கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்: ‘லாக்கப்’ இயக்குனர் இயக்குகிறார்!

‘கோடம்பாக்கத்தின் டஸ்கி பியூட்டி’ என போற்றப்படும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விருது –  விருந்து இரண்டையும் படைக்கும் வித்தியாசமான  கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பல திருப்பங்கள்  நகைச்சுவை, சண்டை காட்சிகள் நிறைந்த பெயரிடப்படாத புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ், ஹம்சினி என்டர்டைன்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரிக்கின்றன. இதனை லாக்கப் திரைப்படத்தின் இயக்குநர் SG. சார்லஸ் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருடன் லட்சுமி பிரியா, சுனில் ரெட்டி, கருணாகரன், மைம் கோபி, தீபா ஷங்கர், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

பாலமுருகன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு கலை இயக்கத்தை ரவி கவனிக்கிறார். படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை வென்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.