காட்டாளன் – விமர்சனம்

நடிப்பு: ஆண்டனி வர்கீஸ், சுனில், கபீர் துகான் சிங், துஷாரா விஜயன், ராஜ் திரண்டாசு, பாரத் திவாரி, ஹரி ஷங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ், அல்போன்ஸ் புத்ரன் (சிறப்புத் தோற்றம்), லோகேஷ் கனகராஜ் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர்

இயக்கம்: பவுல் ஜார்ஜ்

கதை, திரைக்கதை: பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப்

வசனம்: உன்னி ஆர்

ஒளிப்பதிவு: ரெனாடைவ்

படத்தொகுப்பு: ஷமீர் முகமது

இசை: ரவி பஸ்ரூர்

ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ், கிச்சா கம்பக்டீ

தயாரிப்பு: ’க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஷெரீஃப் முகமது

பத்திரிகை தொடர்பு (தமிழ்): நிகில் முருகன்

’காட்டாளன்’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? எழுத்தை ஆள்பவனை ‘எழுத்தாளன்’ என்று சொல்வது போல, காட்டை ஆள்பவனை ‘காட்டாளன்’ என்ற சொல் குறிக்கிறது. இப்படக்கதை காட்டை ஆள்பவன் பற்றியது என்பதால், இதற்கு பொருத்தமாக ‘காட்டாளன்’ என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

கேரளக் காட்டையும், அங்கு வசிக்கும் பழங்குடி மக்களையும் கட்டுப்படுத்தி தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கும் ‘கடத்தல் மன்னன்’ மாரி (சுனில்), காட்டு யானைகளை சட்டவிரோதமாகக் கொன்று, அவற்றின் தந்தங்களைக் கடத்தி விற்பனை செய்து வருகிறார். அவரது இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் எடி (கபீர் துகான் சிங்), மாரி கடத்தும் தந்தங்களைக் காவல் துறை உதவியோடு கைப்பற்றுவதோடு, மாரியின் கடத்தல் தொழிலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயலுகிறார்.

பறிபோன தனது தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை (ஆண்டனி வர்கீஸ்) மாரி களம் இறக்குகிறார். மாரியின் தந்திரமான திட்டத்தால் அவர் இழந்த தந்தங்களை மீட்பதோடு, காவல் துறையை ஏமாற்றி, மீண்டும் தந்தங்களைக் கடத்துகிறார்.

இந்நிலையில், மாரிக்கு உதவி செய்துவந்த நாயகன் ஆண்டனி வர்கீஸ், மாரிக்கு எதிராக செயல்படுவதோடு, அடிமைப்பட்டுக் கிடக்கும் பழங்குடியின மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறார். இதனால் ஆண்டனி வர்கீஸை அழிக்க முடிவு செய்யும் மாரி, தனது எதிரியான எடியுடன் கைகோர்க்கிறார்.

அதே சமயம், பழங்குடியின மக்களை ஒன்று திரட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராக மிகப் பெரிய யுத்தத்தை நடத்த தயாராகிறார் ஆண்டனி வர்கீஸ்.

இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது யார்? கடத்தல்காரர்களை அழிக்கும் யுத்தத்தை நடத்தும் ஆண்டனி வர்கீஸ் உண்மையில் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு அதிரடி ஆக்ஷனுடன் விடை கொடுக்கிறது ‘காட்டாளன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடித்திருக்கிறார். கடத்தல் மன்னனிடம் வேலை செய்யும்போது தீவிர விசுவாசியாகவும், கடத்தல் மன்னனுக்கு எதிரான பிறகு பழங்குடி மக்களுக்கான போராளியாகவும் இருவித நடிப்பைக் குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார். அவரது தோற்றம், உடல்மொழி, குறைவான வசனங்கள் போன்றவை அவருடைய கதாபாத்திரத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.

வில்லனாக, காட்டு யானைகளைக் கொன்று தந்தம் கடத்தும் ‘கடத்தல் மன்னன்’ மாரியாக சுனில் நடித்திருக்கிறார். தனது வழக்கமான அனுபவ நடிப்பால் கவருகிறார். மற்றொரு வில்லன் எடியாக கபீர் துகான் சிங் நடித்திருக்கிறார். இவர் தனது ஸ்டைலிஷான நடிப்பை வெளிப்படுத்தி ஈடு கொடுத்திருக்கிறார்.

லூஸி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். அவருடைய தோற்றம் முற்றிலும் மாறுபட்ட வகையில் இருந்தாலும், தன் நடிப்புத் திறமையால் கவனம் ஈர்த்திருக்கிறார்.

’மாரி 1995’ ஆக வரும் ராஜ் திரண்டாசு, ரோபியாக வரும் பாரத் திவாரி, எஸ்.பி நெல்சன் நாடாராக வரும் ஹரி ஷங்கர் நாராயணன், நாதுவாக வரும் சந்தீப் ரவிராஜ், சிறப்புத் தோற்றங்களில் வரும் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரங்களுக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ரெனாடைவ் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்தியிருக்கிறது. காட்சிகள் வடிவமைப்பும் ஒளியமைப்பும் மட்டுமின்றி நடிகர்களை மேம்படுத்திக் காட்டவும் மெனக்கெட்டிக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். வாங்கிய பணத்துக்கு மேலேயே வாசித்துத் தள்ளியிருக்கிறார்.அதனால் சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் பல காட்சிகள் சகிக்க இயலவில்லை.

படம் தொடக்கம் முதல் இறுதிவரை வேகமாக இருக்க வேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சமீர்முகமது. அவருடைய உழைப்பு வீண்போகவில்லை.

பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். உன்னி.ஆர் வசனங்களை எழுதியிருக்கிறார். இவர்களுடைய எழுத்தைவிட சண்டைக் காட்சிகள் கூடுதல் இடங்களைப் பிடித்திருக்கின்றன.

யானைத் தந்தம் கடத்தல் என்பது பெரும் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில் மட்டுமல்ல, அதனால் யானைகள் உலவும் வனம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? வனவாசிகள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள்? என்பனவற்றைச் சேர்த்து சொல்லியிருப்பதன் மூலம் ’இது சமுதாய அக்கறையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு’ என நிறுவியிருக்கிறார் இயக்குநர் பவுல் ஜார்ஜ்.

‘காட்டாளன்’ – ”ரத்தமும் சதையுமான” ஆக்‌ஷன் விரும்பிகளுக்குப் பிடிக்கும்!

ரேட்டிங்: 3/5