ஹபீபி – விமர்சனம்

நடிப்பு: கஸ்தூரி ராஜா, ஈஷா, மாளவிகா மனோஜ், தனஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள்குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கைஜென், சன் ஷாகுல், மாஸ்டர் தீஹன், பேபி தீக்ஷாஸ்ரீ மற்றும் பலர்

இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து: வி.எஸ்.முகமது அமீன்

ஒளிப்பதிவு: மகேஷ் முத்துசாமி

படத்தொகுப்பு: மதி விஎஸ்

இசை: சாம் சி.எஸ்

கலை: அப்புன்னி சாஜன்

தயாரிப்பு: ’நேசம் எண்டர்டெயின்மெண்ட்’ ஷாகுல் ஹமீது, கோவை இப்ராஹிம், ’ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன்’ வி.குணசேகரன், வி.கருப்புசாமி, வி.சங்கர், ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

‘ஹபீபி’ என்ற பிரபலமான அரபுச் சொல்லுக்கு ‘என் காதல்’ (My love) அல்லது ‘என் அன்பே’ (My dear) என்பது பொருளாம். முழுமையான இஸ்லாமிய வாழ்வியலின் பின்னணியில் சொல்லப்படும் ஒரு இயல்பான காதல் கதை என்பதால் இப்படத்துக்கு ’ஹபீபி’ என்று பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் கடையநல்லூரில் இக்கதை நடப்பதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இங்கு பரம்பரை பரம்பரையாக ‘கைத்தறி’ நெசவுத் தொழில் செய்து வருகிறது முகமது யூசுஃப் (கஸ்தூரி ராஜா) குடும்பம். கைத்தறித் தொழில் நலிவடையத் தொடங்குவதால்,, யூசுஃபின் தம்பி அரபு நாட்டுக்குச் சென்று வேலை பார்க்கிறார். தம்பியின் வெளிநாட்டு வேலை பணத்தை சம்பாதித்துக் கொடுத்தாலும், யூசுஃபுக்கு கைத்தறித் தொழிலைக் கைவிட விருப்பமில்லை. ”என் உடம்பில் தெம்பு இருக்கும் வரை நான் உழைப்பேன்” என்ற வைராக்கியத்தில் கைத்தறித் தொழிலை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

முகமது யூசுஃபுக்கு ஒரேயொரு மகன். பெயர் சையது அபுதாஹிர் (ஈஷா). அபுதாஹிருக்கு சிறுவயதிலேயே நிலோஃபர் நிஷா (மாளவிகா மனோஜ்) என்ற சிறுமியைப் பிடித்துப்போகிறது. அவரைப் பார்த்தாலே அபுதாஹிருக்குள் பட்டாம்பூச்சி பறக்கிறது. இந்த உணர்வு பள்ளியில் படிக்கும்போது காதலாக உருமாற்றம் அடைகிறது. ஊர்ப்பெரியவர்களுக்கு பயந்து பரஸ்பரம் காதலைச் சொல்ல, பேசிப் பழகத் தயங்கும் இவர்கள் இருவரும் பார்வையாலேயே காதலைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.

ஓரிரவு. ஊர் அடங்கிய நேரம். தைரியத்தை வரவழைத்துக்கொள்ளும் அபுதாஹிர், நிலோஃபரை ரகசியமாக சந்திப்பதற்காக, அவரது வீட்டுச்சுவர் ஏறிக் குதித்து உள்ளே நுழைய முயலுகிறார். ஆனால் ஊர் மக்களிடம் மாட்டிக்கொள்கிறார். ஊர் கூடி, “அந்த நேரத்துல எதுக்கு அந்த வீட்டுக்குப் போனே?” என்று கேட்டுத் துளைத்தெடுக்க, உண்மையைச் சொன்னால் நிலோஃபரின் பெயர் கெட்டு அவர் அவமானப்பட நேரிடும் என்பதால், “அந்த வீட்டுக்குத் திருடப் போனேன்” என்று பொய் சொல்லி, நிலோஃபருக்கு அவப்பெயர் ஏற்படாமல் காப்பாற்றுகிறார். அதனால் ‘திருடப் போனதற்காக” பஞ்சாயத்தார் தீர்ப்புப்படி, அபுதாஹிரின் சட்டையைக் கழற்றி, வெற்று முதுகில் பளீர் பளீரென கசையடிகள் கொடுக்கப்படுகின்றன.

அவமானம் தாங்காத அபுதாஹிர் அதன்பின் ஊரைவிட்டு வெளியேறி, அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறார். சில வருடங்களுக்குப் பிறகு ஊர் திரும்புகிறார். அங்கு அவருக்காக நிலோஃபர் காத்திருந்தாரா? அல்லது அவரது குடும்பத்தாரின் வற்புறுத்தல் காரணமாக வேறு நபரை மணந்துகொண்டாரா? அதன்பின் அபுதாஹிரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஹபீபி’ திரைப்படத்தின் மீதிக்கதை.

குடும்பத் தலைவர் முகமது யூசுஃபாக இயக்குநர் கஸ்தூரி ராஜா நடித்திருக்கிறார். அவருக்குள் இவ்வளவு சிறப்பான நடிப்பாற்றலா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு யதார்த்த எல்லையை மீறாமல், குடும்பத்துப் பெரியவராக, கடின உழைப்பாளி முகமது யூசுஃபாக திரையில் வாழ்ந்திருக்கிறார். தறியை அகற்ற வேண்டிய நிலை வரும்போதும், பஞ்சாயத்தில் தன் மகன் கசையடி பெறும்போதும் அவர் துடிதுடித்துக் கதறுகிற கதறல், எந்தக் கல்நெஞ்சையும் கரைத்துவிடும்.

முகமது யூசுஃப் மகன் சையது அபுதாஹிர் கதாபாத்திரத்தில் ஈஷா நடித்திருக்கிறார். முதல் படம் என்று சொல்ல முடியாதபடி மிகவும் இயல்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மென்மையான காதல் காட்சிகளிலும், உள்ளத்தை உருக்கும் சோகக் காட்சிகளிலும் அருமையாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

அபுதாஹிர் தனது சிறுவயதிலிருந்து நேசிக்கும் அழகிய பெண் நிலோஃபராக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார். மாய்ந்து மாய்ந்து வசனம் பேசாமல் அமைதியாக பார்வையாலும், முகபாவனையாலும் பார்வையாளர்களைக் கவர்ந்துவிடுகிறார்.

அபுதாஹிருக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் பெண் கதீஜா பர்வீனாக தனஸ்ரீ நடித்திருக்கிறார். நூலகராக வரும் இவர், படத்தின் இரண்டாம் பாதிக்கு பலம் சேர்க்கிறார்.

அபுதாஹிரின் சித்தி சலிஹா பீவியாக அனுஸ்ரேயா ராஜன் நடித்திருக்கிறார். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவாரோ என்று சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், ஒரேயொரு காட்சியில் சித்தி பாசம் என்றால் என்ன? என்பதைக் காட்டி கண் கலங்க வைத்துவிடுகிறார்.

மம்மதுவாக வரும் ஜெயஸ்ரீ பினுராஜ், ஷேக் உதுமனாக வரும் அருள்குமார், ரபியாவாக வரும் ரேகா குமணன், பைரோஜாவாக வரும் இஸ்மத் பானு, நாயகி நிலோஃபரின் அம்மாவாக வரும் மலர் கைஜென், கதீஜா பர்வீனின் அப்பாவாக வரும் சன் ஷாகுல், சிறுவயது அபுதாஹீராக வரும் மாஸ்டர் தீஹன், சிறுவயது நிலோஃபராக வரும் பேபி தீக்ஷாஸ்ரீ உள்ளிட்டோரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவில்லாமல் நிறைவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தை வி.எஸ்.முகமது அமீன் எழுத, இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியிருக்கிறார். ‘அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ ஆகிய படங்களுக்குப் பின் அவர் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இந்த ‘ஹபீபி’.

தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி இந்தியத் திரையுலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் என்றால் வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள், மனித நேயமற்ற முரடர்கள் என்பன போன்ற சித்தரிப்புகள் தான் இருக்கின்றன. அது உண்மை இல்லை; அவர்களும் எல்லா மதத்தினரையும் போல சக மனிதர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் கத்தி கபடா இல்லாமல், துளியும் ரத்தம் சிந்தாமல், மருந்துக்குக்கூட வன்முறை இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் குடும்பத்துடன் கண்டு களிக்கும் விதமாய் இப்படத்தை ‘நீட்’டாக இயக்கியிருக்கிறார் மீரா கதிரவன். நூறாண்டுகால தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு இப்படியொரு முழுமையான இஸ்லாமியக் குடும்ப வாழ்வியல் பின்னணியில் ஒரு திரைப்படம் வந்ததில்லை என்பது தான் இதன் சிறப்பு.

வெற்றி பெற்றுவிட்டீர்கள் இயக்குநர் மீரா கதிரவன்! பாராட்டுகள்!

சாம் சி.எஸ்ஸின் பாடலிசை மற்றும் பின்னணி இசை, மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு, மதி விஎஸ்ஸின் படத்தொகுப்பு, அப்புன்னி சாஜனின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்தின் தரத்துக்கும், நேர்த்திக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘ஹபீபி’ – உங்கள் அன்புக்கும், காதலுக்கும் உகந்த மிகச் சிறந்த படம்; பார்த்து, ரசித்து கொண்டாடுங்க…!

ரேட்டிங்: 4.25/5