சட்டென்று மாறுது வானிலை – விமர்சனம்

நடிப்பு: ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், கருடா ராம், அஜய், சரவண சுப்பையா, சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பாபு விஜய்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன்

படத்தொகுப்பு: டார்லிங் ரிச்சர்டுசன்

இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

கலை: கண்ணன் எஸ்

ஸ்டண்ட்: முரளி ஜி

நடனம்: சாண்டி

தயாரிப்பு: பிவி ஃபிரேம்ஸ்

வழங்கல்: பிவி ஷர்மிளா

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

2008ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் இடம் பெற்ற –
“நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை”
-என்று தொடங்கும் அருமையான, பிரசித்தி பெற்ற பாடலில் இருந்து இப்படத்துக்கான தலைப்பை எடுத்திருக்கிறார்கள். இத்தலைப்பைப் போலவே இப்படத்தையும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் எடுத்திருக்கிறார்களா? பார்ப்போம்…

ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார் நாயகன் ராமச்சந்திரன் என்ற சந்துரு (ஜெய்). அறை முழுக்க நடிகர் விஜய் படங்களை ஒட்டி வைத்திருக்கும் அளவுக்கு தீவிர விஜய் ரசிகர் அவர். சிறு வயதிலேயே அநாதையானவர், ஆதரவற்றோர் இல்லம் ஒன்றின் அரவணைப்பில் வளர்ந்து ஆளானவர். அந்த ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வந்த அதன் காப்பாளர் திடீரென இறந்துவிட, அந்த இல்லம் தொடர்ந்து இயங்குவதற்கு இப்போது சந்துரு தான் தன் சம்பாத்தியப் பணத்தைக் கொடுத்து உதவி வருகிறார்.

அமைச்சரின் மகள் நாயகி ஜானு என்ற ஜானகி (மீனாட்சி கோவிந்தராஜன்). ரூ.300 கோடி சொத்துள்ள அமைச்சரின் ஒரே வாரிசு. ஜானு மீது ஆசைப்படும் தன் கட்சித் தலைவருக்கு (சரவண சுப்பையா) அவரை இரண்டாம் தாரமாக கட்டிக்கொடுக்க முடிவு செய்கிறார் அமைச்சர். இந்த முடிவை எதிர்க்கும் தன் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளி கொன்றுவிட்டு, “விபத்து” என்று நாடகமாடுகிறார். இது தெரிந்த ஜானு, தன் வீட்டைவிட்டு வெளியேறி, மகளிர் விடுதி ஒன்றில் தங்கி வாழ்ந்து வருகிறார். அவரை அமைச்சர் வலைவீசி தேடி வருகிறார்.

இதனிடையே, ஜானு பிடிவாதமாக மறுத்தும், அவரது சொத்துக்களுக்காக அவரது முன்னாள் பாய் ஃபிரண்டு அவரை திருமணம் செய்ய முயற்சிக்கிறார்.

இந்நிலையில், நாயகி ஜானுவை பப் ஒன்றில் முதன்முதலாகப் பார்க்கிறார் நாயகன் சந்துரு. ஜானுவின் பின்னணி எதுவும் தெரியாமல், பார்த்ததுமே காதல் கொள்கிறார். காதலை சந்துரு சொன்னதுமே ஜானு ஏற்றுக்கொள்ள, இருவரும் ’சட்டென்று’ ரகசிய திருமணம் செய்துகொள்கிறார்கள்.

இந்த நேரத்தில் சந்துருவுக்கு வேலை போய்விடுகிறது. நண்பரின் (யோகி பாபு) தயவில் ஒரு ரவுடியிடம் வட்டிக்குக் கடனாக பணம் வாங்கி, அதில் வாடகைக்கு தனி வீடு பிடித்து வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள் சந்துரு – ஜானு தம்பதியர். அப்படியே ஜாலியாக ஹனிமூனுக்கு கொடைக்கானல் கிளம்பி விடுகிறார்கள்.

இவர்கள் தேனிலவுக்குப் போய் தங்கும் கொடைக்கானல் ரிசார்ட்டின் அதிபர் ராஜு (கருடா ராம்). நாடு முழுவதும் பல சுற்றுலாத் தலங்களில் ஏராளமான ரிசார்ட்டுகள் வைத்திருப்பவர். இவர் தன்னுடைய ரிசார்ட்டுக்கு வந்து தங்கும் இளம் ஜோடிகளின் கிளுகிளுப்பான படுக்கையறைக் காட்சிகளை ரகசியமாக வீடியோ எடுத்து, சர்வதேச ஆபாச இணையதளங்களுக்கு விற்று, கோடி கோடியாக வருமானம் ஈட்டி வருகிறார். இதை அறிந்து பதறும் சந்துரு, அந்த கொடூரனின் வலையில் சிக்கும் ஒரு அப்பாவி ஜோடியை காப்பாற்ற முயற்சிக்கிறார்.

இப்படியாக, ஒரு பக்கம் ரிசார்ட்டின் அதிபர் துரத்த, மறுபக்கம் ஜானுவின் அப்பாவான அமைச்சர் துரத்த, இன்னொரு பக்கம் வட்டிக்குப் பணம் கொடுத்த ரவுடி துரத்த, மற்றொரு பக்கம் ஜானுவின் முன்னாள் பாய் ஃபிரண்டு துரத்த… இத்தனை துரத்தல்களால் சந்துரு திண்டாடுகிறார்.

இந்நிலையில், சந்துருவுக்கும் அவரது காதல் மனைவி ஜானுவுக்கும் ஈகோ மோதல் ஏற்படுகிறது. ஜானு திடீரென காணாமல் போகிறார். அவர் கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரை சந்துரு தான் கொன்றுவிட்டதாகவும் பழி சுமத்தப்படுகிறது.

அதன்பின் என்ன நடந்தது? இவ்வளவு பிரச்சனைகளிலிருந்தும் சந்துரு தப்பித்தாரா? ஜானு என்ன ஆனார்? இறுதியில் அவரும் சந்துருவும் இணைந்தார்களா? என்பன போன்ற கேள்விகளுக்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் விடை அளிக்கிறது ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாகவும், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராகவும் ராமச்சந்திரன் என்ற சந்துரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜெய். விஜய் ஸ்டைலை ஆங்காங்கே இமிட்டேட் செய்த போதிலும், காதல், ரொமான்ஸ், ஆக்ரோஷம், அடிதடி, சென்டிமெண்ட் ஆகிய அனைத்து அம்சங்களிலும் தனது பாணியில் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

நாயகியாக, அமைச்சரின் மகள் ஜானு என்ற ஜானகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அதே வேளை, தன் கணவனுடனான படுக்கையறைக் காட்சிகளில் நெருக்கமாக நடித்து இளசுகளை சூடேற்றியிருக்கிறார்.

ரிசார்ட் அதிபர் ராஜுவாக கருடா ராம் நடித்திருக்கிறார். வழக்கம் போல் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். போலீஸ் அதிகாரியாக வரும் ரிச்சர்ட் எம்.நாதன் இயல்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு, அஜய், சரவண சுப்பையா, சத்யன், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாபு விஜய். பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள இவர், தன் குருவைப் போலவே காதல், செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், திரில்லர், சமூகக்கருத்து ஆகியவற்றை சரிவிகிதத்தில் கமர்ஷியல் அம்சங்களுடன் கலந்து, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்கள் ரசிக்கத் தக்க வகையில் படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார்.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை, ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு, டார்லிங் ரிச்சர்டுசன்னின் படத்தொகுப்பு, எஸ்.கண்ணனின் கலை இயக்கம், ஜி.முரளியின் ஸ்டண்ட் அமைப்பு, சாண்டியின் நடன அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்திற்கும், நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘சட்டென்று மாறுது வானிலை’ – காட்சிக்குக் காட்சி ஆர்வத்தைத் தூண்டும் படம்; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5