ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த பேச்சுவார்த்தை!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 25-ம் தேதியுடன் முடிகிறது. அதற்கு முன்னர் புதிய குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக அறிவிக்கும் வேட்பாளரைத் தோற்கடிக்க பொது வேட்பாளரைத் தேர்தலில் நிறுத்தலாம் என்று எதிர்க்கட்சியினர் சிலர் கூறி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் சரத் யாதவ், சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இது குறித்து சரத் யாதவ் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தலிலும், டெல்லியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக அல்லாத வாக்குகள் பிரிந்தன. அதனால்தான் பாஜக.வால் வெற்றி பெற முடிந்துள்ளது. உத்தரபிரதேச தேர்தலில் 403 இடங்களில் 312 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. ஆனால், பாஜக பெற்ற வாக்குகளை விட, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸின் மொத்த வாக்குகள் அதிகம்.

எனவே, இந்த நாட்டை பாஜக முழுவதும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க வேண்டிய அவசியம் ஏற் பட்டுள்ளது. அதற்கு எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதற்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தால், பாஜக.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதற்கு ஒரு தொடக்கமாக இருக்கும்.

இந்த கருத்தின்படி எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லா எதிர்க் கட்சியினரையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு சரத்யாதவ் கூறினார்.

‘‘எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யாரை நிறுத்த திட்டம்?’’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சரத் யாதவ் பதில் அளிக்கும்போது, ‘‘முதலில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதன்பிறகுதான் வேட்பாளர் யார் என்பது குறித்து பரிசீலிக்க முடியும்’’ என்றார். ஆனால், பொது வேட்பாளராக சரத் யாதவை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் என்று கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.