சீதாராம் யெச்சூரி மீது காவி பொறுக்கிகள் தாக்குதல்: தமிழக தலைவர்கள் கண்டனம்!

சீதாராம் யெச்சூரி மீது காவி பொறுக்கிகள் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான சீதாராம் யெச்சூரி மீது சங்பரிவார் அமைப்பினர் நடத்தியுள்ள தாக்குதலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அக்கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது நிகழ்ந்துள்ள இந்தத் தாக்குதல், ஜனநாயகத்திற்கும், கருத்து சுதந்திரத்திற்கும் மத்தியில் உள்ள பாஜக ஆட்சியில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உறுதி செய்துள்ளது.

ஒரு கட்சியின் அலுவலகத்துக்கு உள்ளேயே நுழைந்து இப்படியொரு தாக்குதல் நடத்தும் சுதந்திரத்தை சங்பரிவார அமைப்புகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அளித்து, அதை ஊக்கப்படுத்துவதும், வேடிக்கைப் பார்ப்பதும் மிகுந்த வேதனைக்குரியது.

கருத்துக்கு மாற்றுக் கருத்து என்பதில் நம்பிக்கை இல்லாத இப்படிப்பட்ட சங்பரிவார அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு, ஆணவப் போக்கில் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்வதை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

சீதாராம் யெச்சூரி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக்குழுத் தலைவருமான தோழர் சீத்தராம் யெச்சூரி மீது சங்பரிவார் அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சங்பரிவாரின் வழக்கமான கோழைத்தனங்களைப் போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் போர்வையில் நுழைந்து தோழர் சீத்தராம் யெச்சூரியை தாக்கியுள்ளனர். தத்துவார்த்த ரீதியாக அம்பலப்பட்டுப் போயிருக்கும் சங்பரிவார், விமர்சனங்களை முன்வைப்பவரை நேரடியாக தாக்குவது அவர்களின் அவக்கேடான வரலாறாக இருக்கிறது.

மகாத்மா காந்தி, கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் என்று மாற்றுக் கருத்து சொல்லும் ஒவ்வொருவரையும் அவர்களது கருத்தை எதிர்கொள்ள முடியாததால் கொலை செய்வது என்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தற்போது தோழர் சீத்தராம் யெச்சூரி மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். சங்பரிவாரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், சாதாரண உறுப்பினர் கூட அஞ்ச மாட்டார்கள். இன்னும் வேகத்துடனும், வீரியத்துடனும் சங்பரிவாரின் நாசகர கொள்கைகளையும், குணத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களும், ஆதரவாளர்களும் அம்பலப்படுத்துவார்கள்.

தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து அமைப்புகளும் இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக கண்டன இயக்கங்களை வலுவாக நடத்திட வேண்டுமெனவும், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் சங்பரிவாரின் இந்த அவக்கேடான செயலை அம்பலப்படுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.