ஜல்லிக்கட்டு தடையை ஆதரிக்கும் விஷாலுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டு தடைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது உருவ பொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்கள் நடத்துவோம்” என தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளர் டி.ராஜேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலங்குகள் நல அமைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வசித்துக்கொண்டு, தமிழ் படங்களில் நடித்துச் சம்பாதிக்கும் விஷால், தமிழ் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் அந்த கருத்தைக் கூறியது, தமிழ் சமூகத்தை இழிவுபடுத்தும் செயல். அவர் தனது கருத்தை திரும்பப் பெறுவதுடன், மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில், விஷாலின் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ராஜேஷிடம் கேட்டபோது, “ஜல்லிக்கட்டு தடை தொடர்பான தனது கருத்துக்கு நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், அவரது உருவ பொம்மை எரிப்பு உட்பட தொடர் போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.