ரூ.10 கோடி விவகாரம்: ஞானவேல் ராஜா புகாருக்கு கமல் மறுப்பு

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘உத்தம வில்லன்’. லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த்து. இந்தப் பட வெளியீட்டின்போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில்,  ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின்போது கொடுத்துவிடுவது என்ற அடிப்படையில் ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் கமல் வாங்கியிருப்பதாகவும், அது குறித்து இப்போது வரை எந்தவொரு பதிலுமே கூறவில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார் ஞானவேல்ராஜா.

 இந்த புகார் தொடர்பாக கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளியான நேரத்தில் ஞானவேல்ராஜா, கமலுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாகப் பரப்பப்படும் வதந்திகளை ராஜ்கமல் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. உண்மைக்கு முற்றிலும் புறம்பான இவ்வதந்திகளைச் சொந்த காரணங்களுக்காகச் சிலர் பரப்புகின்றனர்.

ஞானவேல்ராஜா கமலுக்குப் பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய். ஒரு ரூபாய் கூட அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. சுமார் பத்து நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக குழு உறுப்பினர் சதீஷ்குமார் எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டார்.

திருப்பதி பிரதர்ஸ் மீடியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கமல் தேதிகள் தொடர்பாக எங்கள் நிறுவனம் அவர்களுக்கு 2015-ல் அனுப்பிய கடிதம் தொடர்பாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

2015 மே மாதத்தில் திருப்பதி பிரதர்ஸ் கதை ஒன்று குறித்து ஆலோசனை செய்வதற்காக கமல் தேதிகளை ராஜ்கமல் நிறுவனம் கொடுத்திருந்தது. ஆனால் அது குறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இன்று வரை எங்கள் நிறுவனத்தை மேலும் தொடர்பு கொள்ளவில்லை.

ராஜ்கமல் பிலிம்ஸுக்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் மட்டுமே ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின்படி, ராஜ்கமல் பிலிம்ஸ் ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தின் முதல் பதிவை, திருப்பதி பிரதர்ஸ் ஒப்படைத்துவிட்டது.,

ஞானவேல்ராஜாவுக்கும் கமலுக்கும் தனிப்பட்ட வகையில் எந்த விதமான ஒப்பந்தமும் கிடையாது. எனவே, படத்தை வெளியிடும் பொருட்டு ஞானவேல்ராஜா, கமலுக்குப் பணம் கொடுத்தார் என்று கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.

கமலின் மதிப்பைக் கெடுப்பதற்காகவே இவ்வதந்திகள் பரப்பப்படுகின்றன. கமலின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்டரீதியாக எதிர்கொள்ள ராஜ்கமல் நிறுவனம் தயாராகி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.