பா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்: ‘சாதிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள்’ – ட்ரெய்லர்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித், தற்போது மிக முக்கியமான ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். ‘Beware Of castes- Mirchpur’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆவணப்படத்தை ஜெயக்குமார் இயக்கியுள்ளார். இதன் முன்னோட்டம் (ட்ரெய்லர்) யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் உள்ளது மிர்ச்பூர் கிராமம். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இந்த கிராமத்தில் மிகப் பெரிய கலவரம் நடந்தது. அங்கே பால்மீகி காலனியில் இருந்த தலித்துகளின் வீடுகள் ஜாட் சாதியினரால் கொளுத்தப்பட்டன. இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர்.

இங்கு அடிக்கடி சாதிய வன்முறைகள் நிகழ்ந்தாலும், இந்த அளவிற்கு பெரிதாய் ஒரு கலவரம் அப்பொழுதுதான் நடந்தது. குடிபோதையில் வண்டியில் வந்த இரு ஜாட் நபர்களைப் பார்த்து பால்மீகி காலனியில் உள்ள தலித் ஒருவரின் நாய் குரைத்தது தான் இந்த கலவரத்திற்கான தொடக்கப்புள்ளி. அதன்பிறகு நடந்த சமாதானக் கூட்டம் கலவரத்தில் போய் முடிந்தது. அக்கலவரத்தில் 70 வயது முதியவரான தரா சந்த் என்பவரும், அவரது 18 வயது மகள் சுமனும் உயிரோடு எரிக்கப்பட்டனர். இதில் சுமன் போலியோவால் பாதிக்கப்பட்டவர்.

இக்கலவரத்திற்குப் பின் கிராமத்தை விட்டு வெளியேறிய தலித்துகள் 6 ஆண்டுகள் கழித்தும் ஊர் திரும்பவில்லை. தலித் செயல்பாட்டாளரான வேத் பால் தன்வரின் 3.5 ஏக்கர் இடத்தில்தான் இன்னமும் தலித் மக்கள் டென்ட் போட்டு தங்கியுள்ளனர்.

இந்த கலவரத்திற்கு பின் ஹரியானா அரசு நீதிபதி இக்பால் சிங் தலைமையில் தனிநபர் கமிஷனை அமைத்தது. காவலர்களின் மெத்தனப்போக்கே இக்கலவரத்திற்கு காரணம் என 2014ஆம் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், இந்த கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 97 பேரில் 15 பேர் மட்டும் தண்டனை பெற்றுள்ளனர். அதன்பின் இந்தக் கலவரம் குறித்த செய்திகள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தான் இந்த கலவரம் தொடர்பான ‘’Beware Of castes- Mirchpur’ என்ற ஆவணப்படத்தை, ஜெயக்குமார் இயக்கத்தில் பா.ரஞ்சித் தற்போது தயாரித்துள்ளார்.

மிர்ச்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலையைக் காட்சிகள் மூலம் முன்னோட்டத்தில் சொல்கின்றனர். அதேபோல் மிர்ச்பூர் கிராமத்தில் கைவிடப்பட்ட தலித் குடியிருப்புகளுக்குள்ளும் கேமரா சென்று வருகிறது.

நாயின் மூலமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட அந்த கலவரம், நாயின் குரைப்பின் மூலமே இந்த முன்னோட்டத்தில் கேள்விகளைக் கேட்கிறது. இரண்டேகால் நிமிடம் ஓடக்கூடிய இந்த முன்னோட்டத்தில், தலித் பெண் ஒருவர் பேசும் மொழி புரியாவிட்டாலும், “நாங்களெல்லாம் மனிதர்கள் கிடையாதா?” என்று கேட்பது உங்களுக்குள் அதிர்வலைகளை எழுப்பும்.

6 வருடத்துக்கு முன்பு நடந்த கலவரத்தை பற்றி பலரும் மறந்திருக்கும் சூழலில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டம் அதனை நினைவுக்கு கொண்டு வருகிறது. எனவே இந்த ஆவணப்படம் பல அதிர்ச்சிகரமான செய்திகளையும், தற்போதைய உண்மை நிலவரங்களையும் நம் முன்னே கொண்டு வரும் என நம்பலாம்.

‘Beware Of castes- Mirchpur’ ஆவணப்படத்தின் ட்ரெய்லர்:-

https://youtu.be/prDufPhxqsc