பெருமாள் முருகன் வழக்குத் தீர்ப்பும், ஆர்.எஸ்.எஸ். கயவாளி குருமூர்த்தியின் விஷக்கொடுக்குகளும்!

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய “மாதொரு பாகன்” (ஆங்கிலத்தில் One Part Woman) நாவல், 1940களில் வாழந்த குழந்தைப் பேறு அற்ற காளி-பொன்னா என்ற தம்பதியரின் துன்ப துயரங்களை சித்தரிக்கும் புனைவு. அந்தக்காலத்தில் திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில் வைகாசி விசாகத் திருவிழாவில், நீண்டகாலமாக குழந்தை அற்ற பெண்கள் விழாக் காலத்தில் முகம் தெரியாத ஆண் ஒருவருடன் உடலுறவு கொண்டு கருத்தரித்த நடைமுறை, கடைபிடித்த வழக்கம் பற்றி சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி தூண்டுதலின் காரணமாக, 2014ஆம் ஆண்டு இறுதியில், இந்த நாவல் மீது, அதன் சில பக்கங்கள் பிரதியெடுத்து விநியோகம் செய்யப்பட்டு, திருச்செங்கோட்டில் உள்ள கொங்கு வெள்ளாள கவுண்டர் அமைப்புகள், கோவில் கமிட்டிகள், வணிகர் சங்கங்கள் சார்பில் போராட்டம், கிளர்ச்சிகள் கட்டமைக்கப்பட்டன. எழுத்தாளருக்கு கொலை அச்சுறுத்தல்களும் விடப்பட்டன. 2015 சனவரி 10ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒரு ”கட்டப் பஞ்சாயத்து ‘ நடத்தி பெருமாள் முருகனை மன்னிப்பு கோர வைத்தது. “எழுத்தாளர் பெருமாள் முருகன் செத்துவிட்டான்” என அறிவித்துவிட்டு கல்லூரி பேராசிரியர் ஆன அவரும், அவரது துணைவியாரும் சென்னைக்கு புலம் பெயர்ந்த சோகமும் அரங்கேறியது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கும், தீர்ப்பும்!

பெருமாள் முருகனுக்கு ஆதரவாக, 2015-ல் தமுஎகச எஸ்.தமிழ்செல்வன் தொடுத்த வழக்கில், எதிர் தரப்பில் தமிழக அரசாங்கம், மாவட்ட நிர்வாகம் ஆகியோரோடு வேறு யாரெல்லாம் இருந்தனர், அல்லது இணைந்து கொண்டனர் என்பதை தெரிந்துகொண்டால், இப்பிரச்சினைக்கு பின்னுள்ள தீயச் சக்திகளையும், நோக்கத்தையும் அறிந்துகொள்ள உதவும்.

எதிர் தரப்பினர் – அர்த்தநாரீசுவரர் கிரிவல சங்கம்,  இந்து முன்னணி சின்னுசாமி & மகாலிங்கம், கொங்கு வேளாள கவுண்டர் சங்கம், நாட்டு வேளாள டிரஸ்ட், செங்குந்தர் மகாஜன சங்கம், ‘கோகுல்ராஜ் கொலை புகழ்’ யுவராஜின் தீரன் சின்னமலை பேரவை போன்றவை.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு, கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று 160 பக்கத்தில் விரிவான தீர்ப்பை வழங்கியது.

1)நாவலுக்கு தடை விதிக்க முடியாது. 2)பிடித்தால் படியுங்கள், இல்லை எனில் மூடிவிடுங்கள். 3)படைப்பாளிகளின் கருத்துரிமையைப் பாதுகாக்க தமிழக அரசாங்கமானது, கலை இலக்கிய வல்லுநர்கள் குழு ஒன்றை 3 மாத காலத்திற்குள் அமைக்க வேண்டும்.

“2010-ல் வெளிவந்து, பல்வேறு பாராட்டும், விருதுகளும் பெற்ற இந்நாவல், 2013-ல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர்தான், சமூகத்தின் ஒரு பிரிவினரால் எதிர்ப்பு உருவாக்கப்பட்டது, ஏன்?” என்ற அய்யத்தை தீர்ப்பு எழுப்பியது.

“வேதகாலம் தொடங்கி காம இலக்கியம், புரதான, மத்தியகால செக்ஸ் நடைமுறைகளை பல்வேறு புத்தகங்கள் சொல்லியுள்ளன…. மகாபாரதம் உட்பட இந்திய வேதங்கள் திருமணத்திற்கு வெளியிலான பாலியல் உறவை (அதுவும் கருத்தரிப்பது என்பதற்காகவே இருந்ததை) வெளிப்படையாக சுட்டிக் காட்டியுள்ளன. இதனால் மகாபாரதமும், வேத இலக்கியங்களும், வழக்கத்திற்கு மாறான காம இச்சை மிக்க ஒன்றை சொல்வதாகக் கூறி தடை செய்யப்பட வேண்டும் எனக் கோரலாமா?” எனக் கேள்விகளையும் எழுப்பியது.

குருமூர்த்தி சாதியப் பகைமையை உருவாக்குகிறார்!

ஜூலை 8ஆம் தேதிய ஆங்கில நாளேடு, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டில், “மாதொரு பாகன், சாத்தானிக் வெர்சஸ், பாலியஸ்டர் பிரின்ஸ்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார் குருமூர்த்தி. ஜூலை 9 மற்றும் 10ஆம் தேதி ‘தினமணி’யில் இக்கட்டுரை “கருத்துச் சுதந்திரம் கட்டற்றது அல்ல!” என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. இது மொழிபெயர்ப்பு கட்டுரையா? நேரடியாக தமிழில் எழுதியதா? எனத் தெரியவில்லை. ஒன்றிரண்டு பாராக்களைத் தவிர இரண்டும் ஒன்றே தான். ஆங்கில கட்டுரையின் விஷக் கொடுக்குகளுக்கு கூடுதலான கருத்து விஷத்தை / ஒரு பாரா இணைப்பை தமிழ்க் கட்டுரை கொண்டுள்ளது.

சாலமன் ருஸ்டியின் ‘சாத்தானின் கவிதைகள்’ மற்றும் ‘ரிலையன்ஸ்’ திருபாய் அம்பானியைப் பற்றி ஹமிஸ் மெக் டொனால்ட் எழுதிய ‘பாலியஸ்டர் இளவரசன்’ ஆகியவற்றின் மீதான தடை, தாக்குதல்கள் ஆகியவற்றை எல்லாம் ஒப்பிட்டு, ‘மாதொருபாகன் தடை ஏன் செய்யப்படவில்லை?’ எனக் கேள்வியை எழுப்புகிறார். ஆனால்…

மிக முக்கியமான பிரச்சினை என்னவெனில், குருமூர்த்தியின் கட்டுரையானது “மாதொரு பாகன்” நாவலில் இல்லாத விவரிப்பைச் சொல்லுவதும், சாதியப் பகைமையைத் தூண்டும் ‘தினமணி’ கட்டுரையின் இறுதி பாரா கருத்தும் தான்.

கட்டுரையில் பின்வருமாறு சொல்கிறார்:

“திருச்செங்கோட்டில் நடைபெறும் / நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவை, சிற்றின்பக் காமக் களியாட்டக் கூத்தாகவும், 30 வயதிற்கு மேற்பட்ட கொங்கு வேளாளர் பெண்கள் மீது, தலித் இளைஞர்கள் தங்கள் காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் விழாவாகவும் பெருமாள் முருகன் எழுதினார்” என்று அப்பட்டமான பொய்யைத் தூக்கிப்போட்டு, குருமூர்த்தி கவுண்டர்சாதி உணர்ச்சியை உசுப்பேற்றுகிறார்.

கட்டுரையின் (பகுதி 1) இறுதி வரிகள் பின்வருமாறு உள்ளன:-

“இதே கதைக்கருவை சற்று மாற்றி, கொங்கு வேளாளர் சமூகத்தைச் சார்ந்த ஆண்கள், பெருமாள் முருகன் குறிப்பிடும் இன்னொரு சமுதாயப் பெண்களைக் கருத்தரிக்கச் செய்வதாக இருந்திருந்தால், இதே பிரச்சினை மிகப் பெரிய வன்முறையை தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்து விட்டிருக்கும். அப்போது இதே முற்போக்குவாதிகள் பெருமாள் முருகன் ஆதரவுக் குரல் எழுப்பி இருப்பார்களா?”

கட்டுரையின் (பகுதி 2) இறுதி வரிகள் பின்வருமாறு முடிகின்றது:-

“நேற்றைய முதல் பகுதியின் கடைசிப் பத்தியை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். இந்தப் பிரச்சினையின் நியாயம் புரியும்.”

இந்துத்துவா வெறி பிடித்த சிந்தனையாளர் குருமூர்த்தி, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு இந்தியன் எக்ஸ்பிரஸ் & தினமணி நாளேடுகள் திட்டவட்டமான முறையில் வெள்ளாளக் கவுண்டர்கள் மத்தியில் சாதிய வெறியைத் தூண்டுகின்றன. அடுத்த சுற்று கலாட்டாக்களுக்கு தயார் செய்கின்றன. அதேசமயத்தில் தலித் மீதான வெறுப்பையும் உசுப்பேற்றுகின்றன. தலித் சமுதாயத்தை சீண்டுகின்றன; அவமானப்படுத்துகின்றன.

ஆர்.எஸ்.எஸ். கயவாளி குருமூர்த்தியை, நச்சுக் கருத்துக்களை, சதித் திட்டத்தை முறியடிக்க,

இடதுசாரிகள், அம்பேத்காரிய, பெரியாரிய, மதச்சிறுபான்மை அமைப்புகள், சனநாயக சக்திகள் கரம் கோர்க்க வேண்டும்! குருமூர்த்தியை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய இயக்கம் நடத்திட வேண்டும்!

சந்திரமோகன்

மாநிலக்குழு உறுப்பினர், CPIML- Liberation