பிடிக்காத கதையை நிராகரிக்க விஜய் ஆண்டனி கையாண்ட டெக்னிக்!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி, ஆர்.கே.சுரேஷ், அஞ்சலி, சுனைனா உள்ளிட்டோர் நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’.

வருகிற (மே) 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் விறுவிறுப்பான 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் இயக்குனர் கிருத்திகா உதயநிதி பேசுகையில், “பெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி.

‘உங்களுக்கு கதை சொல்ல உங்க வீட்டுக்கு வரணும்’ என்று விஜய் ஆண்டனியிடம் நேரம் கேட்டேன். ‘நீங்க வர வேணாம் மேடம். நானே உங்க வீட்டுக்கு வந்து கதை கேட்கிறேன்’ என்றார் அவர். இந்த காலத்தில் இவ்வளவு வளர்ந்த பிறகும் இத்தனை பணிவாக இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். சொன்னது போலவே வீட்டுக்கு வந்தார். கதையை கேட்டுவிட்டு ‘பிடிக்கலே’ என்று சொல்லிவிட்டு போய்விட்டார். சில நாட்களுக்குப் பிறகு இன்னொரு கதையை ரெடி பண்ணினேன். அந்த கதையையும் அவரே என் வீட்டுக்கு வந்து கேட்டுவிட்டு, ‘கதை பிடிச்சிருக்கு, ரொம்ப நல்லா இருக்கு’ என்றார். அந்த கதை தான் இந்த ‘காளி’.

‘டைரக்டர் தான் ஹீரோவை தேடிப்போய் கதை சொல்லணும். ஆனால் நீங்க கதை கேட்க என் வீட்டுக்கு வந்தீங்களே’ என்று ‘காளி’ படப்பிடிப்பு எல்லாம் முடியப்போகும் சமயத்தில் கேட்டேன். அதற்கு அவர், ‘அது என்னன்னா மேடம், நீங்க என்னை தேடிவந்து சொல்லும் கதை எனக்கு பிடிக்கலைன்னு சொன்னா, உங்க மனசு ரொம்ப கஷ்டப்படும். ஆனா, நான் உங்களை தேடி வந்து கதையை கேட்டுட்டு அது பிடிக்கலைன்னு சொன்னா, உங்களுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்காது. அதான்’ என்றார். பிடிக்காத கதையை நிராகரிக்க விஜய் ஆண்டனி இப்படி ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார் என்பதை அப்போது தான் தெரிந்துகொண்டேன்.

எனக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப் பெரிய பலம். உயிரை பணயம் வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத, ஆனால் திறமையான ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள்.

திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதவில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் அவர்கள் வெளியே வந்து சாதிப்பார்கள்” என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் பேசுகையில், “ஒரு வினியோகஸ்தராக,  தயாரிப்பாளராக நான் பார்த்த வரையில், சமீப காலங்களில் ‘தர்மதுரை’ படமும், விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன்’ படமும் லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப் பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகாவை பார்த்து நான் பிரமித்தேன். கதைக்கு என்ன வேணுமோ அதை மட்டுமே படமாக எடுத்தார் கிருத்திகா. படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு. இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார் ஆர்.கே.சுரேஷ்.

இந்த சந்திப்பில் விஜய் ஆண்டனி, நடிகைகள் ஷில்பா மஞ்சுநாத், சுனைனா, அம்ரிதா, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழணங்கு உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

k8