“போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்!” – இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

கிரீன் சிக்னல் வழங்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் பாடல்கள்  வெளியீட்டு விழா சென்னை  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது, பாடல்களை கவிஞர்  வைரமுத்து வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக்கொண்டார்.

விழாவில் இயக்குநரும், இப்படத்தின் கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன்  பேசியதாவது:

நான் 40 நாட்களுக்கு முன்பு, இவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டும்  என்று கவிஞர் வைரமுத்துவை  கேட்டபோது, ‘விழா எப்போது?’ என்றவர், ‘எங்கிருந்தாலும் வருவேன்’ என்றார். அவருக்கு நன்றி. காதலா, கோபமா, வீரமா, சமூகச் சிந்தனையா, மண் வாசனையா… எனதயும் வித்தியாசமான முறையில் எழுதுபவர் அவர்.

உலகமே வியக்கும் இயக்குனர் ஷங்கருக்கு.  மெசேஜ் தான் அனுப்பினேன். உறுதியாக வருவேன் என்றார். அவருக்கு நன்றி. அவர் என்னிடம் புத்திசாலித்தனமாக இருந்தவர் .அதனால் தான் என்னுடன் 17 படங்களில் பணியாற்ற முடிந்தது. இங்கே இருக்கும் இயக்குனர் ராஜேஷ், பொன்ராம் ஆகியோருக்கும் நன்றி.

இந்த படத்தின் இயக்குனர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒருநாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப்  படிக்கக் கொடுத்தார். இரவே படித்துவிட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும் ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய் பார்த்தேன். அவரது நடை, உடை, பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.

இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால்கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும். போராட வேண்டாம் என்றால் எப்படி.? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்திருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டுக் கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும்.

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசினார்.

இயக்குநர் ஷங்கர் பேசும்போது “இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன்.

எனக்கும் அப்படி ஆசை இருந்தது. இவர் கத்தி எடுக்காத ‘இந்தியன்’. வயசான ‘அந்நியன்’ அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக்கூட நினைத்தேன். எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்” என்றார்.