பைரவா – விமர்சனம்

நாட்டுக்கு மருத்துவக் கல்வி மிக மிக முக்கியமானது. அத்தகைய மருத்துவக் கல்வியை வழங்கும் மருத்துவக் கல்லூரிகள் எத்தகைய அயோக்கியர்களின் கரங்களில் சிக்கிக் கிடக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்துகிறது ‘பைரவா’.

தனியார் வங்கி மேனேஜராக இருப்பவர் ஒய்.ஜி.மகேந்திரன். அந்த வங்கியின் வராக்கடன்களை வசூலித்துக் கொடுப்பவர்களாக விஜய்யும், சதீஷூம் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஒய்.ஜி.மகேந்திரனின் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் கடனை, மைம் கோபி திருப்புக் கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணம் நடக்கவுள்ள சூழ்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து, கடன் தொகையை மீட்டுக் கொடுக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவர் மீது காதல் வயப்படுகிறார் விஜய். பின்னர், அவரையே சுற்றி சுற்றி வருகிறார்.

மணவிழா முடிந்து, கீர்த்தி சுரேஷ் ஊருக்கு திரும்பும் வேளையில், பேருந்து நிலையத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்த நினைக்கிறார் விஜய். ஆனால், அப்போது கீர்த்தி சுரேஷை ரவுடி கும்பல் ஒன்று தீர்த்துக்கட்ட வருகிறது. பின்னர், ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அந்த ரவுடி கும்பல் கீர்த்தி சுரேஷை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறது.

இதைப் பார்க்கும் விஜய், அந்த ரவுடி கும்பலுக்கும் கீர்த்தி சுரேஷுக்கும் என்ன சம்பந்தம் என்று அவரிடமே கேட்கிறார். அப்போது கீர்த்தி சுரேஷ், தான் திருநெல்வேலியில் மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாகவும், தன்னுடன் படித்து வந்த சக தோழியான அபர்ணா வினோத்தை கல்லூரியின் முதல்வரான ஜெகபதி பாபு ஆட்களை வைத்து கொலை செய்துவிட்டு, அவள்மீது தவறான பழியை சுமத்தி விட்டதாகவும் கூறுகிறார். மேலும், இந்த கொலை சம்பந்தமாக ஜெகபதி பாபு மீது நான் வழக்கு தொடர்ந்திருப்பதால் எனக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் ஜெகபதி பாபுவால் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்.

இதைக்கேட்ட விஜய், ஜெகபதி பாபுவின் ஆட்டத்துக்கு முடிவு கட்டும் முயற்சியில் களமிறங்குகிறார். இதில் விஜய் வெற்றி பெற்றாரா? நாயகியிடம் தனது காதலை வெளிப்படுத்தி ஒன்று சேர்ந்தாரா? என்பது மீதிக்கதை.

படத்தில் விஜய் அறிமுகமாகும் காட்சியே மிகப் பெரிய மாஸாக உள்ளது. முதல் சண்டைக் காட்சியில் மைம் கோபியின் ஆட்களை விஜய் கிரிக்கெட் விளையாடியே துவம்சம் செய்யும்போது, திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரம் காதை பிளக்கிறது. கீர்த்தி சுரேஷூடனான காதல் காட்சிகளும், அவருடன் லூட்டி அடிக்கும் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

விஜய், தான் யார் என்பதை ஜெகபதி பாபுவுக்கு அறிமுகம் செய்யும் காட்சி, ஜெகபதி பாபு கொடுக்கும் ஒவ்வொரு இடையூறையும் தகர்ந்தெறிந்து செல்லும் காட்சிகள் என படம் நெடுகிலும்  விஜய் மாஸ் காட்டியிருக்கிறார். இளமையான தோற்றம், ஸ்டைலான நடிப்பு, வலிமையான வசனங்கள், அதிரடியான சண்டைக் காட்சிகள் என விஜய் தனியொரு ஆளாக படத்தை தோளில் சுமந்திருக்கிறார். ‘கபாலி’யில் ரஜினிகாந்த் அடிக்கடி “மகிழ்ச்சி” என கூறியதைப் போல இதில் விஜய் ஆங்காங்கே “சிறப்பு” என கூறுவது ரசனை.

கீர்த்தி சுரேஷ் படம் முழுக்க அழகு பதுமையாக வலம் வந்திருக்கிறார். புடவையில் பார்க்கும்போது வழக்கம்போல கொள்ளை அழகு. விஜய்க்கு ஏற்ற ஜோடியாக இவர் அமைந்திருக்கிறார். “பாப்பா பாப்பா” பாடலில் விஜய்க்கு இணையாக நடனமாடி கலக்கியிருக்கிறார். அந்த பாடலில் இவருடைய முக பாவனைகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.

வில்லன்களாக வரும் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள். ஜெகபதி பாபுவுக்கு இப்படத்தில் கதையை தாங்கிச் செல்லும் கனமான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். டேனியல் பாலாஜியும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காமெடிக்கு சதீஷ், தம்பி ராமையா, ஸ்ரீமன், நான் கடவுள் ராஜேந்திரன் என பெரிய நகைச்சுவை நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. எனினும், காமெடியில் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

சமகாலத்தின் முக்கிய பிரச்சனை ஒன்றை கதைக்கருவாக தேர்ந்தெடுத்ததற்காக இயக்குனர் பரதனை பாராட்டலாம். விஜய் என்ற மாஸ் ஹீரோவை வைத்து அப்பிரச்சனையை சித்தரித்திருப்பது அருமை. இவருடைய வசனங்கள் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளன. பஞ்ச் டயலாக்குகள் மட்டுமில்லாமல், சாதாரண வசனங்களிலும் ஒரு பஞ்ச் இருப்பது சிறப்பு. விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்தியை கொடுக்கும் என்று நம்பலாம்.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அதை காட்சிப்படுத்திய விதமும் வரவேற்கத்தக்கது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை, சண்டைக் காட்சிகளில் வெளுத்து வாங்கியிருக்கிறது.

அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் எல்லாம் புத்தம் புதிதாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்திருக்கிறது. சுகுமாரின் ஒளிப்பதிவும், சத்யாவின் ஆடை வடிவமைப்பும் வண்ணமயமாக இருக்கிறது.

‘பைரவா’ – சிறப்பு!