“பிரியதர்ஷனுடனான திருமணம் அதிகாரபூர்வமாக ரத்து”: நடிகை லிஸ்ஸி நன்றி!

மலையாள நடிகையான லிஸ்ஸி லட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள்.

திருமணமாகி 24 ஆண்டுகளான பின்னர், இந்த தம்பதியர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய விரும்புவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பின்னரும், சொத்து பங்கீடு செய்துகொள்வதில் பிரச்சனை, போலீசில் புகார், ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு என இழுபறி நிலை நீடித்து வந்தது.

0a1h

தற்போது அனைத்தும் சுமுகமாக முடிவடைந்ததை அடுத்து, சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று இருவருக்கும் விவாகரத்து வழங்கியது. இதனால் பிரியதர்ஷன் – லிஸ்ஸி லட்சுமி மணவாழ்க்கை அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

இது குறித்து லிஸ்ஸி லட்சுமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

இன்று திரு.பிரியதர்ஷன் உடனான எனது விவாகம் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இன்று சென்னையில் நாங்கள் இருவரும் அதற்கான அதிகாரபூர்வ படிவங்களில் கையெழுத்திட்டுவிட்டோம்.

விவாகரத்திற்க்காக விண்ணப்பித்துவிட்டு நான் காத்திருந்த காலம் எனக்கு மிகவும் சோதனையாக அமைந்தது.

சமீப காலங்களில் ஹிரித்திக் ரோஷன் – சுசேன், திலீப் – மஞ்சு, விஜய் – அமலா பால் ஆகியோர் விவாகரத்திற்கு விண்ணப்பித்ததாக வந்த தகவல்கள் அறிந்து நான் அவர்களுக்காக பெரிதும் வருந்தியிருக்கிறேன். அது போன்ற நிகழ்வுகள் அவர்களுக்கும் மன வருத்தத்தையே அளித்திருக்கும். இருந்தும், அவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மரியாதையளித்தே பிரிந்தனர்.

ஆனால், எனது நிலையோ இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் தலையிடும் வரை என்னை கடுமையாக காட்டுமிராண்டித்தனத்துடனேயே அணுகினர். எங்கள் விவாகரத்தே, எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து விட்டதாக கருதுகிறேன்.

இத்தருணத்தில், இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலையில், எந்தவித எதிர்பார்ப்புமின்றி என்னுடன் இருந்த வழக்கறிஞர்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த ஊடக நண்பர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். என் இரு குழந்தைகளின் அன்பிற்கும், பாசத்திற்கும் என்றும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இவை அனைத்தையும் தாண்டி எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.

இவ்வாறு லிஸ்ஸி லட்சுமி கூறியுள்ளார்.