விவாகரத்து முடிவை ஒரே நேரத்தில் அறிவித்த சமந்தா – நாக சைதன்யா!

‘மாஸ்கோவின் காவேரி’ படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை சமந்தா, தனது நடிப்பு திறமையால் படிப்படியாக முன்னேறி தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகனும் நடிகருமான நாக சைதன்யாவை பல ஆண்டுகள் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார்.

பல கோடி ரூபாய் செலவில் மிகவும் ஆடம்பரமாக இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார். ’சமந்தா ரூத் பிரபு’ என்று இருந்த தனது சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான ’அக்கினேனி’யை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றினார்.

திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தா, அண்மையில் ’சமந்தா அக்கினேனி’ என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் மாற்றியது நாக சைதன்யா – சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற ஊகச்செய்தியைப் பரப்பியது.

இது குறித்து தெளிவான விளக்கம் எதையும் தெரிவிக்காமல் மவுனம் காத்துவந்த சமந்தாவும், நாக சைதன்யாவும் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிவிப்பில் தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்கள். “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நட்பாகப் பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது எங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்புக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்களின் அந்த பதிவு:-

0a1b