டிவி சீரியல் நடிகை சபர்ணா கொலையா?: கையில் வெட்டுக்காயத்துடன் நிர்வாணமாக கிடந்தார்!

சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் தளத்தில் வசித்து வந்தவர் சபர்ணா (வயது 29). நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இவர், பின்னர் சன் டிவி சீரியல்களில் நடித்து வந்தார். ‘சொந்தம் பந்தம்’ சீரியலில் வில்லியாக நடித்துபோது பிரபலம் அடைந்தார். மேலும் ‘படிக்காதவன்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘காளை’, ‘பூஜை’ உள்பட பல திரைப்படங்களில் கதாநாயகிக்கு தோழியாகவும் நடித்துள்ளார்.

நடிகை சபர்ணா வசித்துவந்த வீட்டில் இருந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள், மதுரவாயல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீஸார் விரைந்து வந்து, சபர்ணாவின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே படுக்கை அறையில் சபர்ணா ஆடைகள் இன்றி நிர்வாண கோலத்தில், உடல் அழுகிய நிலையில், மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது இடது கையில் வெட்டுக் காயம் இருந்தது.

உடனே போலீஸார், சபர்ணாவின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சபர்ணா வீட்டில் இருந்து ஒரு டைரியையும் போலீஸார் கைப்பற்றி உள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, சபர்ணாவின் மர்மச் சாவுக்கு காரணமானவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.