வள்ளுவன் – விமர்சனம்

நடிப்பு: சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், ராம்ஸ், ராஜ் சிம்மன், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சங்கர் சாரதி

ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

இசை: அஸ்வத்

தயாரிப்பு: ‘ஆறுபடை புரொடக்‌ஷன்ஸ்’ ஷைல்குமார் ராஜேந்திரன்

இணை தயாரிப்பு: வி.பாலச்சந்தர், நஞ்சுண்டே கவுடா, சதீஷ் ராஜேந்திரன்

பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்”
-என்பது 550-வது திருக்குறள்.

’செங்கோன்மை’ என்ற அதிகாரத்தில் உள்ள இக்குறளுக்கு, “கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்” என்று பொருள் கூறுகிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

இக்குறள் கூறும் கருத்தை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருப்பது தான் தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘வள்ளுவன்’ திரைப்படம்.

சென்னையில் உணவு விநியோகம் செய்யும் எளிய டெலிவரி பாயாக இருக்கிறார் நாயகன் வெற்றி என்ற ஸ்ரீ (சேத்தன் சீனு). அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது பள்ளித் தோழியான சிவான்யாவை (ஆஷ்னா ஜாவேரி) தற்செயலாகச் சந்திக்கிறார். ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் சிவான்யா செய்து வரும் உன்னதமான சமூக சேவையால் கவரப்படும் வெற்றி, அவருக்குத் தெரியாமல் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து இருவரும் காதலர் ஆகிறார்கள்.

இந்நிலையில், மாநகரில் அரசியல்வாதி சக்ரபாணி (ராம்ஸ்), போலீஸ் அதிகாரி (ராஜ் சிம்மன்), மற்றும் வழக்கறிஞர் (கராத்தே ராஜா) ஆகிய மூவரும் ஒரு மர்ம மனிதரால் அடுத்தடுத்து கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள்.

இந்தத் தொடர் கொலைகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பிரேம்குமார்), கொல்லப்பட்டவர்களின் உடலில் எழுதப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துக்களை வைத்து அது ’கொடிய குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்’ என்ற பொருள் கொண்ட ‘திருக்குறள்’ வரிகள் என்பதைக் கண்டறிகிறார்.

தீவிர விசாரணையில், நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் சில சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, உணவு விநியோகம் செய்யும் டெலிவரி பாயான நாயகன் வெற்றி மீது பலத்த சந்தேகம் ஏற்படுகிறது.

நிஜ கொலையாளி யார்? அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்டுபிடித்தாரா? இறுதியில் நாயகியை நாயகன் கரம் பிடித்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘கிரைம் திரில்லர்’ ஜானரிலான இந்த ’வள்ளுவன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, உணவு வினியோகம் செய்யும் டெலிவரி பாய் வெற்றி என்ற ஸ்ரீயாக சேத்தன் சீனு நடித்திருக்கிறார். நடிப்பிலும், ஆக்‌ஷனிலும் அசத்தியிருக்கிறார்.

நாயகியாக, ஆதரவற்ற முதியோருக்கு சேவை செய்யும் சிவான்யாவாக ஆஷ்னா ஜாவேரி நடித்திருக்கிறார். மேக்கப் அதிகம் இல்லாத யதார்த்தமான முகத்துடன் சாந்த சொரூபியாக நடித்து பார்வையாளர்களைக் கவர்கிறார். இறுதியில் அவர் எடுக்கும் திடீர் அவதாரம் எதிர்பாராதது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரேம்குமார், அரசியல்வாதி சக்கரபாணியாக வரும் ராம்ஸ், போலீஸ் அதிகாரியாக வரும் ராஜ்சிம்மன், வழக்கறிஞராக வரும் கராத்தே ராஜா மற்றும் மனோபாலா, தீனா, மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் சாரதி. 550-வது திருக்குறள் கூறும் கருத்தை கதைக்கருவாக எடுத்துக்கொண்டு, அதற்குத் தேவையான கதாபாத்திரங்களை உருவாக்கி, ‘கிரைம் திரில்லர்’ ஜானரில் சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார். கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸை கடைசி வரை கட்டிக்காத்து, அதன்பின் வெளிப்படுத்தியிருப்பது சூப்பர்.

அஸ்வத் இசை, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு, சான் லோகேஷ் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம்.

‘வள்ளுவன்’ – ’கிரைம் திரில்லர்’ விரும்பிகள் பார்த்து மகிழலாம்!

ரேட்டிங்: 3/5