அதிமுக தேர்தல் அறிக்கை: வாக்காளர்களுக்கு ‘எலும்புத் துண்டு’ வீசிய ஜெயா!

“அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி வழங்கப்படும். அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும். மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட ‘எலும்புத் துண்டு’களை வாக்காளர்களுக்கு தேர்தல் அறிக்கை மூலம் வீசியிருக்கிறது அதிமுக.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக பொதுச்செயலாளர்  ஜெயலலிதா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

அதிமுக கொள்கை பரப்புச் செயலாளாரும், எம்.பி.யுமான தம்பிதுரை தேர்தல் அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். அவருடன் விவசாயி ஒருவரும், இல்லத்தரசி ஒருவரும் தேர்தல் அறிக்கையைப் பெற்றுக்கொண்டனர்.

தமிழகம், புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

* விவசாயிகளுக்கு அனைத்துக் கடன்களும் தள்ளுபடி.

* 2016- 2021 வரையிலான 5 ஆண்டு காலத்தில் ரூ.40,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.

* விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.

* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.

* அவிநாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்படும்.

* மீனவர் நிவாரணத் தொகை ரூ.5 ஆயிரமாக வழங்கப்படும்.

* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.

* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.

* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்.

* மின்பதனப் பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்.

* முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* உள்நாட்டு மீன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

* மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி அமைத்துத் தரப்படும்.

* வீடுகளில் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணமில்லை.

* மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.

* வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

* மகளிருக்கு ஸ்கூட்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படும்.

* அம்மா பேங்கிங் கார்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.

* பொங்கல் பண்டிகைக்கு கோ-ஆப்டெக்ஸில் துணி வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்.

* தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும்.

* புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்.

* வழக்கறிஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும்.

* மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்படும்.

* கைத்தறி நெசவாளார்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்துக்கு கட்டணம் கிடையாது.

* மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்.

* அனைவருக்கும் விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கப்படும்.

* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கைபேசி வழங்கப்படும்.