கத்தி சண்டை – விமர்சனம்

சமீபத்தில் தமிழகம் அறிந்து அதிர்ச்சிக்குள்ளான விஷயம் – ‘கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக் கட்டாய் பணம் கடத்தல்’ என்பது தான். இத்தகைய நிஜ சம்பவத்தை நினைவூட்டும் வகையிலான காட்சியுடன் இப்படம் ஆரம்பமாகிறது…

சென்னையை நோக்கி விரைகிறது ஒரு கன்டெய்னர் லாரி. அதை ஓட்டிவரும் தருண் அரோரா, போலீஸ் செக்போஸ்ட்களை எல்லாம் தகர்த்தெறிந்து, சிட்டாக பறக்கிறார். போலீஸ் துணை கமிஷனர் ஜெகபதி பாபு துரத்திச் சென்று மடக்கிப் பிடிக்கிறார். கண்டெய்னர் லாரி நிறைய கட்டுக்கட்டாய் பணம். உடனே தருண் அரோராவை கைது செய்து சிறையில் அடைக்கிறார். ரூ.50 கோடி பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறார்.

ஜெகபதி பாபுவின் தங்கை தமன்னாவை ஒருதலையாக காதலிக்கிறார் விஷால். இதற்காக சூரியின் உதவியுடன் ‘மறுஜென்மக் காதல்’ என்று பல பொய்களை அவிழ்த்துவிட்டு, தமன்னாவின் இதயத்தில் இடம் பிடிக்கிறார்.

விஷாலை ரவுடிகளை அனுப்பி அடிப்பது, போலீஸ் நிலைய லாக்கப்புக்கு கொண்டுபோய் லாடம் கட்டுவது என சில பல சோதனைகள் செய்தும், தமன்னா மீதான காதலில் விஷால் உறுதியாக இருப்பதை கண்டு, இவர் தான் தன் தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளை என்ற முடிவுக்கு வருகிறார் ஜெகபதி பாபு.

இந்நிலையில், ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறது. பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து, வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருப்பதாகவும், அதை எடுத்து வருமாறும் கூறுகிறார்.

ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.

அதே நேரத்தில் விஷால் ஜெகபதி பாபுவிடம், “நான் ஒரு சிபிஐ அதிகாரி. அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான்” என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டிவிட்டு, மொத்தப் பணத்தையும் கொண்டுபோய் விடுகிறார்.

பின்னர் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம், நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னுடைய திட்டத்தை ஒட்டுக்கேட்டு, எனக்கு முன்னால வந்து உன்னை மிரட்டிவிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா  காதலில் விரிசல் விழுகிறது.

திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார். விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.

இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.

நாயகன் விஷால் நடனம்,காமெடி,சண்டைக் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களின் கண்களை குளிர செய்கிறார்.

படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் வந்து ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.

வழக்கமாக தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் காமெடியை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகிறது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் ‘நான் கொஞ்சம் கருப்பு தான்’ பாடல்காட்சி ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையில் ஸ்கோர் செய்கிறார். பாடல் மற்றும் சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

‘கத்தி சண்டை’ – காமெடிக்கு கியரண்டி!