தனி தீர்மானம் நிறைவேறிய சில மணி நேரத்திற்குள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல்!

“ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிருவாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம்.

மேலும், பொது வெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்தும் நாம் இங்கு குறிப்பிட்டிருந்தோம். இந்தச் சூழ்நிலையில், இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் ஒரு நல்விளைவாக, இன்று மாலை ஆளுநர், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

மேலும், இந்தச் சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பேரவைத் தலைவர் மூலமாக இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.