ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்!

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

லண்டன் மருத்துவ நிபுணர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

ஜெயலலிதா இயற்கையாகவே சுவாசிக்கத் தொடங்கியதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டன. எனினும், அவசர தேவைக்காக அவருடைய தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரா கோடமி கருவி மட்டும் அகற்றப்படவில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதா, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனி வார்டுக்கு (விஐபி வார்டுக்கு) மாற்றப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.