“ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது”: உச்ச நீதிமன்றம் பிடிவாதம்!

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்தியாவின் சுப்ரீம் நீதிமன்றமான உச்சநீதிமன்றம் கைவிரித்துவிட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது நடத்தும் வகையில்,  ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு வழக்கு மீதான தீர்ப்பு எழுதப்பட்டு வருகிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்காக 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சட்டப் போராட்டம் முடிவுக்கு வராமல் நீடிக்கும் நிலையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்திபெற்றது. உச்சநீதிமன்ற தடை காரணமாக இரு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என நினைத்து அலங்காநல்லூரில் வாடிவாசல் அழகுபடுத்தப்பட்டு காளைகளை வரவேற்க காத்திருக்கிறது.

முதல் இடையூறு

பாரம்பரியமாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு முதல் இடையூறு 2006-ம் ஆண்டில் வந்தது. அதுவும் ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரையில தான். ஜல்லிக்கட்டில் காளை முட்டி இறந்தவரின் தந்தை ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி 2006-ல் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி ஆர்.பானுமதி (தற்போது உச்சநீதிமன்ற நீதிபதி) ஜல்லிக்கட்டு போட்டியில் மிருகங்கள் வதை செய்யப்படுவதாக தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற கிளையிலேயே மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை 2007 மார்ச்சில் விசாரித்த நீதிபதிகள் எலிப்தர்மாராவ், ஜனார்த்தனராஜா அமர்வு, காளைகளுக்கு போதை வஸ்துகள் வழங்கக்கூடாது, மாடுபிடி வீரர்கள் மது குடித்திருக்கக்கூடாது, மாடுபிடி வீரர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் உள்பட நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. இந்த நிபந்தனையின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன.

பிராணிகள் நல வாரியம் நுழைந்தது

இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்தை பிராணிகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றது. உச்சநீதிமன்ற அமர்வு, நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு 2007 ஜூலையில் தடை விதித்தது. பின்னர் தமிழக அரசின் சீராய்வு மனுவை ஏற்று 2008ல் பொங்கலின்போது ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் தமிழக சட்டப்பேரவையில் 2009-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.

குடியை கெடுத்த காங்கிரஸ்

இவ்வாறு இருக்கும்போது, பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் திருத்தப்பட்டு, காட்சிப்படுத்தப்பட முடியாத விலங்குகள் பட்டியலில் காளையை 2011 ஜூலையில் சேர்த்து உத்தரவிட்டார் அப்போதைய காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். இதனால் ஜல்லிக்கட்டுக்காக மீண்டும் போராடும் நிலை உருவானது.

இருந்தபோதிலும் 2012-ல் நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் அமர்வு அனுமதி வழங்கியது. 2012-ல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

பீட்டா வழக்கு

இதற்கிடையே பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதோடு விடாமல் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் நடத்துவதற்கு நிரந்தரமாக தடை விதித்தும் 2014 மே மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை அண்மையில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காட்சிப்படுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜன. 8-ல் நீக்கியது. அதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

தற்போது, ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ள நிலையில், இந்த பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.