர்களது பிள்ளைகளும் கண் துஞ்சாமல் படிக்கிறார்கள். ஆனால், அரசுப் பணிக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள், அவற்றுக்கு பயிற்சி அளிப்பதற்காக நடத்தப்படும் கோச்சிங் மையங்கள், அவற்றின் பின்னே உள்ள கார்ப்பரேட் கொள்ளையர்கள் செய்யும் அட்டூழியங்கள் தான் எத்தனை எத்தனை…! ஏழை மற்றும் நடுத்தர வர்க்கப் பிள்ளைகளின் கனவுகளை, லட்சியங்களை கொடூரமாகக் கசக்கி எறியும் இத்தகைய அடூழியங்களை, ‘எக்ஸாம்’ என்ற ஏழு எபிசோடுகள் கொண்ட வெப்தொடரில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பிரபல திரைப்பட இயக்குநர் ஏ.சற்குணம். பிரபல திரைப்பட இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரியை கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாகக் கொண்ட இந்த வெப்தொடர் ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் தற்போது வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
கிராமப்புறத்தில் வாத்து மேய்த்துப் பிழைக்கும் ஓர் ஏழைத்தாயின் மகள் நாயகி ஜான்சி (துஷாரா விஜயன்). எப்பாடுபட்டாவது படித்து, அரசுப்பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற லட்சியத்துடன் கல்விக்காக தினமும் மைல் கணக்கில் சைக்கிளில் சென்று வருகிறார். பல சிரமங்களுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு படித்து, அரசுப்பணிக்கான போட்டித் தேர்வு எழுதச் செல்கிறார். அங்கே அவருக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது…
ஜான்சி போலவே தேர்வு மையத்திற்கு வந்திருக்கும் மரமல்லி (அதிதி பாலன்) என்ற பெண் ஒரு தாசில்தாரின் மகள். அவர் எவ்வித சிரமமும் இல்லாமல், முறைகேடாக, மோசடியாக, குறுக்கு வழியில் தேர்வு எழுதி, நோகாமல் அரசுப்பணியை அடைய எல்லாவித ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருக்கிறார். இதை கவனிக்கும் ஜான்சி, மரமல்லியை தட்டிக்கேட்க, வாய்த்தகராறு முற்றி, இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. இடையில் குறுக்கிட்டுத் தடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் போலீஸ், தாசில்தாரின் மகளான மரமல்லியை விடுவித்துவிட்டு, ஏழைப்பெண்ணான ஜான்சியை சிறைக்கு அனுப்பிவிடுகிறது.
சிறிது காலத்துக்குப்பின் சிறையிலிருந்து வெளியே வருகிறார் ஜான்சி. இப்போது போலீஸ் டி.எஸ்.பி.யாக இருக்கும் மரமல்லி, தன் பணி மாறுதல் காரணமாக, மலைப்பிரதேசத்தில் இருக்கும் புதிய இடத்திற்குச் செல்லும்போது, ஜான்சியால் கடத்தப்பட்டு, ஒரு ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்.

”நான் தான் டி.எஸ்.பி மரமல்லி” என்று ஆள்மாறாட்டம் செய்து, டி.எஸ்.பி.யாக பொறுப்பேற்றுக்கொள்ளும் ஜான்சி, அந்த பகுதியில் ‘குரூப் 1’ அரசுப்பணிக்காக நடக்க இருக்கும் போட்டித் தேர்வில் நிகழ இருக்கும் மோசடிக் குற்றங்களையும், அவற்றுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
ஜான்சியின் முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா? குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்களா, இல்லையா? என்பன போன்ற கேள்விகளுக்கு திடுக்கிடும் திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘எக்ஸாம்’ வெப்தொடர்.
நாயகியாக, வாத்து மேய்த்துப் பிழைக்கும் ஏழைத்தாயின் மகள் ஜான்சியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். கஷ்டப்பட்டு படித்தும், உழைத்தும் பலனின்றி போகும் பல லட்சம் ஏழை மாணவச் செல்வங்களின் துயரை, விரக்தியை, கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் துஷாரா.
இரண்டாவது நாயகியாக, தாசில்தாரின் மகளாக, குறுக்கு வழியில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்று போலீஸ் டி.எஸ்.பி ஆகும் மரமல்லியாக அதிதி பாலன் நடித்திருக்கிறார். பணத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற மேல்தட்டு மக்களின் மனநிலையை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிறை அதிகாரி ஜெயச்சந்திரனாக வரும் அப்பாஸ், சரண்யாவாக வரும் வசுந்தரா, குமரேசனாக வரும் நரேன் மணி, மற்றும் ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின், சரவண சக்தி, என்.அருண்மொழித்தேவன், மீனாள், துரை சுதாகர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இத்தொடரை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.சற்குணம். அரசுப் பணிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் நிகழும் மோசடிகளையும், அவற்றின் பின்னணியையும் உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். இத்தகைய மோசடிகள் எப்படி நடக்கிறது? யார் மூலம் நடக்கிறது? என்பதை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர், இம்மோசடிகளால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் எவ்விதம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் உள்ளத்தை உருக்கும் வண்ணம் சொல்லியிருக்கிறார். முறைகேடாக வினாத்தாளை கசிய விட்டதற்காக, நடத்தப்பட்ட நீட் தேர்வையே ரத்து செய்திருக்கும் இன்றைய சமூகச் சூழலில், இந்த வெப் தொடர் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். பாராட்டுகள் இயக்குநர் சற்குணம்!
சாம் சி.எஸ்ஸின் இசை, அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவு, ரிச்சர்ட் கெவினின் படத்தொகுப்பு, தினேஷ் சுப்பராயனின் ஸ்டண்ட் அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இத்தொடரின் தரத்துக்கும், நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘எக்ஸாம்’ – காலத்தின் தேவை அறிந்து படைக்கப்பட்டிருக்கும் அருமையான தொடர்; அவசியம் பார்த்து ரசிக்கலாம்!
ரேட்டிங்: 4/5
