ஜெயலலிதா உடல்நலம் பற்றி கேட்டறிய கருணாநிதி அப்போலோ செல்வது எப்போது?

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 22 நாட்களாக, சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த 8ஆம் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், தி.மு.க. பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று, மருத்துவர்களையும், அ.தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் நேற்று (13ஆம் தேதி, வியாழன்) இரவு 7.30 மணி அளவில் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனை சந்தித்து, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார். ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவர் வாழ்த்தினார்.

அடுத்து, ராசாத்தி அம்மாளின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி, ஜெயலலிதாவின் நலம் விசாரிக்க அப்போலோ மருத்துவமனைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. அப்போது கனிமொழியுடன் சேர்ந்து சென்றோ, அல்லது அவருக்குப் பிறகோ கருணாநிதி அப்போலோ சென்று, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிவார் என தெரிகிறது.

ரோசய்யா

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா இன்று மாலை சென்னை வந்து, நேராக அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரோசய்யா, “மருத்துவர்களையும், அமைச்சர்களையும் சந்தித்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஜெயலலிதாவை நான் சந்திக்கவில்லை. அவர் பூரண நலம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்” என்றார்.