“தயவுசெய்து ‘ஜோக்கர்’ பாருங்கள்”: கண்ணீருடன் தனுஷ் வேண்டுகோள்!

‘குக்கூ’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம் ‘ஜோக்கர்’. ஒரு மனிதனின் ஏழ்மையை பயன்படுத்தி அரசியல்வாதிகள் எப்படி அரசியலாக்குகின்றனர் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு. கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த படத்தில், கேடுகெட்ட இன்றைய சமூக அவலங்களை அப்பட்டமாக தோலுரித்து காட்டி, வசனங்களால் விளாசியிருந்தார் இயக்குனர் ராஜு முருகன்.

இப்படத்தில் மன்னர் மன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த குரு சோமசுந்தரத்தின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. மேலும், அப்படத்தில் நடித்த ரம்யா பாண்டியன், மு.ராமசாமி, காயத்ரி கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ் கண் கலங்கியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, “ஜோக்கர் படம் பார்த்தேன். இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் இவர்களில் யாரை பாராட்டுவது என்றே தெரியவில்லை.  கண்களில் கண்ணீர். தயவுசெய்து பாருங்கள். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

‘ஜோக்கர்’ படம் பற்றிய விமர்சனங்கள் நல்ல விதமாகவே அமைந்துள்ள நிலையில், தற்போது நடிகர் தனுஷின் பாராட்டும் ‘ஜோக்கர்’ படக்குழுவை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.